மகாராஜா விமர்சனம் 4/5
ஒரு நடுத்தர சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி.. இவரது மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.. மகளின் சிறுவயதிலேயே வீடு இடிந்த விபத்தில் தன் மனைவியை இழக்கிறார்.. அப்போது தன் மகளைக் காப்பாற்றிய ஒரு குப்பை தொட்டியை லட்சுமி என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் பத்து நாட்கள் பள்ளி முகாமிற்காக தன் மகள் வெளியூர் சென்று இருக்கிறார்.. அந்த சமயத்தில் வீட்டில் உள்ள லட்சுமி என்ற குப்பைத் தொட்டியை 3 திருடர்கள் எடுத்து செல்கின்றனர்.. இதனை எடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார் விஜய் சேதுபதி.
ரூபாய் 500 கூட மதிப்பில்லாத குப்பைத்தொட்டி காணவில்லை என்ற புகாரை ஏற்க மறுக்கின்றனர் போலீஸ் நட்டி மற்றும் அருள் தாஸ்.. குப்பைத் தொட்டியை கண்டுபிடித்தால் 5 லட்சம் தருகிறேன் என்கிறார் விஜய் சேதுபதி.. எனவே காவல்துறை வேட்டையில் இறங்குகிறது.
ஒன்றுமில்லாத குப்பை தொட்டிக்கு ஏன் விஜய் சேதுபதி இப்படி மெனக்கெடுக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை..
தனது 50-வது படம் ஒவ்வொரு நடிகருக்கும் முக்கியமான படமாக அமையும்.. சிலருக்கு தோல்வி படமாக அமையும் இதில் மெகா வெற்றியை கொடுக்க முன்வந்துள்ளார் விஜய் சேதுபதி.. அதை நிறைவேற்றி இருக்கிறார் இயக்குனர் நித்திலன்..
முடி வெட்டும் நபர்.. 15 வயது மகளுக்கு அப்பா.. நாயகி இல்லாத நாயகன்.. வில்லனை தேடும் ஹீரோ என தன் கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மகளுக்காக அவர் பிடிவாத பிடிக்கும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கவரும். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதியின் கொடூர அவதாரம் வேற லெவல் ரகம்..
விஜய் சேதுபதியின் மகளாக நடித்தவரும் சிறப்பு.. அவரது குரலில் கூட ஒரு கம்பீரம்.. படத்தில் நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டி இருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் நிறைய திருப்புமுனை இருப்பதால் விரிவாக சொல்ல இயலாது..
பள்ளியில் பி டி டீச்சராக மம்தா மோகன் தாஸ், வில்லன் அனுராக் ஆசியாவின் மனைவியாக அபிராமி.. இருவரும் தங்கள் கேரக்டரில் சிறப்பு.. அதிலும் அபிராமியின் அசத்தல் நடிப்பு கூடுதல் அழக..
வில்லனின் நண்பனாக வினோத் சாகர், போலீசாக திருடன் கல்கி உள்ளிட்டோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.
போலீஸ் நட்டி மற்றும் அருள்தாஸ் இருவரும் கம்பீரம் கலந்த காமெடி செய்திருக்கின்றனர்.. கொஞ்சம் வில்லத்தனமும் கூட..
போலீஸ் அதிகாரிகளாக நட்டி, முனிஷ்காந்த், போலீஸ் இன்பார்மர் ஆக சிங்கம் புலி, அனுராக் கஷ்யப், பாய்ஸ் மணிகண்டன், சிங்கபம் புலி உள்ளிட்டோர்.. இதுவரை ஏற்காத வேடத்தில் சிங்கம் புலி நடித்திருக்கிறார்.. இவரது கேரக்டர் படத்தில் பெரிய திருப்புமுனை.
அது போல் பல வருடங்களுக்குப் பிறகு பாய்ஸ் மணிகண்டனுக்கும் பக்காவாக அமைந்திருக்கிறது..
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுத அஜீனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய பிலோமீன் ராஜ் எடிட்டிங் செய்திருக்கிறார்.
அனல் அரசு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.. இந்த படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பெரிய அளவில் பேசப்படும்.. மகளுக்காக எழுதப்பட்ட பாடலின் வரிகள் ரசிக்க வைக்கிறது..
அதுபோல இடைவேளை வரை சற்று குழப்பமான எடிட்டிங் செய்யப்பட்டிருப்பதாக தெரிந்தாலும் அதற்கு அனைத்தும் தீர்வாக கிளைமாக்ஸ் காட்சியில் அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
குரங்கு பொம்மை படத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் நித்திலன். இந்த படத்தில் 2வது வெற்றியை கொடுத்திருக்கிறார்.. 3வது வெற்றி நிச்சயம் ஹாட்ரிக் வெற்றியாக தான் இருக்கும்.. தன் திரைக்கதையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு படைப்பாளி அழகாக திரைக்கதை அமைத்து அதற்கான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து விருந்து படைத்திருக்கிறார்.
குரங்கு பொம்மை என்ற முதல் படத்தில் முழுக்க முழுக்க குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.. ஆனால் மகாராஜா படத்தில் குடும்பம் மகள் பாசம் என இருந்தாலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.. ஆனா இது கதைக்கு தேவை தான்..
எந்த கமர்சியல் விஷயமும் கலக்காமல் யதார்த்த ஒரு மனிதனின் வாழ்வை பதிவு செய்துள்ளனர்.. மகாராஜா மகுடம் சூடு ராஜா.