‘படத்தில் எனக்கு மொத்தமே பத்து டயலாக் தான்…’’-சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம், வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க, வில்லனாக ‘உன்னாலே உன்னாலே’ புகழ் வினய் நடிக்கிறார். படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து,கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துள்ளார். பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது…
நிகழ்ச்சியில் நடிகர் வினய் பேசியதாவது.
‘‘நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. கடந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போல இருந்தது. இந்தப்படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும். உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன்’’ என்றார்.
இயக்குநர் நெல்சன் பேசுகையில், ‘‘சிவகார்த்திகேயனின் வழக்கமான படங்கள் போல் இந்த படம் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். இதற்காக அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன் ‘இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள்’ என்றார். அவர் அப்படி சொன்னதும் என் கடமை அதிகமாகி விட்டது. சிவகார்த்திகேயனே தயாரிப்பாளரும் என்பதால், எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்’’ என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் ‘‘இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் ‘செல்லம்மா’ பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ‘ஓ பேபி’ பாடல் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார் என்று தோன்றியது.
உன்னாலே உன்னாலே படம் பார்த்ததில் இருந்து என்கு வினய்யை பிடிக்கும். நான் தான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தின் நாயகி ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும்.
ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும், அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்தப்படத்தை அறிவித்ததில் இருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தவர் அனிருத் தான். இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும்’’ என்றார்.

