என் காதலே – திரை விமர்சனம்
சுனாமியில் தங்கையையும் தங்கையின் கணவரையும் பறிகொடுத்த மீனவர் குப்பத்து தலைவர் ( மதுசூதனன் ) தப்பி பிழைத்த தங்கையின் மகனை தன் பிள்ளையாக எடுத்து வளர்க்கிறார். அவன் வளர்ந்து வாலிபன் ஆகும் நேரத்தில் தலைவரின் மகளுக்கு (திவ்யா) அவன்( லிங்கேஷ்) மீது காதல். அவனுக்கோ அப்படி ஒரு சிந்தனையே இல்லை. ஆனாலும் சிறு வயது முதல் அவன் காட்டி வந்த அன்பை மாமா மகள் தவறாக புரிந்து கொள்வதாலேயே அவளுக்குள் மாமா மனதளவில் மணாளன் ஆகிப் போகிறான்.
இந்த நிலையில் லண்டனில் இருந்து தமிழ்க் கலாசாரம் கற்க வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ( லியா) அவனுக்கும் காதல் வர…மாமனே உலகம் என்று வாழும் திவ்யாவுக்கு இது தெரிய வர… விஷயம் அவள் அப்பா வரை போக….கொந்தளிக்கும் தலைவர் அந்தப் பெண்ணை உடனே ஊரை காலி பண்ண சொல்கிறார்.
இப்போது நாயகனின் நிலை என்ன? நெருக்கமான காதலில் வயிற்றில் கருவை தாங்கி நிற்கும் அந்த வெள்ளைக்கார பெண்ணின் நிலை என்ன? என்பது தவிப்பும் துடிப்புமான கிளைமாக்ஸ். நாயகனாக வரும் லிங்கேஷ் தனக்குள் ஒரு எல்லைக்கோடு வைத்து நடித்திருக்கிறார்.மாமா மகளை தன்மீது அன்பு காட்டும் தாய் ஸ்தானத்தில் தான் வைத்து பார்த்தேன் என்று நாயகன் சொல்லும் இடத்தில் லிங்கேஷ் அந்த கேரக்டரை நம் மனதுக்குள் பதித்து விடுகிறார்.
மாமா கிடைக்காத இயக்கத்தில் சாமியிடம் முறையிடும் நாயகிக்கு பூசாரி விளக்கம் தரும் இடத்தில் நாயகியாக வரும் திவ்யாவின் ரியாக்ஷன் நடிப்பில் தேர்ந்த நடிகைக்கான அடையாளம்.குப்பத்து தலைவராக மதுசூதனன் கிளைமாக்சி ல் தனக்குள் இருக்கும் புது மனிதனை வெளிக்கொண்டுவரும் இடம் அத்தனை அழகு.வெள்ளைக்கார பெண்ணாக வந்து மனதை தொட்டு போகிறார் லியா. தன் காதலனுக்கு சொந்தத்திலேயே மணமகள் இருக்கிறா ள் என்பதை அறிந்து உடைந்து நொறுங்கும் இடத்தில் அந்த அமைதியான பார்வையிலேயே அதிர்ச்சியை கடத்தி விடுகிறார்.
சாண்டி சாண்டேல்லா இசையில் பாடல்கள் இனிமை. டோனி ஜான் ஒளிப்பதிவு அந்த மீனவ கிராமத்தை அழகுற படம் பிடித்து காட்டி இருக்கிறது.மாறன் , கஞ்சா கருப்பு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.
சிறுவயது முதல் தூக்கி வளர்த்த பிள்ளையை மனைவியாகப் பார்க்க முடியாத நாயகன் என்ற ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு ஒரு அழகான காதல் விளையாட்டை விளையாடி இருக்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.