கமல் – விஜய் சேதுபதி பங்கேற்றகலந்துரையாடல் நிகழ்ச்சி

கொரோனா தாக்குதலுக்கு பயந்து பொது ஜனம் தொடங்கி பிரபலங்கள் வரை அம்புட்டு பேரும் வூட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இதுலே சினிமா பிரபலங்களில் பலர் தங்களோட சமூக வலைதளம் மூலம் பேட்டி, டிப்ஸ், எண்டெர்டெயின்மெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையிலே கமல் – விஜய் சேதுபதி இருவரும் பங்கேற்ற நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்னிக்கு (மே 2) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி 1:30 மணி வரை நடந்துச்சு.
இதுக்கிடையிலே சமூக வலைதளத்தில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியில் பலரும் சொல்வது ‘கமல் பேசுவது புரியவில்லை, ட்வீட் செய்ததிற்கு விளக்கம் தெரியவில்லை’ என்பதுதான். நேற்று (மே 2) மாலை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட்டிற்குக் கூட, பலரும் அர்த்தம் புரியவில்லை என்றனர். இது சமூக வலைதளத்தில் விவாதமாக மாற, உடனடியாக கமல் தரப்பில் அதற்கான விளக்கம் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய (மே 2) கமல் – விஜய் சேதுபதி நேரலையில் கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அது குறிச்சு ஆங்கர் அபிஷேக்: உங்கள் பேச்சில் ஒரு உள் அர்த்தம் இருக்கும். அது புரியவில்லை என்று சொல்கிற ட்ரெண்ட் ரொம்ப ஆண்டுகளாகவே இருக்கிறது.
கமல்: அது என்னவென்றால், முன்பு எல்லாம் வரவே இல்லை. ‘அய்யய்யோ மற்றவர்களுக்குப் புரிந்துவிடுமோ’ என்ற பயத்துக்காக சொல்லப்படும் சுவரொட்டிகள் அவை. எங்களுடைய ஊரில் சுவரொட்டிக்கே வேறொரு அர்த்தமுண்டு.
விஜய் சேதுபதி: உங்களுடைய படங்களில் காமெடிக் காட்சிகளை ரசிப்பதற்குள் 5- 6 காமெடி தொடர்ந்து வந்துவிடுகிறது. பேச்சும் சரி அனைத்துமே இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாமே. இது எனது வேண்டுகோளாகச் சொல்கிறேன் சார்..
கமல்: நீங்கள் சொல்லும் படத்தை ‘மைக்கேல் மதன காமராஜன்’ என்று எடுத்துக் கொள்வோமே. அந்தப் படம் அனைவருக்கும் புரியப் போய் தானே மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். இன்னும் 2 ஜோக் மிஸ் ஆகிவிட்டது என்று மீண்டும் பார்க்க வைப்பது எனக்கு ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்பு. தாழ்மையாக நான் சொல்வது என்னவென்றால், ஒரு முறை பார்த்துவிட்டு இதுதான் நான் பண்ணிவிட்டேனே என்று சேதுபதி நினைத்துவிடக் கூடாது அல்லவா. அடங்கேப்பா இன்னும் இருக்கா என்று அடுத்த முறை பார்க்கும்போது அது புரிந்து என்னை அண்ணனாக ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லையா. அது எனக்கு ரொம்ப முக்கியம். அது புரிந்துவிடும், அப்படி புரியவில்லை என்றால் சேதுபதி எடுத்துச் சொல்லிவிடுவார் அதை.
கலைஞரே, ஒளவையாரோ, பாரதியாரோ அல்லது பாரதிதாசனோ புரியணும், புரியணும் என பதறிக் கொண்டிருந்தார்கள் என்றால் வெறும் சினிமா பாடல் மட்டுமே எழுதியிருப்பார்கள். பயப்படவே இல்லை. பாரதியாரிடம் ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ பாடலுக்கு எல்லாம் அர்த்தம் கேட்டிருந்தால் பாரதியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம். நான் இப்படித்தான். இதைப் புரிந்து கொள்வார்கள். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், உங்களுக்குப் புரிந்தது. புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன்.
விஜய் சேதுபதி: ஸாரி சார் ஆங்.. அப்புறம் அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதற்கான அறிகுறியை சினிமாவில் காட்டாதது ஏன் ..: நீங்கள் அரசியலுக்கு வந்ததைப் பெரிதாக வரவேற்கிறேன் சார். இத்தனை ஆண்டுகள் சினிமாவை நேர்மையாக எங்களுக்குக் கொடுத்த மனுஷன் அரசியலுக்கு வரும்போது, இதே அளவுக்கு நேர்மை அரசியலிலும் இருக்கும் என்பது என் நம்பிக்கை சார்.
கமல்: நான் யார் என்பதை உங்களுக்கு மறு அறிமுகம் செய்ய வேண்டும். இவ்வளவு நேரம் நீங்கள் என்னிடம் பேசியதே கிடையாது. ஆர்.சி.சக்தி, சந்தானபாரதி உள்ளிட்டோர் என்னை முழுமையாகத் தெரிந்து கொண்டதைப் போல் நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும். சில நண்பர்களை இழக்கும்போது, அவ்வளவு தான் நட்பு என்று முடிவு செய்ய முடியாது அல்லவா. அதற்கு ஏற்ற மாற்று ஆட்களை எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். அதுவாக நீங்கள் ஏன் இருக்கக் கூடாது என்பதுதான்.
விஜய் சேதுபதி: கிடைத்தால் சந்தோஷம்தான் சார். ஒரு மேடையில் இளையராஜா சார் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசியலுக்கு வரப்போவதற்கு ஒரு வசனம் கூட சினிமாவில் நீங்கள் கொடுக்கவில்லை. அதற்கான காரணம் என்ன?
கமல்: உன்னுடைய எந்த சினிமாவில் அரசியல் இல்லை என்று என் நெருங்கிய நண்பர்கள் சொல்வார்கள். உற்றுக் கவனித்தால் அனைத்திலும் ஒரு கொட்டு இருக்கும். அடி இருக்கும். ஏதாச்சும் ஒன்று வைத்திருப்பேன். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ காலத்திலிருந்து சொல்கிறேன். ரொம்ப தைரியமான சில கருத்துகள் எல்லாம் சொல்லியிருப்போம். ‘சத்யா’ படத்தில் நேரடியாக அரசியலே பேசியிருப்போம். ‘தேவர் மகன்’ படத்தில் சொல்லாமல் சொல்லியிருப்போம்.
நிஜத்தில் ‘தேவர் மகன்’ படத்துக்கு ‘நம்மவர்’ என்றுதான் நானும் அனந்துவும் தலைப்பு வைக்க முடிவு செய்தோம். ஆனால், வாலி அண்ணாதான் ‘தேவர் மகன்’ தான்டா சரியான பெயர் என்றார். அனைவரும் வழிமொழியவே வைத்துவிட்டோம். அதற்காக கோபப்பட்டவர்கள் எல்லாம் உண்டு. நான் சொல்ல வந்த கருத்தைவிட்டு, சின்ன சண்டைகளான சாதிச் சண்டைகள் தொடங்கிவிட்டன. அது தமிழகத்துக்கு ரொம்பப் பிடிக்கும். அடுத்து ‘ஹே ராம்’ படம். காலம் செல்லச் செல்ல அது இன்னும் தீவிரமான அரசியல் படமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் போது கூட சில இடங்களில் நாக்கைக் கடித்துக் கொண்டேன். “ஆத்தி.. இப்படிச் சொல்லிட்டோமே.. கொஞ்சம் அளந்து போட்டிருக்கலாமே. காரம் அதிகமாகிவிட்டதே” என நினைத்தது உண்டு.
விஜய் சேதுபதி: அரசியல் கருத்தும் சரி, கடவுள் நம்பிக்கையும் சரி நிறைய படங்களில் பேசியிருக்கிறீர்கள். ஆனால் அரசியலில் ஆர்வம் இருக்கிறது, வரப்போகிறேன் என்று… (கேள்வியை முடிப்பதற்குள்)
கமல்: அதைச் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. தடுப்பதற்கு நிறையப் பேர் இருப்பார்கள். அது 2001-ல் புரிந்துவிட்டது. அரசியலுக்கு வந்துவிடுவேனோ என்ற சந்தேகத்தில் வைக்கப்பட்ட இடைஞ்சல்கள் கணக்கில் அடங்காது. அதை மீண்டும் சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ‘விருமாண்டி’ பிரச்சினை எல்லாம் திடீரென்று கிளப்பிவிடப்பட்டது தானே. நிதானமாகக் கோபப்பட வேண்டும் என்று புரிந்துகொண்ட நேரம் அது.
விஜய் சேதுபதி: அரசியல் வருகையை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டதற்கான காரணம் என்ன?
கமல்: அதற்கான சூழல். வயது வர வேண்டும். என்ன இவன் வந்துட்டானா என்று சொல்லக்கூடாது. இவர் என்று சொல்கிற வயது வரவேண்டும். அதற்காகக் காத்திருந்தேன். ஒருமையில் பேசுவது ரொம்ப சுலபம் அல்லவா.
முழு பேட்டியை வீடியோ வடிவில் காண
