சினி நிகழ்வுகள்

காமெடி பின்னணியில் ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை ‘ராஜவம்சம்’

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ‘ராஜ வம்சம்’ படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். நாயகனாக சசிகுமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை.

படத்தில் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகிபாபு, ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்ட 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் என்பது சமீபத்திய படங்களில் இல்லாத சிறப்பு. சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைத்துள்ளார் .கலை இயக்கம் சுரேஷ். படத்தொகுப்பு சபு ஜோசப். வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .
படத்தின் நாயகன் சசிகுமார் பேசுகையில், ‘‘கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட இந்த கதையை கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன். வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி டி ராஜா சார். ‘பேட்ட’ படத்தில் நான் நடித்தபோது ரஜினி சார் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். ‘நிறைய படங்களில் நடி. படத்தை தயாரிக்க மட்டும் வேண்டாம்’ என்றார். எதற்கு சொல்கிறேன் என்றால் தயாரிப்பில் அவ்வளவு சிரமமும் உண்டு. அதை பொறுமையாக கையாள திறமை வேண்டும். படத்தை பிரமாண்டமாக தயாரித்த டி.டி. ராஜா சாருக்கு நன்றி. முதல்முறையாக நடிகர் சதீஷ் உடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சி’ என்றார்.
இயக்குனர் கதிர் பேசுகையில், ‘‘படங்களை மக்களுக்கு விரைவில் கொண்டு போய் சேர்க்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்த காலத்தில் உறவுகளையும் உணர்வுகளையும் மறந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். உறவுகளை ஞாபகப்படுத்தும் படமாக இது இருக்கும் அனைத்து வயது மக்களையும் இப்படம் கவரும்’’ என்றார்.
தயாரிப்பாளர் டி டி ராஜா பேசியதாவது.
தமிழ் சினிமாவில் கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படம் நிறைய வந்துள்ளது. எப்போதும் போல் சண்டை, பிரச்சனை ,இறுதியில் ஒன்று சேர்வது போல் இல்லாமல் இப்படம் வித்தியாசமாக இருக்கும். கலகலப்பாக போகும். ஒரு ஜனரஞ்சகமான காமெடி திரைப்படமாக இது எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்றார்.
எடிட்டர் சாபு ஜோசப் பேசுகையில், ‘‘இந்தப்படத்தில் நான் பணிபுரிய முக்கிய காரணம் கதிர். நாங்கள் பல ஆண்டு நண்பர்கள். இப்படத்தை எடிட் செய்தது புதிய அனுபவம். ஒரு சீன் எடுத்துக்கொண்டால் அதில் எல்லோருக்கும் வசனம் இருக்கும் .அதை ட்ரிம் பண்ணி கொண்டு வந்தது எனக்கு சவாலாக இருந்தது .இப்படத்தில் சசிகுமார் சார் ஒரு ஐ.டி. பையனாக ஸ்டைலாக இருக்கிறார். நிக்கி கல்ராணியின் முதல் படத்தில் நான் எடிட்டராக பணிபுரிந்து இருக்கிறேன் .இது இரண்டாவது படம். இப்படத்தில் நடித்த எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்’’ என்றார்.
நடிகை ரேகா பேசுகையில், ‘‘நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன். ஆனால் தலைமுறைகள் மாற மாற அந்த கூட்டுக்குடும்பம் சிறிதாக மாறும். இந்த ஒரு சூழ்நிலையில் தான் இப்படத்தில் நான் நடித்தேன். 40-க்கும் மேற்பட்ட நடிகர்களை வைத்து படம் இயக்குவது சாதாரண விஷயம் அல்ல. இயக்குனர் கதிர் அதை சிறப்பாக கையாண்டு உள்ளார். கண்டிப்பாக இப்படம் உறவுகளை மேம்படுத்தும்’’ என்றார்.
படத்தின் நாயகி நிக்கி கல்ராணி பேசுகையில், ‘‘ராஜ வம்சம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை. ஆனால் இப்படத்தில் ஒரு பெரிய வீட்டில் உண்மையாகவே ஒரு கூட்டுக்குடும்பம் போல் வாழ்ந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் கதிர் சுந்தர்.சி.யின் உதவியாளர். மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கதிர் பிடிவாதமாக இருந்தார் .அப்பொழுதுதான் இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிப்பார்கள் என எண்ணினார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்’’ என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *