சினிமா செய்திகள்

எல்லா காலத்திலும், எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். – இயக்குநர் லெனின்

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் பல முக்கிய திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். மிகவும் மகிழ்வான தருணம். இந்த மேடையில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கார்த்திக் அவர்களுக்கு. அவர் மூலமாகத் தான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன். அன்பின் சங்கிலியால் அன்பின் பிணைப்பால் எவ்வளவு கட்டி இழுத்தாலும் வலிக்காது. கார்த்திக் அண்ணாவின் அன்பு அப்படிப்பட்டது. மேலும் சிலருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். அதில் முதலானவர் குபேரன் அண்ணா அவர்கள். ‘மங்கை’ போன்ற பொறுப்பான படங்களை அவர் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ‘மங்கை’ ஒரு நல்ல கலைப் படமாகவும், வணிக ரீதியாக வெற்றியடையும் படமாகவும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன். நல்ல ஒரு ஆக்கபூர்வமான விரிந்த பொருள் கொண்ட கதைகள் வணிகரீதியாகவும் வெற்றி பெறும் போது, பெரிய பெரிய கலைப் படைப்புகள் நிறைய வரும் என்று நினைக்கிறேன். வெறும் வசூலுக்காகவே திரைப்படம் இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும். அதற்கு நாம் ஒரு புறம் பார்வையாளர்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கிறது. ஒரு புறம் இலக்கியத்தின் வாயிலாகவும், மறுபுறம் சிறந்த உலகத் திரைப்படங்களை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதின் மூலமாகவும், சிறுகதை, நாவல் மற்றும் கவிதை போன்ற வாசிப்பு பயிற்சியினை பள்ளி வகுப்புகளில் இருந்து துவங்குவதன் மூலமாகவும் இந்த மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன்.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.ஜே.ஸ்டார் அவர்கள் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும். அது போல் எனக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும். ‘மங்கை’ திரைப்படம் எனக்கும் ஒரு சிறப்பான படம் என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி, வணக்கம்.

ஸ்டண்ட் இயக்குநர் ராம்குமார் அவர்கள் பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். இப்படத்தில் நான் பணியாற்ற காரணமாக இருந்த கார்த்திக் அவர்களுக்கு நன்றி. இப்படத்தின் பாதி வெற்றியை இசையமைப்பாளர் தன் பாடல்களில் நிரூபித்துவிட்டார். சில பாடல்கள் கேட்க கேட்க தான் பிடிக்கும். இப்படத்தின் இரண்டு பாடல்களும் கேட்டவுடனே பிடித்துவிடும். இயக்குநரின் படம் எப்போதும் தோற்காது. ஒரு படத்தின் ஹீரோ என்பவர் இயக்குநர் தான். இப்படத்திற்கு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் ஆதரவு தர வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

படத்தொகுப்பாளர் பார்த்திபன் பேசும் போது,

இது தான் எனக்கு முதல் படம், முதல் மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணமாக இருக்கும் சிலருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இல்லை. என் மனைவிக்கு நன்றி. அவரின் தீவிரமான பிரார்த்தனை தான் நான் இன்று இங்கு நிற்பதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். என் முதல் தயாரிப்பாளர் ஜாஸ்வா அவர்களுக்கும், இயக்குநர் அருள் சக்தி முருகன் அவர்களுக்கும் நன்றி. என் குரு எடிட்டர் ஆண்டனி சாருக்கும் நன்றி. இப்படத்தின் இயக்குநருக்கு நன்றி. படத்தில் பணியாற்றத் துவங்கும் முன்னர் நான் இரண்டு முறை மட்டுமே இயக்குநரைச் சந்தித்தேன். என் வேலைகளைப் பார்த்துவிட்டு, உடனடியாக என் கையில் அட்வான்ஸ் கொடுத்து, நீங்கள் தான் இப்படத்தின் எடிட்டர் என்று கூறிவிட்டார். எனக்கு இப்படத்தில் எடிட்டிங் பணிகளில் முழு சுதந்திரம் கொடுத்தார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. என் மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி. படத்தின் நாயகி ஆனந்தி அவர்கள் ஒவ்வொரு ஷாட்டிலும் அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். அது கோபமோ சிரிப்போ ஒவ்வொரு ப்ரேமிலும் அவ்வளவு அழகாக இருந்தார். கார் சீக்குவன்ஸ் காட்சிகளில் துஷி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.ஏனென்றால் ஒரே நேரத்தில் கார் ஓட்ட வேண்டும், டயலாக் பேச வேண்டும், பெர்ஃபாமன்ஸ் செய்ய வேண்டும். மலைப்பகுதியில் கார் ஓட்டுவது எளிதல்ல… அதை திறம்பட செய்த நாயகனுக்கு வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட இயக்குநர் ரோஹந்த் பேசும் போது…

எப்படி குபேந்திரன் குடும்பத்திற்கு இது மகிழ்ச்சியான தருணமோ அதே போல் தான் எனக்கும் இது மகிழ்ச்சியான தருணம். எல்லா உதவி இயக்குநர்கள் எழுதும் கதையும் ஏதாவது ஒரு டீக்கடையில் இருந்து தான் துவங்கியிருக்கும். இப்படத்தின் கதையும் அப்படித்தான் துவங்கியது. இக்கதையினை மிகவும் எளிமையாக என்னிடம் சொல்லி, இதை ஒரு ஐபோனில் ஷூட் செய்ய வேண்டும், ஒரு டிராவலிங் ஸ்கிரிப்ட் 40 நிமிடங்களுக்குள் வரும் என்று தான் பேசத் துவங்கினோம்.. ஐபோனில் எடுக்க வேண்டும் என்று நினைத்த படம் ஜாஃபர் சாரை சந்தித்தப் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் பிரம்மாண்ட படமாக வளர்ந்திருக்கிறது,.
ஆனந்தி அவர்களின் நடிப்பைப் பற்றி கேட்கவே வேண்டாம். துஷியின் கைகளில் காரைக் கொடுத்தப் பின்னர் அவரின் முழுமையான நடிப்புத் திறமை வெளிவந்தது. இசையமைப்பாளர் தீசன் எனக்கு அறிமுகம் கிடையாது. அவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
சமத்துவம், சமூக நீதி, பாலின சமத்துவம் எல்லாம் சேரும் போது சமுதாயம் உயரும். அந்த வகையில் இப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும்.

‘மேற்குதொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின் பேசும் போது…

கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கின்ற அடிப்படையில் ‘மங்கை’ படம் உருவாகி உள்ளது என்று தெரியும். இப்படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளைப் பார்த்தப் பின்னர் தான் டைட்டில் டிசைனை கவனித்தேன். ஆண் கதாநாயகர்களை மையப்படுத்திய டைட்டிலைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும். ஆனால் இங்கு மங்கை கீறப்பட்டு இருக்கிறது, காயப்பட்டிருக்கிறது, உடைந்திருக்கிறது. சிதைந்திருக்கிறது, தாக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழ் டிராவல் ஆஃப் வுமன் என்கின்ற கேப்ஷன் இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய அரசியல். எல்லா காலத்திலும் எல்லா சாதியிலும் எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் ‘மங்கை’ என்கின்ற இந்த டைட்டில் மற்றும் திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள். விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், பாடலாசிரியர்கள் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாயகன் துஷிக்கும் வாழ்த்துகள். தோழர் ஆனந்தி எப்போதும் ஆழ அகலக் கதைகளையே தேர்ந்தெடுப்பார். அவர் தேர்வு செய்யும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். கடைசி வரைக்கும் இப்படியே இருங்கள் தோழர் ஆனந்தி. பெண்களை உடலாகப் போதிக்காமல் ஒரு உயிராக பாவிக்கும் எண்ணத்தை இப்படம் முன்னெடுக்கும் என்று கூறி வாழ்த்து கூறி விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.