இந்த ஆண்டின் மிகச்சிறந்த சம்பவமாக “பைரி” திரைப்படம் இருக்கும்” – யாத்திசை இயக்குநர் தரணி ராசேந்திரன்
டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி.
வரும் பிப்ரவரி 23 அன்று திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஒளிப்பதிவாளர் வசந்த குமார் பேசும் போது…
வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் ஜான் சிறப்பாக பேசியிருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தியேட்டரில் பிப்ரவரி 23ம் தேதி வருகிறது, உங்கள் அனைவரின் சப்போர்ட்டும் இப்படத்திற்குத் தேவை. படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி.
பாடலாசிரியர் பொன் மனோபன் பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். ஒரு படைப்பு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். எப்படி உதறினாலும் அது விடாது. சக்தி சார் மற்றும் தயாரிப்பாளரைக் கொண்டு வந்தது போல் என்னையும் அது படத்திற்குள் கொண்டு வந்தது. பைரி படத்தில் பாடல் ஆசிரியராகவும் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி.

எடிட்டர் சதீஷ்குமார் பேசும் போது…
வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். பைரி குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.இப்படத்தில் நான் இருப்பதற்கு காரணமான ஜானுக்கு நன்றி. ஜானை எனக்கு முன்பிருந்தே தெரியும். நாளைய இயக்குநர் காலத்தில் இருந்தே நாங்கள் ஒன்றாக பயணிக்கிறோம். டிகே சார், துரை சார் ஆகியோருக்கு நன்றி. கவிஞர் ப்ரான்சிஸ் கிருபா அண்ணாவிற்கு நன்றி. அவர் இப்படத்தில் முக்கியமான ரோல் செய்திருக்கிறார்.
டி.கே சார் இல்லாமல் இப்படம் முடிவடைந்திருக்காது. அவர் எங்களை நம்பினார். இயக்குநரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் நினைத்த விசயம் வரும் வரை விடமாட்டார். கஷ்டப்பட்டு படத்தை எடுத்துவிட்டோம். ஆனால் நாங்கள் புதிய அணியினர். கண்டெண்ட் நன்றாக இருக்கிறது. நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, படத்தை பார்த்தவுடன் இப்படத்திற்கு நான் சப்போர்ட் செய்கிறேன் என்று கூறியதோடு, படத்தை பெரிய வெற்றிப்படமாக மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உடனிருந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார் சக்திவேலன் சார். அவர் பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் எங்களின் படத்தையும் முன்னெடுத்துச் செல்லும் அவருக்கு நன்றி.
நடிகை சரண்யா ரவிச்சந்திரன் பேசும் போது…
நான் இப்படத்தில் சித்ரா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். எங்கள் குழுவினர் சார்பாக நான் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சக்தி பிலிம் பேக்டரி மூலம் இப்படம் வெளியாக இருப்பது மிகுந்த சந்தோசம் கொடுக்கிறது. படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். பத்திரிகையாளர்கள் அனைவரும் இப்படத்திற்கு வரவேற்பைத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நிர்வாகத் தயாரிப்பாளர் தினேஷ் பேசும் போது…
முதல் நன்றியை சையத் அவர்களுக்குத் தான் தெரிவிக்க வேண்டும், அவர் எனக்கு 15 வருடப் பழக்கம். இப்படத்தைப் பார்த்த அனைவரும் படத்தைப் பாராட்டினார்கள், ஆனால் எல்லோருமே புதிதாக இருப்பதால் எப்படி கமர்ஷியலாக வொர்க் அவுட் ஆகும் என்று சந்தேகித்தார்கள். ஆனால் சக்தி சார் இப்படத்தைப் பார்த்துவிட்டு கண்டிப்பாக நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்ததும் தான் சந்தோஷம் வந்தது. இயக்குநர் ஜான் இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் வசந்த்குமார் படட்பிடிப்பில் பெரும் உதவி செய்தார். அவருக்கு நன்றி. சிஜி சேகர் மிகச் சிறப்பான ஒத்துழைப்பை இரவு பகல் பாராமல் செய்து கொடுத்தார். அவருக்கு நன்றி. DI தொழில்நுட்பக் கலைஞர் ஸ்ரீக்கும் நன்றி. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் படங்களை நாம் வெற்றிப்படமாக்கி இருக்கிறோம். பைரி நம் ஊரின் கதை. மக்கள் அதை கண்டிப்பாக வெற்றியடையச் செய்வார்கள் என்று நம்புகிறேன். பத்திரிகை நண்பர்கள் படத்திற்குப் பெரிய ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசும் போது…
அனைவருக்கும் வணக்கம். பைரி என்கின்ற திரைப்படம் எனக்கு முதன் முதலாக சக்திவேலன் சார் அவர்கள் மூலமாகத் தான் அறிமுகமானது. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அப்படத்தினைப் பற்றிப் பேசுவார். இயக்குநர் பேசும் போது வெகுளியாகப் பேசினார். ஆனால் அவருடைய படமும், அந்த கிராப்டிங்கும், அவர் ப்ரேமை கட்டமைத்த விதமும், அதில் கதாபாத்திரங்களை நடிகர்களை கையாண்ட விதமும் மிகச் சிறப்பாக ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு படத்தை ஆடியன்ஸுக்கு நெருக்கமாக மாற்றுவது என்பது ஒர் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு. இது வெறும் புறா சண்டையாக நின்று போவதில்லை. அதனையும் மீறி மனிதர்களின் உணர்வு, அரசியல், அந்த சமூகத்தின் அரசியலைப் பேசுகிறது. புதுப்பேட்டை, ஆடுகளம் படங்களைப் போல் பைரி திரைப்படம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த வருடத்தின் மிகப்பெரிய சம்பவமாக பைரி இருக்கும். இவ்வருடத்தின் மிக முக்கியமான படங்களில் பைரி கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
