ஒரு காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு அரண்மனையில் வசித்து வருகின்றனர் தமன்னா மற்றும் சந்தோஷ் பிரதாப். இவர்களுக்கு ஒரு மகன் & ஒரு மகள் உள்ளனர்..
ஒரு நாள் அதிகாலையில் வாக்கிங் செய்யும் போது சந்தோஷ் பிரதாப் உடலில் ஓர் தீய சக்தி நுழைந்து விடுகிறது. அது தனது மகளை கொல்ல திட்டமிடுவதை அறிந்து கொள்கிறார் தமன்னா.
இதனையடுத்து தீய சக்தியிடம் இருந்து தன் மகளை காப்பாற்ற போராடுகிறார் தமன்னா. மேலும் சந்தோஷை அந்த தீய சக்தி கொன்று விடுகிறது.
கணவர் இறந்த துக்கத்தால் தமன்னா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணை பதிவு செய்கிறது.
இதனை அறிந்து கொண்ட சுந்தர் சி.. தன் தங்கை தமன்னாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக எண்ணி அந்த அரண்மனைக்கு வருகிறார்.
அந்த அரண்மனையில் அதன் பின்னர் நடக்கும் மர்மங்கள் என்ன? தங்கை மகளை காப்பாற்றினாரா? என்பதுதான் படத்தில் மீதிக்கதை.
அரண்மனை படங்களில் இருக்கும் டெம்ப்லேட் போலவே தீய சக்தி இடம் இருந்து தன் குடும்பத்தாரை காப்பாற்றுகிறார் சுந்தர் சி. ஆனால் இதை கொஞ்சம் வித்தியாசமாக கையாண்டிருக்கிறார். முக்கியமாக இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடி இல்லை.. பாடல்களும் இல்லை.
தமன்னா தாயாக அழகான நடிப்பிலும் பேயாக மிரட்டல் நடிப்பையும் கொடுத்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் நம்மையும் அழ வைத்து விடுகிறார். முக்கியமாக தன் கணவரிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற அவர் படும் அந்த ஒரு காட்சி தமன்னாவின் நடிப்பிற்கு சான்று.
மற்றொரு நாயகி ராசி கண்ணாவுக்கு பெரிதாக வேலை இல்லை.. ஆனால் கவர்ச்சியாகவும் அழகாக வந்து செல்கிறார்.
விடிவி கணேஷ் யோகி பாபு கோவை சரளா மூவரின் காமெடி பக்காவாக களைக்கட்டியுள்ளது.. நிச்சயம் நீங்கள் சிரிக்காம இருக்க மாட்டீர்கள்..
சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார்… மற்ற நட்சத்திரங்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
முதலில் மெதுவாக நகரும் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு ஜெட் வேகத்தில் நகர்கிறது.. முக்கியமாக கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க காட்சிகளில் விறுவிறுப்பு கூடுகிறது.
கிளைமாக்ஸ் காட்சி-யின் போது அம்மன் மற்றும் தீய சக்திக்கு நடக்கும் போர் ரணகளம்.. கிராபிக்ஸ் காட்சிகள் வேற லெவல்.. பைட் சீன் மிரட்டல் ரகம்.
அதுபோல கிளைமாக்ஸ் அம்மன் பாடலில் குஷ்புவும் சிம்ரன் இணைந்து ஆடும் ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும்.
படம் முடிந்த பிறகு போடப்படும் அச்சச்சோ… பாடலுக்கு தமன்னா மற்றும் ராசி கண்ணா போடும் குத்தாட்டம் கோடை வெயிலில் கூட இளைஞர்களை சூடேற்றும்.
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.. முக்கியமாக குழந்தைகளை கவரும் வகையில் பேய் மிரட்டல் காட்சிகள் இருப்பதனால் இந்த படத்தை குழந்தைகள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.
அதற்கு ஏற்றார் போல் குழந்தைகளை வைத்து கதையை நகர்த்தி இருப்பது சுந்தர் சி யின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
இதற்கு முன்பு வந்த அரண்மனை 3 விட இந்த அரண்மனை 4 நிச்சயம் பட்டய கிளப்பும்.. கோடை விடுமுறையில் குழந்தைகளை மட்டுமல்ல குடும்பத்தையும் இந்த படம் மகிழ்ச்சி அடையச் செய்யும் என உறுதியாக சொல்லலாம்.