ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் ‘பருந்துப் பார்வை’ இதழ் ஆசிரியரும் நடிகருமான சி .எம் .துரை ஆனந்த் தயாரிப்பில் நடிகர் முருகா அசோக் ,காயத்ரி நடிப்பில் ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விழித்தெழு ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் சி.எம்.துரைஆனந்த் பேசுகையில், ‘‘தொழிலதிபர் தாம் கண்ணன் அவர்கள் இந்திய நகரங்களில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஐடி தொழில் செய்பவர். அவரிடம் நான்காயிரம் பேர் வேலை செய்கிறார்கள். நான் பல்லாண்டுகளாகத் திரையுலகத் தொடர்பில் இருக்கிறேன் .பலர் கதை சொல்வார்கள். ஆனால் எடுப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை வராது. ஆனால் இந்த இயக்குநர் தமிழ்ச்செல்வன் சொன்ன மாதிரியே படத்தை எடுத்துள்ளார். இயக்குநர் கதையை என்னிடம் சொன்னபோது ஆறு மாதத்தில் எடுத்து முடிக்க முடியுமா? என்று கேட்டேன். முடியும் என்றார். அதன்படி ஆறே மாதத்தில் நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டோம். பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

கதையின் நாயகன் அசோக் பேசும்போது, ‘‘இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்த போது இதைச் சரியானபடி அழுத்தமாகச் சொன்னால் படம் நன்றாக வரும் என்று நம்பினேன். இப்போது தான் காட்சிகளைப் பார்க்கிறேன். நன்றாக எடுத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர் அப்பகுதி மக்களிடம் சம்பாதித்துள்ள அன்பையும் நற்பெயரையும் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அது எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் வராது. ஒரு பேனாவுக்குள்ள சக்தி எந்த தோட்டாவுக்கும் இல்லை. அதை இந்தப் படம் பிரதிபலிக்கிறது” என்றார்.

படத்தின் நாயகி காயத்ரி பேசும்போது, ‘‘இயக்குநர் தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் முன்பு ஒரு படத்தில் நடித்து இருந்தேன். நீண்டநாள் கழித்து என்னை நினைவு வைத்திருந்து படத்தில் நடிக்க அழைத்தார். நான் இதில் போலீஸ் ஆக நடித்துள்ளேன். நான் வாய்ப்பு தேடி பல இடங்களுக்குச் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் போலீஸ்காரர் பாத்திரம் என்றால் இவ்வளவு குள்ளமான இவரால் போலீசாக நடிக்க முடியாது என்று அவநம்பிக்கை கொள்வார்கள். ஆனால் இந்த படத்தில் நான் போலீசாக நடித்துள்ளது பெருமைக்குரியது. என்னுடைய நண்பர்களிடம் சொன்ன போது நம்பவில்லை. அதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி’’ என்றார்.

படத்தின் இயக்குநர் ஏ. தமிழ்ச்செல்வன் பேசும்போது, ‘‘படக்குழுவினர் நாங்கள் ஒரு குடும்பம் போலவே இருந்தோம். நேரம் காலம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் அனைவரும் பணியாற்றி ஒத்துழைத்துக் கொடுத்தார்கள் .அதற்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மொபைல் என்ற விஷயத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்தாலும் இணையதள மோசடிகள் போன்ற கெட்ட விஷயங்களும் நிறைய இருக்கின்றன. அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தான் இந்தப் படம் உருவாகி உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, ‘‘இங்கே கதாநாயகியாக நடித்த காயத்ரி பேசியபோது அபிநயம் பிடித்துப் பேசியது போல் இருந்தது. அப்போது எனக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில்ஜில் ரமாமணியாக வந்த மனோரமா நினைவுக்கு வந்தார். இங்கே உள்ளவர்கள் தமிழ் உணர்வு மிக்கவர்கள் அவர்களின் பெயரைப் பார்த்தாலே தெரிகிறது. தமிழா விழித்தெழு என்ற பாடல் வருகிறது. தமிழன் இன்று விழிப்பாக இருக்க வேண்டிய காலம் என்று சொல்வேன். ஏனென்றால் தமிழை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாடு என்றாலும் தமிழகம் என்றாலும் ஒன்று தானே? தமிழகம் என்றாலும் வாழ்க என்று சொல்ல வேண்டும் தமிழ்நாடு என்றாலும் வாழ்க என்றுதான் சொல்ல வேண்டும். தமிழனுக்கு இரண்டும் ஒன்றுதான்’’ என்றார்.”

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசகையில், ‘‘இன்று செல்போன் பிரச்சினையை விட சாராயக்கடை பிரச்சினை தான் பெரிதாக உள்ளது. தெருவுக்கு தெரு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று விவசாயத்தை மறந்து விட்டோம். ஜல்லிக்கட்டுக்குப் போராடியது போல் விவசாயத்திற்காக நாம் போராட வேண்டும்..தமிழ் மண் வீரம் செறிந்த மண். எவனையும் எதிர்த்த அடிக்கக்கூடிய தைரியம் உள்ளவர்கள் தமிழர்கள்.இந்தப் பட விழாவிற்கு வந்துள்ள இவர்களைப் பார்த்தால் குடும்ப விழாபோல் உணர்கிறேன்’’ என்றார்.

விழாவில் இயக்குநர்கள் டென்னிஸ் மஞ்சுநாத் ,சக்தி சரோஜ்குமார்ஒளிப்பதிவாளர் இனியன் கதிரவன், சம்பத்குமார்,இசையமைப்பாளர் நல்ல தம்பி, பாடலாசிரியர்கள் முகிலன், செல்வராஜ்,இயக்குநர் சரோஜினி, ஸ்டண்ட் இயக்குநர் ஹரி முருகன், நடிகர்கள் தீபக், ஹரிஹரன், காந்தராஜ், திருக்குறளினி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

rcinemaசினி நிகழ்வுகள்ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் 'பருந்துப் பார்வை' இதழ் ஆசிரியரும் நடிகருமான சி .எம் .துரை ஆனந்த் தயாரிப்பில் நடிகர் முருகா அசோக் ,காயத்ரி நடிப்பில் ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘விழித்தெழு 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் சி.எம்.துரைஆனந்த் பேசுகையில், ‘‘தொழிலதிபர் தாம் கண்ணன் அவர்கள் இந்திய நகரங்களில்...