‘‘என்ன மாதிரியான கோல்மால் செய்தாவது…’’
ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் பி. வினோத் ஜெயின் தயாரிக்க, பொன் குமரன் இயக்கத்தில், நடிகர் ஜீவா, மிர்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகும் புதிய திரைப்படம் “கோல்மால்”.
முழுக்க முழுக்க மொரிஷியஸ் தீவில் படமாக்கப்படவுள்ள இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாடகர் மனோ சோனியா அகர்வால், சஞ்சனா சிங், சாது கோகுல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் பூஜை சென்னை ஸ்டார் ஒட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடந்தது.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.வினோத் ஜெயின் பேசுகையில், ‘‘கோல்மால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. முழுக்க முழுக்க வெளிநாட்டில் இப்படத்தை எடுக்கவுள்ளோம். இயக்குநர் பொன் குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா, மிர்சி சிவா, தான்யா ஹோப், பாயல் ராஜ்புத் நடிக்கிறார்கள். எங்கள் ‘மிருகா’ படத்திற்கு தந்த ஆதரவை இந்த படத்திற்கும் தாருங்கள்’’ என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ‘‘என் கண்ணுக்கு இந்த விழா பூஜை மாதிரி தெரியவில்லை சக்ஸஸ் பார்ட்டி மாதிரி தெரிகிறது. இந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஜீவா, சிவா இரு ஹீரோக்களையும் தெரியும் நல்ல படங்களை தருபவர்கள். தயாரிப்பாளர் என் குடும்ப நண்பர், அவர் படத்தை, எவ்வாறு வியாபாரம் செய்வார் என தெரியும். நான்கு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும்’’ என்றார்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி பேசுகையில், ‘‘நான் இந்த பட இயக்குநரிடம் ‘என்ன கோல்மாலாவது செய்து, தயாரிப்பாளருக்கு மால் சம்பாதித்துக் கொடு’ என சொன்னேன். ஜீவா, சிவாவுக்கு இப்படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்தப்படம் இந்தியில் பெரிய வெற்றிப்படம். அதே போல் தமிழிலும் வெற்றி பெறும். அனைத்து கலைஞர்களுக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்’’ என்றார்.
இயக்குநர் பொன்குமரன் பேசியதாவது.
‘‘நான் முதல் படம் பண்ணுவது போன்ற உணர்வு உள்ளது. சாருலதா படத்தை கர்நாடகாவிலேயெ முடித்து விட்டேன். பல காலம் தமிழில் படம் செய்ய ஆசைப்பட்டேன். கொரோனா காலத்தில் இந்த தயாரிப்பாளரை சந்தித்தேன். அவரை பயமுறுத்தும்படி சின்ன பட்ஜெட்டில் கதை சொல்லி ஓகே செய்து விடலாம் என எண்ணி கதை சொன்னேன். ஆனால் அவர் பயப்படவில்லை. அடுத்து அவரை சிரிக்க வைக்க காமெடி கதை சொன்னேன். தயாரிப்பாளர் இதை செய்யலாம் என்று சொன்னார். இயக்குனர்கள் பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார் இருவரிடமும் வேலை செய்தேன் அவர்களுக்கு என் நன்றி’’ என்றார்.
நடிகர் மிர்சி சிவா பேசியது….
ஜீவா உண்மையிலேயே எனக்கு நெருக்கமான சகோதரர். அவர் தான் இந்தப் படத்தின் கதையை கேட்கச் சொன்னார். அவர் சொன்ன மாதிரி கோல்மால் 2 லண்டன், கோல்மால் அமெரிக்கா என தொடர்ந்து செய்யலாம். வினோத் ஜெயின் சார் இந்த கொரோனா காலத்தில் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை திட்டமிடுவதற்கு நன்றிகள். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனா காலத்தில் பொன்குமரன் திரைக்கதையில் சூப்பராக வேலை செய்துள்ளார். ஜீவா என் டார்க்கெட்டை உடைத்து கொண்டே இருக்கிறார். போன படத்தில் அவர் ரன்வீர்சிங்குடன் நடித்தார் இப்போது என்னுடன் நடிக்கிறார், நான் அகில உலக ஸ்டார் என்பதால் பிரச்சனையில்லை. தயாரிப்பாளர் அழகாக அவரது டிவின்ஸ் குழந்தைகள் பிறந்த நாளை இங்கு கொண்டாடி விட்டார். இதே போல் திட்டமிட்டு நிறைய படங்கள் செய்ய வேண்டும் நன்றி’’ என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில், ‘‘சிவா உள்ளே வரும்போதே கல்யாண விழா மாதிரி இருக்குன்னு சொன்னார். இந்தப்படமே ஒரு விழா மாதிரி தான் இருக்கும். சிவா உடன் நடிக்கும் போது சாதாரணமாகவே கலாய்ப்பார். சிவாவுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது. கலகலப்பு மாதிரி இப்படமும் ஒரு காமெடி கலாட்டவாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப்படம் வெற்றி பெற்றால் கோல்மால் தொடர்ந்து சீரிஸாக செய்யலாம் என முடிவெடுத்துள்ளோம். சக்ஸஸ் மீட்டில் இன்னும் நிறைய சொல்கிறோம் நன்றி’’ என்றார்.
விழாவில் படத்தின் நாயகிகள் பாயல் ராஜ்புத், தான்யா ஹோப், சஞ்சனா சிங், சோனியா அகர்வால், கிரியேட்டிவ் புரொடியூசர் நரேஷ் ஜெயின், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், சுப்பு பஞ்சு, சித்தார்த் விபின் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.