உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஜோதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஜோதி படத்தை திரையிட்டனர். படம் முடியும் வரை மிகவும் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், படம் முடிந்ததும் பலத்த கரகோஷம் எழுப்பினர். அதுவே ஒரு நல்ல படத்திற்கான அடையாளமாக காணப்பட்டது.
பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் A.V.கிருஷ்ண பரமாத்மா, இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், துணை நடிகர் ஹரி க்ரிஷ், தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி மற்றும் இந்த உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் தாயார் குடும்பத்தாருடன் கலந்து கொண்டார்.
முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் A.V.கிருஷ்ண பரமாத்மா கூறியதாவது,
இப்படம் ஒரு உண்மை சம்பவம் மட்டுமில்லாமல் பல உண்மை சம்பவங்களை உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40000 குழந்தைகள் தொலைந்து அதில் 11000 குழந்தைகள் கண்டுபிடிக்கப் படாமலே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல் போகிறது. இப்படம் ஒரு ஆணோட கோபத்தை விட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும். வரும் ஜூலை 28 அன்று ஜோதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்று கூறினார்.
இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் கூறியதாவது,
முதலில் என்னிடம் படம் வரும்போது படத்தில் பாடல்களே இல்லை. அதிக காட்சிகளில் பல எமோஷனல் விஷயம் இருந்ததால் அதையெல்லாம் பாடல் மூலம் கொடுத்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என நினைத்து என் விருப்பத்தை தெரிவித்தேன். பாடல் சிறப்பாக இருந்ததால் இயக்குனரும், தயாரிப்பாளரும் உடனே சம்மதித்து விட்டனர் என்றார்.
துணை நடிகர் ஹரி க்ரிஷ் கூறியதாவது,
என்னை முதலில் ஒரு சிறிய கதாபாத்திரம் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். படப்பிடிப்புக்கு சென்ற பிறகுதான் தெரிந்தது எனது கதாபாத்திரம் எவ்வளவு பெரியது என்று. மற்றவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அந்த அளவிற்கு எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. படப்பிடிப்பின்போது எனது இரண்டுகால் ஜவ்வும் கிழிந்து மூன்றுமாத காலம் படுத்த படுக்கையாகவே இருந்தேன். அந்த அளவிற்கு கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறோம் என்றார்.
தயாரிப்பாளர் S.P.ராஜாசேதுபதி கூறியதாவது,
இந்த உண்மை சம்பவம் பற்றி தெரிந்தபோது இதை படமாக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். திரைப்படக்கல்லூரியில் A.V.கிருஷ்ண பரமாத்மா இயக்கிய குறும்படத்தை பார்த்து இருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருந்தது. அதனால் இந்த சம்பவத்தை எழுதி இயக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன். படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எந்த குழந்தையிடம் இருந்து, இந்த படத்தை ஆரம்பித்தோமோ அந்த குழந்தையை கொண்டுவந்து உங்கள் முன் காட்டுகிறோம்
எனக் கூறி, அக்குழந்தையையும், குடும்பத்தையும் காட்டும்போது அனைத்து பத்திரிகையாளர்கள் கனிவுடன் பார்த்தனர்.