சினி நிகழ்வுகள்

‘‘இந்த படத்துக்கு சர்வதேச விருது கிடைக்கும்…’’ -மட்டி படத்துக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் புகழாரம்

இந்தியாவிலேயே முதன்முறையாக மண் சாலை கார் பந்தயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘மட்டி’ படத்திற்குச் சர்வதேச அளவில் பல விருதுகள் கிடைக்கும் என தயாரிப்பாளரும், நடிகருமான கே .ராஜன் கூறினார்.
பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள மட்டி படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார்.
அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் நடித்திருக்கிறார்கள். கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ‘கே. ஜி. எப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை. ‘ராட்சசன்’ புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பு. படத்திற்கு தமிழில் ஆர்.பி.பாலா வசனம் எழுதியிருக்கிறார்.
வருகிற 10-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் மூத்த தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகை வனிதா விஜயகுமார், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், தமிழ்ப் பதிப்பிற்கு வசனம் எழுதியுள்ள ஆர். பி. பாலா, படத்தை இயக்கியிருக்கும் டாக்டர் பிரகபல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் வசனகர்த்தா ஆர். பி. பாலா பேசுகையில், ‘‘கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படத்தின் இயக்குநர் டாக்டர் பிரகபல் படப்பிடிப்பு தளங்களில் உயிரைப் பணயம் வைத்து பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இயக்குநராக இவர் அறிமுகமாகும் முதல் படத்திலேயே காட்சி அமைப்பு, அதன் படமாக்குவதற்கான ஒருங்கிணைப்பு எனத் தெளிவாக திட்டமிட்டுப் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். ‘கே ஜி எஃப்’ என்ற பிரமாண்ட வெற்றிப் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கான பின்னணி இசை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கப்பட்டு சென்னையில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தரமான படைப்பை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் நான்கு ஆண்டு காலம் கடினமாக உழைத்து, ‘மட்டி’யை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தின் வெற்றி, படத்தை இயக்கிய இயக்குநர் டாக்டர் பிரகபல் அவர்களை மட்டுமே சேரும்’’ என்றார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், ‘‘முதன்முதலாக தமிழ் படத்திற்கு இசை அமைத்திருக்கிறேன். தொழில் நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் விரும்பும் தரமான படப்பை வழங்க வேண்டும் என்று தான் பணியாற்றுவார்கள். டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் வழங்கிய பாராட்டு எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் என மூன்று மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மட்டும் ஒன்றரை ஆண்டுகாலம் உழைத்திருக்கிறோம். பத்துக்கும் மேற்பட்ட வடிவங்களில் பணியாற்றிய பிறகு தான் இசையின் இறுதி வடிவத்தை உறுதிப்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் பிரகபல் பேசுகையில், ‘‘மட்டி என்னுடைய முதல் படம். என் முதல் படத்தில் வித்தியாசமான கதையும், களமும் இடம் பெற வேண்டும் என விரும்பினேன். இதுவரை ‘மட் ரேஸ்’ எனப்படும் மண் சாலை கார் பந்தயம் தொடர்பாகத் திரைப்படம் வெளியாகவில்லை என்பதை அறிந்தேன். அதன் பிறகு தான் மட்டியின் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேடுவதற்கு ஓராண்டு காலம் செலவழித்தேன். நான் புதுமுக இயக்குநர் என்பதாலும், படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதாலும் என்னுடன் இணக்கமான தொழில் நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிறிது காலம் ஆனது. அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்களைத் தேடினேன். தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு ஆண்டு காலம் பயிற்சி கொடுத்த பிறகுதான் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்துச் சென்றேன்.
துணிச்சலும் சாகசமும் கலந்த கார் பந்தயக்கதை என்பதால் இதற்கான மன வலிமை கொண்ட நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன். தேசிய அளவில் மண் சாலை கார் பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறும். அங்கு படப்பிடிப்பு குழுவினருடன் சென்று காட்சிகளைப் படமாக்குவது குறித்து விவாதித்தோம். அதனால் ‘மட்டி’ தனிப்பட்ட கலைஞர் ஒருவரால் உருவானதல்ல. ஒட்டு மொத்த படக்குழுவினரின் திரைப்படம். ‘மட் ரேஸ்’ எனப்படும் கார் பந்தய காட்சிகளை மட்டும் விதவிதமான கோணங்களில் 32 மணிநேரம் படமாக்கி இருந்தோம். அனைத்தையும் பொறுமையாகப் பார்வையிட்டு, படத்திற்குத் தேவையான காட்சிகளை மட்டும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் எடுத்துக்கொண்டு படத்தொகுப்பு செய்துள்ளார்.
படத்தின் பின்னணி இசை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு பணி நெருக்கடிகள் இருந்தாலும், இசையமைப்பாளர் ரவியை, படப்பிடிப்புத் தளத்திற்கு வரவழைத்து, படப்பிடிப்பைப் பார்வையிடச் செய்தோம். ஒளிப்பதிவாளர், நடிகர்கள் இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், வசனகர்த்தா என ஒவ்வொருவரும் இப்படத்திற்காகத் தங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினார்கள். ரசிகர்களைத் திரையரங்குக்்கு வரவழைத்து வியப்பான அனுபவத்தை வழங்கும் படமாக மட்டி உருவாகி இருக்கிறது” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், ‘‘மட்டி படத்தின் டீசரை பார்த்த மிரட்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. இது போன்ற பிரம்மாண்டமான ,மிரட்டலான ஒரு படத்தின் டீசரைப் பார்த்து நீண்ட நாளாகி விட்டன. நான் சிறிய வயதில் 70 எம்எம் திரையில் ‘ஷோலே’ படத்தின் ட்ரைலரைப் பார்த்துப் பிரமித்தேன். அதேபோல் தமிழில் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிரைலரைப் பார்த்து வியந்தேன். அதன்பிறகு‘ மட்டி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துத்தான் மிரண்டேன்.
மட்டி என்றால் மண் என்றார்கள். இது மண் அல்ல வைரம், வைடூரியம், பிளாட்டினம்.. என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது போன்ற படங்கள்தான் அதிகம் வர வேண்டும். ஏனெனில் இது போன்ற பிரம்மாண்டமான படங்களை யாரும் ஓடிடி தளத்தில் பார்க்க விரும்ப மாட்டார்கள். இதனைத் திரையரங்கில் பார்த்தால் தான் மன திருப்தி கிடைக்கும். இது ஒரு ட்ரெண்ட் செட் படம். இதனை ஒரு சாதாரண படமாகக் கடந்து சென்று விட முடியாது. இது போன்ற படங்கள் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றியைப் பெறவேண்டும். எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ‘‘மட்டி படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்தேன். பிரமித்துப் போனேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அசாதாரணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் குறைவு. திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ‘மட்டி’ படம் வெளியான பிறகு இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், அவர்களின் கடுமையான உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். ‘லகான், தங்கல்’ போன்ற இந்திப் படங்களுக்கு இணையாக தென்னிந்திய கலைஞர்களால் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இடம் பெறும் மண் சாலை கார் பந்தயம் தொடர்பான காட்சிகளை இயக்குநர் வடிவமைத்திருந்தார் எனக் கேள்விப்பட்டவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் எங்கு எப்போது இதனை கற்றார் என எனக்குத் தெரியாது. இருந்தாலும் காட்சிகளில் ஒரு சர்வதேச தரம் இருந்தது. ஓடிடி தளங்களைக் கடந்து மக்கள் மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தரவேண்டும். இதற்கு மட்டி திரைப்படம் சிறந்த சான்றாக இருக்கும்” என்றார்.
மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், ‘‘இந்த படத்தின் டீசர், ட்ரெய்லரைப் பார்த்த அந்த பத்து நிமிடங்கள் நான் நானாக இல்லை. இது பிரம்மாண்டமான பட்ஜெட் படம். இது தமிழ்ப் படமோ, மலையாளப் படமோ அல்ல. ஆங்கிலப் படம். இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரகபலின் புகழ் உலக அளவில் பரவும்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் உழைப்பை ‘கே ஜி எஃப்’ படத்தில் பார்த்து வியந்தோம். இந்தப்படத்தில் அவர் அதை விட ஐந்து மடங்கு கூடுதலாக உழைத்து இருப்பதைப் பார்க்கிறோம். இசைக்காக சர்வதேச அளவில் இந்தப் படம் பேசப்படும். பல சர்வதேச விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைக்கும்.
நடிகர்களுக்கு இரண்டாண்டு பயிற்சி, லொக்கேஷனுக்காக ஓராண்டு தேடல், படப்பிடிப்பின்போது 13 கேமராக்கள் இதெல்லாம் ஆங்கிலப் படங்களில் மட்டும் தான் நடைபெறும். இதுவரை தமிழ்ப் படங்களில் இப்படிப்பட்ட திட்டமிடல், உருவாக்கம் நடைபெற்றதாக வரலாறு இல்லை.
சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சிக்கனமாகச் செலவு செய்ய ஒத்துழைத்து காப்பாற்ற வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து திரைத்துறையை ஆரோக்கியமாக வைத்து தொழிலாளிகளை வாழ வைப்பார்கள். தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிப்பார்கள்.
தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் படம் தயாரித்து ஓடிடி தளத்திற்கு வழங்குகிறீர்கள். இதனால் திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்கத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. அதனால் படங்களை ஓடிடி தளங்களுக்குத் தருவதற்கு முன் திரையரங்கத்தில் வெளியிட முன்னுரிமை தர வேண்டும். இரண்டு அல்லது நான்கு வார காலம் அவகாசம் வழங்கினால் திரையரங்கும், அதனை நம்பி இருக்கும் தொழிலாளர் குடும்பங்களும் வாழும். ‘டாக்டர், மாநாடு’ ஆகிய படங்கள் முதலில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் செய்தது. அத்துடன் ஓடிடி தளங்களிலும் நல்ல விலைக்கு விற்பனையாகி இருக்கிறது. எனவே இதனை தயாரிப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *