நாங்கள் – திரை விமர்சனம்
சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் கொண்டிருக்கும் படம்.
1998 இல் நடக்கிற கதை. ஊட்டியில் தனியார் பள்ளி நடத்தி வரும் ராஜ்குமாருக்கு மூன்று மகன்கள். மனைவியை பிரிந்து வாழும் ராஜ்குமாருக்கு மகன்கள் தான் எல்லாமே.
தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து வைப்பதில் தொடங்கி தந்தையின் ஷுவை பாலிஷ் போட்டு வைப்பது வரை எல்லாமே இந்த நண்டு சிண்டுகளான மூவர் தான்.
இந்த மூன்று சிறுவர்களும் அந்த தந்தையிடம் நிம்மதியாக இருந்தார்களா என்றால் அதுதான் இல்லை. சிறு தவறு செய்தாலும் போட்டு புரட்டி எடுத்து விடுவார் தந்தை. இதனால் மூன்று பிள்ளைகளும் அந்த வீட்டில் ஒருவித நடுக்கத்துடனே இருந்து வருகிறார்கள்.
இந்த குடும்பத்தில் அடுத்த கட்ட சோதனையாக ராஜ்குமார் நடத்தி வரும் பள்ளி நஷ்டத்தில் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை. இதனால் பள்ளியை விற்று கடன்களை அடைக்கிறார்.
இந்த நேரத்தில் மறுபடியும் மனைவி அந்த வீட்டுக்குள் வருகிறார். மகன்கள் ஓரளவு வளர்ந்து விட்ட நிலையில் ஒரு தாயாகவும் அவர்களை அரவணைத்துக் கொள்ளலாம் என்பது அந்தத் தாயின் முடிவாக இருக்க, நடந்ததோ வேறு. நாம் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்று கூறி வலுக்கட்டாயமாக மனைவியை வெளியே அனுப்பி வைக்கிறார் அந்த ஹிட்லர் ராஜ்குமார்.
இப்போது ஹைதராபாத்தில் ராஜ்குமாருக்கு ஆசிரியர் வேலை கிடைக்க, மகன்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். வேறு வழி இன்றி மகன்களும் சம்மதம் தெரிவிக்க… அப்போது அவர்கள் வீட்டில் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. அதையும் தாண்டி அவர்கள் பயணம் தொடர்ந்ததா என்பது இயல்பும் நெகிழ்வு மான கதைக்களம்.
கண்டிப்பும் கறாரு மான அந்த அப்பா கேரக்டரில் அப்துல் ரபே அட்டகாசமாக பொருந்தி இருக்கிறார். மகன்களின் வேலைகளில் குறை கண்டுபிடிப்பது, அதற்கு உடனே தண்டனை வழங்குவது, தண்டனையின் போது ஒரு மகன் ஒன் பாத்ரூம் போவது என வார்த்தைகளிலும் செயல்களிலும் மிரட்டும் அந்த தந்தை கேரக்டர் அக்கிரம தாண்டவமே ஆடு கிறது. கல்லுக்குள் ஈரம் மாதிரி தனது பள்ளி ஆசிரியர்களுக்கு கடைசி சம்பளம் கொடுத்து விட்டு என்னை அழ வைக்காதீங்க அவர் உடைந்துபோகும் காட்சி அவர் நடிப்பில் இன்னொரு மேஜிக்.
நடிப்பில் அடுத்த இடம் அந்த மூன்று சிறுவர்களுக்கும். மூத்தவன் மிதுன், அடுத்தவன் ரித்திக், இளையவன் நித்தின் மூவருமே அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களுக்குள்ளான அன்னியோன்யமும், அப்பா வந்த பிறகு அவர் கேட்கும் கேள்விகளுக்கு எப்போது அடி விழுமோ என பதில் அளிக்க பயந்து நடுங்கும் இடங்களிலும் நடிப்பில் அற்புதமாக ஸ்கோர் செய்கிறார் கள். இவர்களின் அம்மாவாக வரும் பிரார்த்தனா குறைந்த நேரமே வந்தாலும் மனதில் நிறைந்து போகிறார்.
இசையமைத்திருக்கும் வேத் சங்கர் தனது பின்னணி இசையால் படத்துக்கு சேர்த்திருப்பது பெரும் பலம் .கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத் தொகுப்புடன் இயக்கவும் செய்திருக்கிறார் அவினாஷ் பிரகாஷ்.
மனைவியைப் பிரிந்து வாழும் தந்தையிடம் வளரும் குழந்தைகள் எப்படி யான மனநிலையில் யில் உள்ளனர் ?அந்தத் தந்தை தனக்குள் குமைந்து கொண்டிருக்கும் அளவுக்கு அவருக்கு நேர்ந்த உளவியல் சிக்கல் தான் என்ன? என்பதை உணர்ச்சிபூர்வமாக திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார் அவினாஷ் பிரகாஷ். மனைவிக்கும் அவருக்குமான விரிசல் எதற்காக என்பதை சொல்லாததால் அது தொடர்பான காட்சியில் மட்டும் அழுத்தம் மிஸ்ஸிங்.