‘‘ராஜமவுலி மாதிரியான நல்ல இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும்’’ ‘விக்ராந்த் ரோணா’ படசெய்தியாளர் சந்திப்பில் நடிகர் கிச்சா சுதீப் விருப்பம்
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் 3 டியில் உருவான விக்ராந்த் ரோணா திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற 28-ந்தேதி திரைக்கு வருவதையொட்டி சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் நடிகர் கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீத்தா அசோக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இ்த சந்திப்பில் நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில், தமிழ்நாட்டில் நான் எப்போது வந்தாலும் எனக்கு நிறைய மரியாதை கொடுத்து என்னுடைய வேலையை பார்த்து ரசிக்கிறார்கள், அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எல்லா மொழி படங்களும் எல்லா இடங்களிலும் வெளியாக வேண்டும். சினிமா என்பது மொழிகளைத் தாண்டிய ஒரு கதை அதை எல்லாருக்கும் சொல்ல வேண்டும்.
நிச்சயமாக இந்த படம் நல்ல படமாக இருக்கும். காசு இருக்கிறது என்பதற்காக ஒரு பெரிய படம் பண்ணலாம் என்று இதை எடுக்கவில்லை. இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது. இதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று தான் இதை நாங்கள் எடுத்துள்ளோம்.
இப்பவும் இயக்குநர் இந்த படத்திற்காக வேலை செய்து வருகிறார். 3டியில் வேலை செய்வதால் அவரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் வருமானத்தை பொறுத்து வெற்றி அமையாது. 3 டி தொழில் நுட்பத்தில் ‘மை டியர் குட்டி சாத்தான்’ படம் படைத்த சாதனையை வேறு எந்த படமும் தர முடியாது. அது ஒரு வரலாறு. அதை எங்களால் மாற்ற முடியாது. எல்லோருக்கும் ஒரு நேரம் வரும். அது போல கன்னட திரையுலகிற்கு இப்போது நேரம் வந்துள்ளது.
தமிழ் படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்கிறீர்கள். ‘நான் ஈ’ படத்திற்கு பிறகு என்னிடம் கதை சொல்ல வந்த இயக்குனர்கள், ‘நீங்க ஹீரோவா? இல்லை வில்லனா? என்று தெரியவில்லை. உங்களை வைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்றார்கள். அதனால் தான் தமிழ் படங்கள் எதுவும் வரவில்லை .
குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அது இந்த படத்தில் உள்ளது. படங்களில் அதிக அளவில் வன்முறை இருப்பதை எங்கள் படத்தில் நாங்கள் குறைத்து கொள்வோம். மற்ற நடிகர்கள் படங்களை பற்றி நான் சொல்ல முடியாது. ராஜமௌலி மட்டும் அல்ல அனைத்து நல்ல இயக்குநர் உடன் பணியாற்ற எனக்கு ஆசை’’ என்றார்.