செய்திகள்

பயாஸ்கோப் – திரை விமர்சனம்

கதைக்குள் கதை என்பார்களே அப்படி ஒரு கதை இது. கிராமத்து இளைஞர் ஒருவர் தங்கள் ஊர் மக்கள் உதவியோடு அவர்களையும் நடிக்க வைத்து படம் எடுத்த இந்த கதையில் போதிய அனுபவம் இன்றி படம் எடுக்க வருபவர்களுக்கு
பாடமும் நடத்தி இருக்கிறார்கள்

2011 ஆம் ஆண்டு சங்ககிரி ராச்குமார் இயக்கத்தில் வெளியான வெங்காயம் திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரை உலக பிரபலங்கள், அரசியல் விற்பன்னர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தாலும் வர்த்தகரீதியில் படம் கல்லா கட்டவில்லை.

தனது குடும்பத்தில் உள்ளவர்கள், ஊர் மக்களை வைத்துக் கொண்டு முழு படத்தையும் எடுத்த சங்ககிரி ராச்குமாரை பாராட்டாத பத்திரிகை இல்லை எனலாம். அதில் ஒரு பத்திரிகை இவர் படம் எடுத்த கதையை கூட ஒரு படமாக எடுக்கலாம் என்று குறிப்பிட்டு படக் குழுவினருக்கு பெருமை சேர்த்தது. இந்தப் பாராட்டு இயக்குனர் மனதில் புது உத்வேகம் ஏற்படுத்த, பல போராட்டங்களுக்கு மத்தியில் வெங்காயம் படம் எடுத்த கதையை, அதற்காக பட்ட பாடுகளை சொல்வதே இந்த பயாஸ்கோப்.

கேமரா உள்பட படப்பிடிப்பு கருவியின் பெயர் கூட தெரியாத கிராமத்து மக்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு படம் எடுக்க முன்வந்ததற்காகவே இயக்குனர் ராச் குமாரை கொண்டாட லாம். சொந்தமாய் கேமரா வாங்குவதற்கு தற்கொலை நாடகமாடி பெற்றோரிடம் பணம் வாங்குவது தொடங்கி இறுதியில் வீட்டை அடகு வைத்து படத்தை முடிக்கும் வரை ஒரு சினிமா கலைஞனின் போராட்டம் திரையில் விரிகிறது.

எடுத்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றதா? அடகு வைத்த வீட்டை மீட்க முடிந்ததா? என்பது
நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சங்ககிரி ராச்குமார் ஒரு அறிமுக தயாரிப்பாளரின் வலி யை காட்சிகள் வழியே நமக்கு கடத்தி விடுகிறார்.முக்கிய கேரக்டரில் கிராமத்து பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி. தாத்தாக்கள் முத்துசாமி. குப்புசாமி எல்லோருமே கிராமத்து மாந்தர்களாக கதையில் வலம் வரும் இடங்கள் அத்தனை அழகு. அதில் பாதி சிரிப்பு மயம். குறிப்பாக முதலமைச்சர் கனவில் இருக்கும் அந்த வெள்ளையம்மாள் பாட்டிக்கு விருதே தரலாம்.

அப்பா வேடத்தில் வரும் எஸ்.எம்.மாணிக்கம், ஜோதிடராக வரும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக வரும் தர்ம செல்வன் முக்கிய வில்லன் பாத்திரங்களாக நடிப்பில் முன்னிற்கிறார்கள். காதல் ஜோடிகளாக ரஞ்சித்-நிலா பொருத்தமான ஜோடி.
சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ், சேரன் சிறப்பு.

இசை அமைத்த தாஜ் நூர், ஒளிப்பதிவாளர் முரளி கணேஷ் காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்கி விடுகிறார்கள். தனது முதல் படத்தின் அனுபவங்களை படம் எடுக்கும்போது பட்ட வலி வேதனைகளை படமாக கொடுத்திருக்கும் சங்ககிரி ராச்குமார், படம் எடுப்பது கூட கடினம் இல்லை… அதை வியாபாரம் செய்வது எத்தனை கடினம் என்பதை அனுபவ ரீதியாக உணர்த்தி இருக்கிறார்.

இந்த பயாஸ்கோப் மூலம் போதிய அனுபவம் இன்றி படம் எடுக்க வரும் அத்தனை பேருக்கும் இயக்குனர் நடத்தியிருப்பது நல்லதோர் பாடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *