நிழற்குடை – திரை விமர்சனம்
இளம் தம்பதிகள் விஜித் –கண்மணி இருவரும் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையில் இருப்பவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையின் கேர் டேக்கராக தேவயானியை வேலையில் அமர்த்துகிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். இதற்கிடையே, அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு விசா கிடைத்து விட… தேவயானியை தாய்க்கும் மேலாக நேசிக்கும் அந்த குழந்தை அமெரிக்காவுக்கு தேவயானியும் வர வேண்டும் என்று அடம் பிடிக்கிறது.இதற்கிடையே, அமெரிக்கா புறப்படுவதற்கு முந்தின இரவு குழந்தை திடீரென்று காணாமல் போக.
தங்கள் அமெரிக்கா பயணத்தை தடுக்க இதை செய்திருக்கலாம் என்று நினைக்கும் குழந்தையின் பெற்றோர், சிலர் மீது புகார் அளிக்கிறார்கள். அதன்படி, அவர்களிடம் போலீஸ் விசாரித்தும் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போக… குழந்தையை கண்டு பிடித்தார்களா?, தேவயானியை விட்டு பிரிய மறுக்கும் குழந்தையின் நிலை என்ன? என்பதை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, அந்த கேரக்டரில் ஒரு பாசமுள்ள தாயை பிரதிபலிக்கிறார். குழந்தை காணாமல் போன நிலையில் போலீசின் சந்தேகம் தன் மீது திரும்பும் இடத்தில் அவரது நடிப்பும் உடல் மொழியும் வேறு லெவல். குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் தாய்மையின் பரிபூரண அடையாளம். வசதியாக வாழ்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழும் பெற்றோராக சுஜித்- கண்மணி நடிப்பில் வாழ்ந்து இருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிகாரிகா சிறப்பு.ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா இசை அனுபவ நடிப்பில் காட்சிக்கு பலம் சேர்க்கிறார்கள்.வித்தியாசமான லுக்கில் மிரட்டும் தர்ஷன் சிவா குட்டி காரை வைத்து குழந்தையை கடத்த முயற்சிக்கும் இடம் பகீர் ரகம்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்கள் சுக ராகம். பெற்றோரை மறக்கும் பிள்ளைகளின் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு பாச திறவுகோல் கொண்டு பிடிவாத மனங்களை திறந்திருக்கிறார் இயக்கிய சிவா ஆறுமுகம்.
முதியோர் இல்லங்கள் ஏன் அதிகரிக்கின்றன என்பதற்கான விளக்கமும் செம.
மொத்தத்தில், இந்த ‘நிழற்குடை’ காலத்திற்கேற்ற கொடை.