சோனு சூட்டுக்குப் புகழாரம் சூட்டிய விஷால்
நீங்கள் கடவுள் தந்த பரிசு என, சோனு சூட்டுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் விஷால்.
கரோனா ஊரடங்கு தொடங்கியவுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் கடும் அவதிக்கு உள்ளானார்கள். அந்தச் சமயத்தில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள், தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்குத் திரும்ப உதவிகள் செய்தார்கள். ஆனால், தொடர்ச்சியாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு, மாநிலம் விட்டு மாநிலம் எனத் தொழிலாளர்களுக்கு உதவத் தொடங்கியவர் சோனு சூட்.
இதனால் ட்விட்டர் தளம் மூலமாகப் பலரும் சோனு சூட்டிடம் உதவிகள் கோரினார்கள். அனைவருக்குமே தன்னால் ஆன உதவிகளைச் செய்யத் தொடங்கினார். சமூக வலைதளங்களில் அனைவருடைய பாராட்டையும் சோனு பெற்றார். தற்போதும் அவரின் உதவிகள் தொடர்கின்றன.
தற்போது படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டதால் சோனு சூட் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரோடு புகைப்படம் எடுத்து பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் சோனு சூட்டைச் சந்தித்துப் பேசியுள்ளார் விஷால். சோனு சூட்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து விஷால் கூறியிருப்பதாவது:
“எனது அன்புச் சகோதரர், அற்புதமான ஆன்மா சோனு சூட்டைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மனித இனத்துக்குக் கடவுள் தந்த பரிசு. நீங்கள் செய்திருக்கும், தொடர்ந்து செய்து வரும் சமூகப் பணிகள் மூலம் எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள். பரிச்சயம் இல்லாதவர்களின் குடும்பங்களுக்காகப் பலரும் இம்மாதிரியான முயற்சிகளைச் செய்ய மாட்டார்கள். நீங்கள் செய்த அத்தனை பணிகளையும் பற்றிக் கேள்விப்பட்டு வாயடைத்துப் போய்விட்டேன். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுங்கள்”.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்