‘சிட்டிசன்’ டைரக்டர் சரவணசுப்பையா ‘மீண்டும்’ படம் மூலம் மீண்டும் நிலைத்து நிற்பார்…’ பட விழாவில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் புகழாரம்
ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் நாயகனாக நடிக்கும் படம் ‘மீண்டும்.’ கதை திரைக்கதை வசனம் எழுதி சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட ‘சிட்டிசன்’ வெற்றிப் படத்தை இயக்கியவர்.
நாயகன்-நாயகியாக கதிரவன்-அனகா நடிக்க, முக்கிய கேரக்டர்களில் பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா இருக்கிறார்கள்.
வைரமுத்து பாடல்கள் எழுத, நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு. ராஜா முகமது எடிட்டிங்கை கவனிக்க, சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார். நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார்.
பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார். தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.
இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள் படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,
படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் சென்னை பிரசாத் லேப்பில் நடந்தது. பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:
‘‘மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங் களா? சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய ‘சிட்டிசன்’ படம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமாவை பொழுதுபோக்காக எடுக்கிறோம் அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர் தான். சிட்டிசன் படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. 70. 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம் ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா ‘மீண்டும்’ படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். சிட்டிசன் இயக்குனராக மீண்டும் உங்களை தமிழ் சினிமா கொண்டு வந்து நிறுத்தும்.
படத்தில் ஹீரோவை கொடுமைப்படுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்பவனை சினிமா விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலி போல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறையாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன். செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ‘காதலா வீரமா’ என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக் கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் ‘நீ எப்படி தைரியமா பேசற’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டி உள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது.
நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
அனைவரையும் கலையால் வணங்குகிறேன் தமிழால் ஆராதிக்கிறேன். எனக்கு இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நேற்று முதலே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் சரவணன் சுப்பையா திருவள்ளூரில் நடந்த பட்டிமன்றத்தில் எனக்கு எதிரணியில் பேசினார் அன்றைக்கு அவர் மீது நான் கடும் கோபத்திலிருந்தேன். முரணான தகவலாக பேசுகிறாரே என்று எண்ணினேன். ஒருநாள் சந்திப்பில் அவர் உள்ளத்தில் நான் விழுந்திருக்கிறேன். நேற்று என்னை அழைத்த மாத்திரத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு கொடுத்தேன். அதேபோல் பி டி செல்வகுமார் ‘கலப்பை’ அமைப்பு மூலம் பல குடும்பங்களுக்கு உதவியவர். இந்த படத்தில் அனகாவின் நடிப்பும், கதிரவன் நடிப்பும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது, என்னுடைய எலும்பையே உருக்கி விட்டது. மீண்டும் படத்தின் கதை அமைப்பு சமூக பிரக்ஞை, சமகால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கிறார், சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் படம் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். ‘எல்கேஜி’ படத்தில் நான் நடித்தபிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். மீண்டும் படம் பெரிய வெற்றி படமாக அமையும்.’’
ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:
‘‘திரையுலகம் எப்போதுமே மிகப்பெரிய ரீச்சை கொண்டதாக இருக்கிறது. 23 ஆண்டுகள் பத்திரிகை மீடியாவில் கிடைத்ததை விட நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத்துடன் நடித்த பிறகு பெரிய வரவேற்பு கிடைத்தது. சினிமா அவ்வளவு பெரிய வலிமை கொண்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சி என்னவாகும் என்று பலர் கவலைப்பட்டதற்கு காரணம் திரையுலகம் அவரை பிரபலப்படுத்தி வைத்திருந்தது. அப்படிப்பட்ட வீரியம் திரையுலகுக்கு இருக்கிறது. அதனாலேயே சமூக கருத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைக்கு சினிமா எடுப்பது சவாலாகி விட்டது. சினிமாக்காரர்கள் எல்லாம் சமூக விஷயத்திலும் தலையிட ஆரம்பித்து விட்டார்கள்..
சினிமாவைப் பற்றி அரசியல்வாதிகள் நிறைய விமர்சனம் செய்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அரசியலுக்கு உள்ளே இவர்கள் நேரடியாக வருவதால் ஒரு கேரக்டருக்கு பெயர் வைப்பதற்கு கூட நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. மீண்டும் பட டிரைலர் பார்த்தபோது இது த்ரில்லர் படமா, சமூக பிரச்னையை பேசும் படமா என்று யோசித்தேன். சவாலான விஷயத்தை இதில் சரவணன் சுப்பையா கையாண்டிருக்கிறார். இது சரவண சுப்பையாவுக்கு ஒரு கம்பேக் ஆக, மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் மைல்கல்லாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.’’
இயக்குனர் ரவிமரியா பேசியதாவது:
‘‘தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் இன்றைக்கு ஆபத்பாந்தவராக இருக்கிறார்.. ஜெயில் படம் வெளிவரமுடியாத சூழல் இருந்தபோது அதை வெளிக்கொண்டு வர எல்லா உழைப்பும் தந்தவர். இந்த பட ஹீரோ கதிரவன் பற்றி சொல்லியாக வேண்டும் கிட்டத்தட்ட முழுநிர்வாணமாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். டிரைலரை பார்க்கும்போது கண்கலங்கி விட்டேன். அவருக்கு பெரிய இடம் சினிமாவில் காத்திருக்கிறது. அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு திருப்பதி லட்டு மாதிரி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களெல்லாம் மீண்டும் படத்தை பார்த்து இயக்குனர் சரவணன் சுபையாவை பாராட்டி விட்டார்கள். இந்த படம் ‘இரண்டு அப்பாக்கள் ஒரு அம்மா’ என்ற கதை அம்சம் கொண்டது. இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.’’
இயக்குனர் பேரரசு பேசியதாவது:
‘‘சினிமாவுக்கு பயங்கர சக்தி இருக்கிறது. யாரெல்லாம் சினிமாவை விமர்சித்தார்களோ அவர்களையெல்லாம் சினிமா அரவணைத்து விட்டது. சாலமன் பாப்பையா, ராஜா, திண்டுக்கல் லியோனி, பாண்டே அனைவரையும் சினிமா தனக்குள் இழுத்து விட்டது இவர்கள் எல்லாம் சினிமாவில் நடித்து விட்டார்கள். ’மீண்டும்’ திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பையாவை சுற்றி மிகபெரிய நட்பு வட்டமிருக்கும் திறமையான இயக்குனர். மீண்டும் படம் எப்போதோ வெளிவரவேண்டியது. என்ன காரணமோ தாமதமாகி விட்டது. இப்போது சினிமா சிக்கலில் இருக்கிறது முன்பு ரிலீஸுக்கு முன் பிரச்சனை வரும் இப்போது ரிலீஸுக்கு பிறகு பிரச்சினை வருகிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. 500, 600 படம் ரிலீஸாகாமல் இருக்கிறது. இதற்கெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கம் தான் தீர்வு காண வேண்டும். சினிமாவை வைத்து யார் யாரோ சம்பாதிக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்கு முதல் போட்டவர்கள் சம்பாதிக்க முடியவில்லை. பட டிரைலர் சூப்பராக இருக்கிறது. தரமாக இருக்கிறது. இந்த படம் மிக பெரிய வெற்றி அடையும்.’’
தயாரிப்பாளர் பி டி.செல்வகுமார்: பேசியதாவது:
சிறிய படங்கள் வெளியாவதற்கு நிறைய சிரமம், கஷ்டப்பட வேண்டி உள்ளது, பெரிய படங்களுக்கு பிரச்சினை இல்லை. சிட்டிசன் படம் மூலமாக அஜீத்துக்கு திரும்பி பார்க்கிற படத்தை தந்தவர் சரவணன் சுப்பையா. அவர் இயக்கி இருக்கும் படம் மீண்டும். சிட்டிசன் படத்தில் சரவணன் சுப்பையா எப்படிபேசப்பட்டாரோ அதுபோல் மீண்டும் படம் மூலம் பேசப்படுவார். ஹீரோ கதிரவன் நிறைய படம் எடுக்கலாம் என்ற எண்ணம் வைத்திருக்கிறார். மீண்டும் படத்துக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.’’
திண்டுக்கல் லியோனி பேசியதாவது:
‘‘சினிமாவில் இது எனது இரண்டாவது மேடை. முதல் மேடை போஸ் வெங்கட் இயக்கிய கன்னிமாடம் படம். சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரும் மீண்டும் எனது இரண்டாவது மேடை. சினிமாவில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது கங்கா கவுரி படத்தில் நான் நடித்தபோது எனக்கு தெரிந்தது. வேதனைப் படணும் என்று இயக்குனர் சொன்னார். அந்த ஒரு காட்சியில் நான் நடிப்பதற்கு மூன்றரை மணி நேரம் ஆனது. அன்றைக்கு தான் சினிமாவை விட்டேன். தண்டல் பாண்டியன் வேடத்தில் அதில் நடித்தேன். அதற்கு பிறகு தற்போது ஆலம்பனா படத்தில் இப்போது நடித்திருக்கிறேன்.
சரவணன் சுப்பையா இயக்கிய சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கு அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார். மாபெரும் உலக நடிகராக அந்த படம் அஜீத்தை மாற்றும் அளவுக்கு சரவணன் சுப்பையா அமைத்திருப்பார். அவருக்கு இப்படம் சிட்டிசன் போல் மீண்டும் ஒரு வெற்றிப் படமாக அமையும். இப்பட கதாநாயகன் கதிரவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். குடும்ப கதையம்சம், வெளிநாட்டு தரத்துடன் இணைந்து படத்தை கொடுத்திருக்கிறார் சரவணன் சுப்பையா. இசையும் மிக அற்புதமாக தந்திருக்கிறார். இயக்குனர் சரவணன் சுப்பையா மீண்டும் மீண்டும் இதுபோன்ற படம் தரவேண்டும் இப்படம் மக்கள் மீண்டும் பார்க்கும் வெற்றிப் படமாக அமையும். என்னை முதன்முதல் சினிமா மேடைக்கு அழைத்து வந்தவர் எஸ் ஏ.சந்திரசேகர். அவரால் தான் சென்னையை நான் முதன்முதலாக பார்த்தேன்.’’
ஹீரோ கதிரவன் பேசியதாவது:
‘‘திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத், ரங்கராஜ் பாண்டே, இயக்குனர் எஸ் ஏ சி சார் இவர்கள் எல்லாம் இங்கு வந்தது எனக்கு பெருமையாக இருக்கிரது. இவர்கள் எல்லோருக்கும் நான் ரசிகன் ஒரு ரசிகன் விழாவுக்கு நீங்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்கிறீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.’’
இயக்குனர் சரவணன் சுப்பையா பேசியதாவது:
‘‘இந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்த தயாரிப்பாளர் மணிகண்டனுக்கு நன்றி அவர் இல்லாவிட்டால் இப்படியொரு வாழ்க்கை கிடைத்திருக்காது. மிகப்பெரிய அர்ப்பணிப்பை நடிப்பில் அவர் கொடுத்திருக்கிறார். எனது இரண்டு கண்களாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசையப்பாளர்இருவரும் அவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசை ஆங்கில பட பாணியில் இருந்தாலும் முழுக்க முழுக்க இந்திய இசை தான் அமைத்திருக்கிறார். இந்த படம் வெளியிட பல இடத்தில் பேசிப் பார்த்தோம். இக்கட்டான சூழலில்தான் பி.டி.செல்வகுமார் கைகொடுத்தார். அவர் இல்லாவிட்டால் இந்த படம் வருமா என்பது தெரியாது.
இந்த விழாவுக்கு பாண்டே வந்திருக்கிறார். நான், நாஞ்சில் சம்பத்துடன் பட்டிமன்றத்தில் மோதியது உண்மைக்கு புறம்பான கருத்தை அப்போது சொல்லவில்லை. அவர் நம்பரை வாங்கி வைத்திருந்தேன். அவரை அழைத்தேன் அவரும் உடனே வருவதாக சொன்னார். திண்டுக்கல் லியோனி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பவர். நீ சிறந்த சிந்தனையாளன். இன்னொரு சிட்டிசன் கொடு என்றார். சரி என்றேன் . மிகவும் எளிமையானவர். அதேபோல் எஸ்.ஏ.சி,, பேரரசு, ரவிமரியா வந்திருக்கிறார்கள். ஸ்டான்லி, கேபிள் சங்கர், சுபா தர்ஷினி, தேன்மொழி இப்படத்தில் நடித்திருக் கிறார்கள். இந்த படத்தில் அற்புதமான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி என்னை ஊக்குவித்தார். முக்கியமாக ஒத்துழைப்பு கொடுத்த டைமண்ட் பாபு. அதேபோல் இடையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்த விஜய முரளி கெஸ்ட் அப்பியரன்ஸ் வந்து போனார் அவருக்கும் எனது நன்றி. ஆனால் டைமண்ட் பாபுவோட உதவி அளப்பரியது. அவருடன் பி.டி.செல்வகுமார் அசோசியேட் செய்து சிறப்பான விழாவாக இதை மாற்றிவிட்டார்கள். இந்த படத்தை பார்த்து என்னை கைதூக்கி விடுங்கள் வெற்றி பெற்றால் மிக நல்ல படங்களை தொடர்ந்து தருவேன்…’’ என்றார். .