“கண்ட கனவு பலித்தது” -நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் அறிமுக நாயகன் பரவசம்!!
நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி ஊடகம் மற்றும் அச்சு செய்தியாளர் சந்திப்பில் படக் குழுவினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து உள்ளனர்.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.நாயகியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். ரம்யா ரங்கநாதன், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன், இவர்களுடன் பிரபலமான மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சித்தார்த்தா ஆகியோரும் இருக்கிறார்கள்.
அதோடு மூத்த நடிகர்களான ஆர். சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஸ்ரீதேவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், பிரியங்கா மோகன் ‘கோல்டன் ஸ்பாரோ’ என்ற பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்த பாடல் ‘காதல் ஃபெயில்’, ‘யெடி’ மற்றும் ‘புள்ள’ போன்ற பாடல்களுடன் தரவரிசையில் முன்னணி இடத்தை பெற்றுள்ளது.

அறிமுக நடிகர் பவிஷ் நாராயண் இந்த படத்தில் அறிமுகமாவதை ‘கண்ட கனவு பலித்தது’ என்று சொல்லி மெய் சிலிர்த்துக் கொண்டார்.
அனிகா சுரேந்திரன் உணர்ச்சிமிக்க மற்றும் ஆழமான கதை என்று படம் பற்றி ஒரு வரியில் முடித்துக் கொண்டார்.
இந்தத் படத்தைப் பற்றி ஏனைய நட்சத்திரங்கள் ரம்யா மற்றும் ராபியா கூறுகையில், “இந்த படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கும் கதை அம்சம் கொண்டது என்றனர்.

இந்தப் படத்தில் இன்னொரு அறிமுக நடிகரான வெங்கடேஷ் மேனன், முன்னதாக தனுஷ் இயக்கிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனுஷ் வழங்கியதால் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தனுஷ் போன்ற ஒரு படைப்பாளியுடன் பணியாற்றுவது ஒரு கனவு பலிக்கும் தருணமாகும். கடந்த காலங்களில் அவருக்கு உதவி செய்ததால், அவரது இயக்கத்தில் கேமராவுக்கு முன்னால் காலடி வைப்பது உற்சாகமாக இருந்தது என்றார்.

