Latest:
சினி நிகழ்வுகள்

‘ருத்ரன்’ பட வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய லாரன்ஸ்

தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்திற்கு சென்ற படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், மற்றும் கலை இயக்குநர் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர், அங்குள்ள சுமார் 300 மூத்த குடிமக்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். ‘ருத்ரன்’ திரைப்படத்தின் வெற்றியை அங்குள்ளவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின் போது பேசிய ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார், ருத்ரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு திரைப்படத்தின் வெற்றியை இதுபோன்று பயனுள்ள முறையில் கொண்டாடுவது மிகுந்த மன மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாக கூறினர்.

இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான் என்பதால், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

‘காஞ்சனா’ வெற்றிக்குப் பின்னர் 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் -சரத்குமார் இணைந்து ‘ருத்ரன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது