திரை விமர்சனம்

கஜானா – திரை விமர்சனம்

காலகாலமாக கேட்ட பூதம் காக்கும் புதையல் கதை தான். அதை கண்களில் பிரமிப்பு விலகாமல் பார்க்க நேர்ந்தால்…அப்படி ஒரு படம் தான் இந்த கஜானா.இதில் புதையலுக்குப் பதில் நவரத்தின கற்கள்.அவற்றைப் பாதுகாக்கும் யாளி என்று கதை போகிறது, சுவாரசியமாகவே.

இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு என்று புதையலுக்காக உயிரை பணயம் வைத்து புறப்படுகிரார்கள். இவர்களைத் தாண்டி கருடர் இனத் தலைவி சாந்தினி ஒரு பக்கம் அந்த நவரத்தின கற்களுக்கு குறி வைக்கிறார்.இந்த மும்முனை போட்டியில் புதையலை யாராவது கைப்பற்றினார்களா என்பது பர பர கிளைமேக்ஸ்.

நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர், அடிதடி காட்சிகளில் அசத்தி இருக்கிறார்.
அபாயங்கள் நிறைந்த வனப்பகுதியில் அதைவிட அபாய மனிதர்களை எதிர்கொள்ளும் இடங்கள் அத்தனையும் கரகோஷத்துக்குரியவை.காட்டைக் காக்கும் பெரியவராக வரும் வேலு பிரபாகரனிடம் நடிப்பும் சுத்தம். அவர் உச்சரிக்கும் இனிய தமிழும் சுத்தம். சீரியஸான இந்த மாயாஜால படத்தில் படத்தின் ரிலாக்ஸ் பகுதியாக யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் வருகிறார்கள்.பொக்கிஷத்தை தேடும் முயற்சியில் ஈடுபடும் வேதிகா, எழுத்தாளர் ஹரிஷ் பெராடியிடம் வார்த்தை போர் நடத்தும் இடம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு வலுவான அஸ்திவாரம் ஆகி விடுகிறது.

இரண்டாம் பாதி முழுவதிலும் வேதிகா ராஜ்யம் என்பதை படத்தின் முதல் பாக முடிவும் தெளிவுபடுத்துகிறது. கருடர் இனத் தலைவியாக வரும் சாந்தினி பறந்து பறந்து வில்லத்தனம் செய்கிறார். அனிமேஷன் உபயத்தில் அதுவும் ரசிக்க வைக்கிறது.

பிரதாப் போத்தன் சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கோபி துரைசாமி, வினோத்.ஜே.பி. ஆகியோரின் கேமராக்கள் அடர்ந்த வனப்பகுதியை கண்களுக்கு திகட்ட திகட்ட விருந்தாக்கி இருக்கிறது. இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் ரசனை. எழுதி இயக்கியிருக்கும் பிரபதீஸ் சாம்ஸ், ஃபேண்டஸி உலகத்தை வி.எப்.எக்ஸ். உபயத்தில் ரசிக்கவும் பிரமிக்கவும் வைக்கிறார்.
இந்த கஜானா, ரசிகனை பரவசத்தில் நிரப்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *