கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி, நரேன், உதயநிதி, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் ரஞ்சித் பேசுகையில், இளம் இயக்குநர்களோடு கமல்ஹாசன் இணைந்து பணியாற்றுவதை முக்கியமானதாக பார்க்கிறேன். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முந்தைய படங்களில் தன்னை நிரூபித்து இருப்பதாக கூறினார். மேலும், “தமிழ் சினிமாவில் கண்டெண்ட் இல்லையா? என்ற கேள்வியை சமீபகாலத்தில் அதிகம் எதிர்கொண்டேன். நிச்சயம் அப்படி இல்லை. நல்ல கதைக்களங்களுக்கு தமிழ் சினிமா முன்னோடி. ‘விக்ரம்’ அதை நிச்சயம் மறுபடியும் நிரூபிக்கும். கமல் சாரை வைத்து மதுரை களத்தில் ஒரு படம் இயக்க ஆசை. மதுரை வாழ்க்கையை எடுக்க எனக்கு ரொம்ப நாள் ஆசை. மதுரையில் மடித்து கட்டிய வேட்டி சட்டை மட்டுமல்ல, அவர் படத்தில் கோட் சூட் கூட போடலாம்’’ என்றார்.
பார்த்திபன் பேசுகையில், “விஜய்சேதுபதி, பகத் பாசில் என பல நடிகர்களை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அப்படியான நடிகர்களை தான் கமலுக்கும் பிடிக்கும். ஆனால், இன்னும் அவர் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு இன்னும் என்னை தகுதிப்படுத்திக் கொண்டு விரைவில் அவருடன் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன்’’ என்றார்.
தமிழகத்தில் ‘விக்ரம்’ படத்தின் விநியோக உரிமையை வாங்கிய உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘கடைசி நேரத்தில் ஓடும் ரயிலில் ஏறுவது போல தான் இந்த படத்தில் கடைசியில் இணைந்தேன். நிறைய பேர் என்னிடம் கமல்ஹாசனையே மிரட்டி படம் வாங்கி விட்டீர்களா? என்று கேட்டார்கள். அவரை யாரும் மிரட்ட முடியாது. என்ன நடந்தது என்பது எனக்கும் கமல் சாருக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த நேரத்தில் அவருடைய ரசிகனாக கமல்ஹானுக்கு ஒரு கோரிக்கை. இப்போது பொது வாழ்க்கைக்கு வந்து விட்டீர்கள். ஆனாலும், ஆண்டுக்கு ஒரு படமாவது நடியுங்கள். குறிப்பாக லோகேஷ் போன்ற இளம் இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பு’’ என்றார்.

இந்த படம் மூலம் முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவர் பேசும்போது, “கமல் சாருடன் நான் நடிப்பது என் கனவில் கூட நடந்தது இல்லை. நான் பேச ஆரம்பித்ததற்கு பிறகு தான் அவரது பேச்சை கவனிக்க ஆரம்பித்தேன். அவரது பேச்சில் ஒரு பொறுப்பும் ஆழமும் இருக்கும்.
அவருடன் சேர்ந்து படப்பிடிப்புக்கு இடையில் அமர்ந்து பேசியதெல்லாம் என் பாக்கியம். ‘கமல் 60′ நிகழ்ச்சியில் அவருடன் படம் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அதே போல, உங்களுடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. உங்கள் எழுத்தின் மிக பெரிய ரசிகன் நான். அது நடக்க வேண்டும் என இயற்கையை வேண்டி கொள்கிறேன்” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பேசகையில் ‘‘நான் 11 வருடங்களாக இசையமைத்து வருகிறேன். ‘இந்தியன்2′ படத்தில் கிடைத்த வாய்ப்பு முழுமை பெறாமல் போன வருத்தத்தில் இருந்த போது தான், லோகேஷ் இந்த வாய்ப்பு கொடுத்தார்.

‘பத்தல பத்தல’ பாடலுக்கான ரெக்கார்டிங் நடந்த இரண்டு நாட்கள் மறக்க முடியாது. ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் அனுப்பி விட்டார். தமிழில் பாடி முடித்ததும் தெலுங்கின் வரிகளை பார்த்து இதில் பிழை இருக்கிறது என சொல்லி அவரே சரி செய்து உடனே பாடினார்’’ என்றவர், படத்தில் இருந்து ‘விக்ரம்’ பாடலையும் பாடினார்.
நடிகர் சிம்பு பேசுகையில், ‘‘வாழ்க்கையில் என் அப்பா எனக்கு குரு. திரையில் கமல் தான் எனக்கு குரு. அப்போதெல்லாம் நான் ஐந்து மணிக்கு எழுந்திருக்க மாட்டேன். ஆனால் கமலின் ‘விஸ்வரூபம்’ பட பிரச்னையின் போது அதிகாலையில் எழுந்து அன்று நாள் முழுக்க கமல் சாருடன் இருந்ததை மறக்கவே மாட்டேன். இந்த படத்தின் ட்ரைய்லரை பார்த்து விட்டு சொல்கிறேன். நிச்சயம் படம் வெற்றி பெறும். இத்தனை நடிகர்களை வைத்து படம் இயக்குவது எளிது கிடையாது. லோகேஷ் அதனை செய்திருக்கிறார். விஜய்சேதுபதி என் நண்பர். மலையாளத்தில் பகத் போல தமிழில் விஜய்சேதுபதி.
அனிருத் என் சிறு வயது நண்பன். அனிருத் பாடல்கள் வெற்றி பெற பின்னால் அவருடைய பெரிய உழைப்பு உள்ளது. இப்பொழுது எல்லாம் பான் இந்தியா என பேசி கொண்டிருக்கிறார்கள். கமலுடைய ‘மருதநாயகம்’ பார்த்தால் அந்த பேச்சு வராது என நினைக்கிறேன்’’ என்றார்.

‘விக்ரம்’ படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ‘‘கமல் சார் வீட்டில் என்னுடைய ஆரம்ப காலத்தில் போய் நிற்பேன். அவர் காரில் புறப்படும்போது நின்று கைகாட்டுவர் என்று எதிர்பார்த்து கடவுளை வேண்டி நிற்பேன். ஆனால், இப்போது ஆக்‌ஷன் கட்டே சொல்ல வைத்து விட்டார். அந்த ஆண்டவருக்கும் இந்த ஆண்டவருக்கும் நன்றி. அவரால் தான் நான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன். எட்டு ஒன்பது வருடங்கள் சினிமாவில் என் உழைப்பு தான் அவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போய்க் கொண்டிருந்தது. இரவு 2 மணிக்கு தேவைப்பட்ட காட்சி ஒன்றுக்கு 26 புஷ்ஷப்கள் செய்தார். அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். படம் வெளியானதும் மேக்கிங் வீடியோவாக முதலில் அதைத் தான் வெளியிடுவேன். இந்த வயதில் கொரோனாவுக்கு பிறகு கமல் சார் உழைப்பை பார்க்கும் போது நாம் பார்ப்பதெல்லாம் வேலையே இல்லை என்று தோன்றுகிறது. படம் பார்த்து விட்டு கமல் சார் பிடித்திருக்கிறது என சொன்னதும் எனக்கிருந்த ஒரு வருட அழுத்தம் குறைந்தது.
இந்த படத்தில் சூர்யா சார் நடித்திருப்பதற்கு நன்றி. ஏன் அந்த நன்றி என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யும்” என்றார்.

நிறைவாக கமல்ஹாசன் பேசுகையில், ‘‘நான்கு ஆண்டுகளுக்கு பிறகு னன்னுடைய படத்தின் விழா நடக்கிறது. தமிழ்நாட்டை பொறத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. அதை தான் நானும் செய்கிறேன். நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை நடிகனும் இல்லை. நான் முதன் முதலில் அரசியலுக்கு போகிறேன் என்று சொன்ன போது சிம்புவின் அப்பா டி.ஆர். என்னை தேடி வந்து என்னை கட்டிப் பிடித்து கேவிக் கேவி அழுதார். ‘எப்படி சார் நீங்கள் இதை செய்யலாம்?’ என்று கேட்டார். என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பி கொடுக்க வேண்டும். நான் பணத்துக்காக நடிக்க வந்திருந்தால் இது நடந்திருக்காது.

நான் சிறு வயதில் சிவாஜி, எம்.ஜி.ஆர். அலுவலகத்தின் வெளியில் எல்லாம் சென்று நின்றிருக்கிறேன். அப்படி இருந்தவனுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்தாலும் அது பெரிது தான். ஐந்து வயதில் வந்தவனை இன்னும் நீங்கள் தோளில் இருந்து இறக்கவில்லை.

நான் poltical cultrist என்று என்னை குறிப்பிட்டுக் கொள்வேன். மொழி போராட்டங்கள் சுதந்திர காலத்தில் இருந்து நடந்து வருகிறது. இந்தியாவின் அழகே பன்முகம் தான். இந்தி ஒழிக என்று சொல்கிறீர்களா என்று கேட்காதீர்கள். நான் இந்தியும் தமிழும் சுமாராகத் தான் பேசுவேன். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அது நுண்ணுர்வு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தாய் மொழியை விட்டு கொடுக்கக் கூடாது. எங்கள் திறமைகள் பளிச்சிட திரையரங்குகள் முதல் சாளரம். சாட்டிலைட் வந்த போது சினிமா கெட்டு விடும் என்று எதிர்த்த போது எதிர் குரல் கொடுத்தவன் நான். ஓடிடியை முன்பே கணித்தவன் நான். இவை எல்லாம் வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. இதற்கு உதாரணம் காலண்டரில் வெங்கடாசலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது.

இந்த ஒலி, கரவொலி எல்லாம் கேட்பதற்கு என் தாய் தந்தை இல்லை. சந்திரஹாசனாவது இருந்திருக்கலாம். சாருஹாசன் எங்கோ இருந்து 92 வயதில் கேட்டுக் கொண்டிருப்பார். படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பதை பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர். ஏன் நானும் ரஜினியும் திரையில் இருந்தாலும் நண்பர்களாக இல்லையா? இளவயதில் நாங்கள் ஏதும் எதிராக பேசி இருக்கலாம். ஆனால், எங்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும், எப்படி பயணப்பட வேண்டும் என்பதை 25 வயதில் முடிவு செய்தவர்கள் நாங்கள். அது போல கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது.
என் காரை தொட்டு பார்த்த ரசிகராக இருந்த லோகேஷ் என்னை இயக்கி இருப்பது எனக்கு தான் பெருமை. இந்த வெற்றி கூட்டணி தொடரும். நான் 22 வயதில் வேலை செய்தது போல விஜய்சேதுபதி இப்போது அவரது 44 வயதில் செய்து கொண்டிருக்கிறார். நான் அந்த வயதில் ஒரு வருடத்தில் எத்தனை படங்கள் நடித்தேனோ அது போல விஜய்சேதுபதி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அபாயகரமானதாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். அதற்கு காரணம் அன்பறிவு. அனிருத் இசையில் ‘பத்தல பத்தல’ வெற்றி எனக்கே இப்படி கிடைத்ததில்லை. மூன்று மொழிகளிலும் நானே பாடி இருக்கிறேன்.

இந்த படம் வெல்லும் என அனைவரும் நம்பிக்கையாக சொல்வதற்கு காரணம் வலுவான அணி அமைந்திருக்கிறது. படத்தில் நடித்து கொடுத்த சூர்யாவுக்கு நன்றி” என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/kamal-vikram1-1623500446.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2022/05/kamal-vikram1-1623500446-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்கமல் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் சிலம்பரசன், விஜய் சேதுபதி, நரேன், உதயநிதி, இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் ரஞ்சித் பேசுகையில், இளம் இயக்குநர்களோடு கமல்ஹாசன் இணைந்து பணியாற்றுவதை முக்கியமானதாக பார்க்கிறேன். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முந்தைய படங்களில் தன்னை நிரூபித்து இருப்பதாக...