ஆகக் கடவன – திரை விமர்சனம்
ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் நண்பர்களான அவர்கள், மூவரும் இணைந்து சொந்தமாய் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்த ஆசைப்படுகிறார்கள்.அதற்கேற்ப தனது ஒரே பெண்ணின் திருமணத்துக்காக மெடிக்கல் ஷாப்பை விற்கும் முடிவில் இருக்கிறார் உரிமையாளர். ஊழியர்களே வாங்கிக் கொள்ள விரும்புவது தெரிய வந்ததும் மகிழ்ச்சியுடன் கொடுக்க முன்வருகிறார். அதற்கான விலையாக ரூ. 6 லட்சம் ரூபாய் பேசப்பட்டு அவர்களும் பணம் புரட்டிய நிலையில் திடீரென நண்பர்கள் அறையில் இருந்த ரூ.6 லட்சம் திருட்டுப் போகிறது.
இதனால் , ஊரில் உள்ள நிலத்தை விற்று பணம் ரெடி செய்வதற்காக ஆதிரனும் ராகுலும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு பயணப்படுகிறார்கள் அப்போது வழியில் வாகனம் பஞ்சராகி விட, ஊரை விட்டு ஒதுங்கி இருக்கும் பொட்டல் காட்டுப் பகுதியில் உள்ள பஞ்சர் கடைக்கு செல்கிறார்கள். அங்கே போன இடத்தில் விரும்பத்தகாத பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. முதலில் ராகுல் காணாமல் போகிறான். அவனைத் தேடி ஆதிரன் போன நேரத்தில் மூன்றாவது நண்பனும் இங்கே வந்து வசமாக மாட்டிக்கொள் கிறான்.
அந்தப் பஞ்சர் கடை கும்பல் நண்பர்கள் மூவரையும் அடித்து நொறுக்கி குழியில் போட்டு மூடி கொல்லப் பார்க்கிறது.அந்த கும்பல் இவர்களை கொல்லும் நிலைக்கு போனதற்கு காரணம் என்ன?நண்பர்கள் உயிர் பிழைத்தார்களா? என்பது யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்.
நண்பர்களில் எதற்கெடுத்தாலும் பிரபஞ்சத்தை உதாரணம் சொல்லும் கேரக்டரில் வரும் ஆதிரன் அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அறிமுகத்தையும் தாண்டி ஆச்சரியப்படுத்துகிறார். மரணம் நிச்சயம் என்று தெரிந்த நிலையிலும் அவரது நம்பிக்கை படத்துக்கு ஒட்டுமொத்த ஜீவனாகி விடுகிறது எதற்கும் சட் சட்டென முடிவெடுக்கும் கேரக்டரில் ராகுல், நடிப்பில் முன்னிற்கிறார். பட்டாணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ் ராமதாஸ் சொல்லும் கோழி, நாய் குட்டிக் கதைகள் ரசனை.பஞ்சர் கடை வில் லன்களாக வின்சென்ட், மைக்கேல் பார்வையிலேயே மிரட்டுகிறார்கள் .
பஞ்சர் கடை பையனாக நடித்திருக்கும் தஷ்ணா கண்களில் மரண பீதியை காட்டும் இடத்தில் அடடா சொல்லத் தோன்றுகிறது.ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜாவின் கேமரா பொட்டல் காட்டை கூட அழகுற காட்சிப்படுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்குள் புது எனர்ஜி தருகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார்,தர்மா. இந்த பிரபஞ்சத்தில்நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு என்பதை மூன்று நண்பர்கள் பின்னணியில் மிரட்டலாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். எதிர்பாராத
அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே இயக்குனரையும் சிகரம் ஏற்றி விடுகிறது.
ஆகக் கடவன வரிசையில் இருப்பது இந்தப் படத்தின் வெற்றியும்.
