20 நாட்களில் எடுக்கப்பட்ட திகில் படம் ‘மிரள்’

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு தயாரிப்பில், எம்.சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்.’ புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டில்லி பாபு பேசுகையில், ‘‘ஒரு தயாரிப்பாளராக எங்களது பொறுப்பு அதிகம். படத்தின் கதை, நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைத்தையும் கதைக்கு ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் கதைக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்போம். நாங்கள் எடுத்த பெரும்பாலான படங்கள் முதல் பட இயக்குனரின் படங்கள். இந்த படம் 20 நாளில் எடுக்கப்பட்டாலும், இந்த படம் பெரிய உழைப்பை கொண்டுள்ளது. முன் தாயாரிப்பிற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. இந்த படத்தில் பல சவால்களை சந்தித்து தான் உருவாக்கினோம். பரத், வாணி போஜன் இருவரும் இந்த படத்தை முழுமையாக தாங்கி பிடித்து இருக்கிறார்கள். இந்த படம் குடும்பங்கள் பார்க்ககூடிய ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.
படத்தின் நாயகன் பரத் பேசுகையில், ‘‘சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லி பாபு அனைவரையும் மதிக்கக் கூடிய ஒரு நபர். இந்த கதை பற்றியும், இயக்குனர் பற்றியும் நான் கூறிய போது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒப்புக் கொண்டார். இந்த படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் ஒருசேர ஒத்துப் போகக்கூடிய நபர் இயக்குனர். இந்த படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கே.எஸ். ரவிக்குமார் சாருடனும், வாணி போஜனுடனும் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை’‘ என்றார்.
நடிகை வாணி போஜன் பேசுகையில், ‘‘இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். பரத் மிகச்சிறந்த நடிகர், அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது’’ என்றார்.
இயக்குநர் சக்திவேல் பேசுகையில், ‘‘இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க காரணம், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு பங்களிப்பே.. பரத் சார் தான் இந்த படம் உருவாக முதல் காரணம், அவர் மூலமாக தான் தயாரிப்பாளர் இந்த கதையை கேட்டு தயாரிக்க ஒப்புக் கொண்டார். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதையை புரிந்து கொண்டு படத்திற்காக உழைத்தனர். வாணி போஜன் படத்தின் கதையை உணர்ந்து அதற்காக கடின உழைப்பை கொடுத்தார். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.
