கெழப்பய – விமர்சனம்
சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்கள் பல தருணங்களில் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் புது முகங்களின் நடிப்பில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் ‘ கெழப்பய’ எனும் திரைப்படம் இணைந்ததா? இல்லையா? என்பதனை தொடர்ந்து காண்போம்.
ஊரில் முதியவர் ஒருவர் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். அவர் ஒரு முறை பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது.. ஒரு கும்பல், ஒரு நபரை துரத்திக் கொண்டு செல்கிறது. இவர் தன்னுடைய சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து செல்லும்போது, அந்த கும்பல் துரத்திய நபரை கத்தியால் பல இடங்களில் வெட்டி வீழ்த்தி விட்டு, தப்பி ஓடிவிடுகிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த நபர்.. சில வார்த்தைகளை உச்சரிக்கிறார். அந்த வார்த்தைகள் முதியவரின் மனதில் பதிகிறது. அதன் பிறகு தன்னுடைய மனதில் பட்ட விசயத்திற்காக.. தன் வயதிற்கு மீறிய செயலில் ஈடுபடுகிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் அழுத்தமான மற்றும் வியப்பை அளிக்கக்கூடிய கதை.
படத்தின் முதல் பாதி கலை படைப்பு போல் மிக மிக மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதி மற்றும் உச்சகட்ட காட்சி ரசிகர்களை இருக்கையில் அமர வைக்கிறது. படம் நிறைவடைந்த பிறகு மனதில் ‘சபாஷ்’ போட வைக்கிறது.
முதியவர் கதாபாத்திரம் தெனாலிராமன் கதையை சொல்வதும் … காரில் வரும் கும்பல், முதியவரை அடித்து போட்டு தொடர்ந்து முன்னேறி செல்லாமல் இருப்பதற்காக கிராமத்து நிர்வாக அதிகாரி கதாபாத்திரத்தை தொடக்கத்திலேயே இடம்பெற வைத்திருப்பதும்… இயக்குனரின் சாமர்த்தியத்தை எடுத்துரைக்கிறது.
முதியோராக நடித்திருக்கும் அறிமுக நடிகர் கதிரேச குமார் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் நடித்திருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் நடிகர்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, பின்னணியிசை பரவாயில்லை ரகம்.
கெழப்பய – டிஜிட்டல் தெனாலிராமன்.