ஜென்ம நட்சத்திரம் – திரை விமர்சனம்

சினிமாவில் இயக்குனராகும் கனவில் இருக்கும் தமன், அதற்காக தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். காதல் மனைவி மால்வி மல்ஹோத்ரா தற்போது கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தனது நண்பன் இல்லத்தில் தங்க வைத்து கதை சொல்லப் போகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. கனவில் சில ஆவிகள் வந்து பயமுறுத்திப் போகிறது.
அரசியல்வாதி வேல. ராமமூர்த்தியின் கார் டிரைவராக, பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்பட, தான் வேலை பார்க்கும் அரசியல்வாதியிடம் கேட்கிறார். பணம் தர மறுத்து விடும் அந்த அரசியல்வாதி அவரை வார்த்தைகளால் காயப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
இதனால் தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் பதுக்கி வைக்கிறார் காளி வெங்கட் .
இது தெரிந்த அரசியல்வாதியின் அடியாட்கள் காளி வெங்கட்டை வெட்டி சாய்க்கிறார்கள். தமன் வீட்டின் முன்பாக விழுந்து உயிருக்கு போராடும் காளி வெங்கட், தமன் அண்ட் கோவிடம், கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கிய இடத்தை சொல்லி விட்டு , மொத்த பணத்தையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரூ.40 லட்சத்தை மட்டும் மகள் ஆபரேஷனுக்கு கொடுத்து மகளின் உயிரை காப்பாற்றி விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார். அதோடு உயிரை விடுகிறார்.
பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் சகிதம் அந்த இடத்திற்கு செல்கிறார். அங்கும் மால்வி தன் கனவில் பார்த்த அதே உருவங்களை பார்க்கிறார். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள். சிலர் கொல்லப்படுகிறார்கள்
மிச்சம் மீதி நண்பர்களையாவது தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? இதுவே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தமன், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிரடியாக சண்டையும் போடுகிறார்.
மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா கனவு காட்சிகளில் பயந்தபடியே நடித்து கவர்ந்து இருக்கிறார். தொழிற்சாலை இருட்டில் வீட்டில் பார்த்த அதே அம்மா- பெண் ஆவியை காண நேரும்போது அந்த பயம் நடிப்பின் உச்சம்.
நாயகனின் நண்பராக மைத்ரேயா, அவரது காதலியாக ரக்ஷா ஷெரின் சிவம், அருண் கார்த்தி ஆகியோர் கொடுத்த கேரக்டர்களில் நிறைவு.
தலைவாசல் விஜய்,காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த், யாசர் பொறுப்பான பாத்திரத் தேர்வுகளில் தங்கள் கேரக்டர்களை நடிப்பால் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
கேஜியின் ஒளிப்பதிவு, nஆவிகள் வரும்
காட்சியில் மிரட்டி வைக்கிறது. சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை திகிலுக்கு பிகில் வாசிக்கிறது. சாத்தானை கடவுளாக நம்பும் கூட்டமும், அவர்களின் நம்பிக்கையும் நிஜமானால் எப்படி இருக்கும்? என்ற கோணத்தில் திரைக்கதை செய்து இருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். நாயகியை அடிக்கடி பயப்படுத்தும் அம்மா- பெண் ஆவிகளின் நோக்கம் என்ன? என்பதை அடுத்த
பாகத்திலாவது சொன்னால் நன்றாக இருக்கும்.
