சினிமா செய்திகள்

அசத்தலான ஆவிக்கதையில் ‘அரண்மனை-3’

சுந்தர்.சி. இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த ‘அரண்மனை, அரண்மனை-2’ இரண்டு படங்களுமே ஹிட்டடித்த நிலையில், தற்போது ‘அரண்மனை-3’ படத்தையும் திரைக்கு கொண்டு வர இருக்கிறார். ஆவிக்கதைக்கு குடும்பங்கள் கொண்டாடும் விதத்தில் திரைக்கதை அமைப்பது இவரது வெற்றி சூத்திரம்.

ஆர்யா, ராசிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்–ஷி அகர்வால், யோகிபாபு, மனோபாலா, வின்சென்ட் அசோகன், வேல.ராமமூர்த்தி, சம்பத், மதுசூதனராவ், நளினி, விச்சு விசுவநாத் என இணைந்த இந்த நட்சத்திரக் கூட்டத்தில் முக்கிய கேரக்டரில் சுந்தர்.சி.யும் இருக்கிறார். படத்தை அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரிக்க சி.சத்யா இசையமைக்கிறார்.
படம் வருகிற 14-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், நடந்த செய்தியாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் ஆர்யா பேசியதாவது.
‘‘இந்த படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி. சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவரை சந்தித்தேன். ஆவி பின்னணியிலான இந்த கதையைஅவர் சொன்னபோது, ‘பேய் படத்தில் எனக்கு எப்படி நடிப்பது என்று தெரியவில்லையே’ என்று கூறினேன். அது மிகவும் ஈசி தான். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்னார்.சொன்னபடியே எனக்கான அந்த கேரக்டரில் என்னை உருவாக்கி விட்டார். இந்த படத்தில் விவேக் சாருடன் நடித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியாதவை. நான் அவரது மிகப்பெரிய ரசிகன். படத்தில் பாடல்களுக்கு மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார் சத்யா. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாவதில் எனக்கு மகிழ்ச்சி’’ என்றார்.
படத்தின் நாயகிகளில் ஒருவரான ராசிகண்ணா பேசுகையில், ‘‘இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி ,குஷ்பூ ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்’’ என்றார்.
இசையமைப்பாளர் சி.சத்யா பேசகையில், ‘‘இந்த படம் எனக்கு 25 வது படம். படத்திற்கு பின்னணி இசை அமைக்க எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த லாடௌன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு சிறப்பாக படத்திற்கு இசை அமைத்துள்ளேன். அரண்மனை த்தின்மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகம்’’ என்றார்.
மனோபாலா பேசுகையில், ‘‘குஜராத்தில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்தோம். காலையில் 7 மணிக்கு ஷூட்டிங் சென்று விட்டு இரவு பத்து மணிக்கு திரும்புவோம் . படப்பிடிப்பு போவதே தெரியாது. இதில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது விவேக் சாருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை அவரின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது’’ என்றார்

இயக்குனர் சுந்தர்.சி. பேசுகையில், ‘‘நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அரண்மனை பாகங்கள் இரண்டும் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று எல்லாரும சொல்வார்கள். ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது .அதற்கான கதையும் .நடிகர்கள், தொழில் நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே அது சாத்தியம். அதுவும் இப்போது நிறைவேறியிருப்பதில் மகிழ்ச்சி.
மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து விட்டு மட்டுமு் செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா.அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா ராசி கண்ணா, சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.
அரண்மனை பாகம் ஒன்றை உதயநிதி அவர்கள் வெளியிட்டார். தற்போது அவரே அரண்மனை 3 திரைப்படத்தையும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி அவர்கள் மட்டும்தான்.
அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர் தான் .தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னவரும் அவர் தான். என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படம் தான். படத்தை பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அதற்கேற்ப அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 ரசிகர்களை கவரும் நோக்கில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் இரு பாகங்களை போல இதுவும் வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *