சினி நிகழ்வுகள்

‘‘இந்த படத்தை தயாரித்தபோது ஒரு தயாரிப்பாளர், ஒரு நடிகரின் வலியை உணர்ந்தேன்…’’ தெற்கத்தி வீரன் பட விழாவில் இயக்குனர் சாரத் பேச்சு

சந்திரபாபு பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் புதுமுகம் சாரத் இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘தெற்கத்தி வீரன்.’ இந்த படத்தின் பாடலாசிரியரும் இவர் தான். முழுமையான பொழுதுபோக்கு, ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் அசோக் பேசியதாவது..

இந்த படவிழா எனது குடும்ப விழா போல் தான். இந்தப் படம் எனக்கு புதிய வாழ்க்கையை ஆரம்பித்து வைத்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவே எல்லாவற்றையும் செய்கிறார் என்று அறிந்தபோது டைரக்டர் டி.ராஜேந்தர் தான் நினைவுக்கு வந்தார். இந்த படத்தில் என்னை நடிக்கக் கேட்டபோது ‘நான் ஹீரோவாக சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் சரியாக வருமா என கேட்டேன். கதை கேளுங்கள் என்றனர். கதை சகோதரத்துவ போரை சொல்வதாக இருந்தது. அது எனக்கு பிடித்தது படத்தில் நடித்தபோது சாரத் எனும் நபர் அண்ணனாகி விட்டார். இந்தப் படத்தின் தூண் இவர் தான். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

எடிட்டர் சாபு ஜோசப் பேசியது…

தெற்கத்தி வீரன் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முழுக்காரணம் சாரத் அவர்கள் தான் அவரின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் எல்லா வேலையும் பார்க்கிறார் என்கிறார்கள். விட்டால் எடிட்டிங்கும் செய்திருப்பார். அவருக்கு எடிட்டிங் அறிவும் இருக்கிறது. அவர் மனதிற்கு இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டாகும்.

நடிகர் K ராஜன் கூறியதாவது..,

பிணத்தை வைத்து யூ டூபர்கள் பிழைக்கிறார்கள். தமிழ்த் திரையில் சிறந்து விளங்கிய நடிகை மீனா கணவர் இறப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள் அதை பார்க்க மனது கஷ்டமாக இருக்கிறது. இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தப் படத்திற்கு தமிழில் படத்திற்கு தலைப்பு வைத்திருப்பது மிகச்சிறப்பான விஷயம். இந்த திரைப்படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. எடிட்டரின் பணி பாராட்டும்படி உள்ளது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசை இந்த படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் சாரத் செய்துள்ளார். அவருடைய திறமையை நான் பாராட்டுகிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கூறியதாவது..,

படத்தின் அனைத்து பாடல்களையும், இயக்குனர் சாரத் தான் எழுதியுள்ளார், ஒரு புது கவிஞர் போல் அவரது எழுத்து இருந்தது. இயக்குநருக்கு யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என தெரியும். படத்தின் நாயகனாகவும், தயாரிப்பாளரவும், நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இசை சிறப்பாக வந்துள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாட்டுகள் இருக்கிறது. படம் சிறப்பாக வந்துள்ளது..

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது..,

இந்த படத்தின் டிரெய்லர் பார்த்தபோதே ஒரு நல்ல நடிகன் கிடைத்து விட்டார் என்று தெரிந்து விட்டது. படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் தங்களது முழு அர்ப்பணிப்பையும், பங்களிப்பையும் கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசை அபாரமாக உள்ளது. கண்டிப்பாக அவருக்கு இந்த படத்திற்காக விருது கிடைக்கும். விஜயகாந்துக்கு அப்புறம் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக, இந்த படத்தின் ஹீரோ இருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெற்றே தீரும்.

இயக்குநர், நடிகர் சாரத் பேசியதாவது.

ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது தான் இந்த படம். அதை கமர்சியல் சினிமாவாக உங்களுக்கு தர விரும்பினேன். ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட வேண்டும் என்பது எனது 17 வருட கனவு. படத்தின் பின்னணி இசைக்கு மட்டும் 60 நாட்கள் எடுத்துக் கொண்டோம். படத்தின் எபெக்ட்ஸ் பணிகளில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளோம். இந்த திரைப்படம் எடுத்து வெளியே கொண்டு வர நிறைய கஷ்டப்பட்டிருக்கிறோம். ஒரு தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் ஆகியோரின் வலி என்ன என்பதை இந்த படம் மூலமாக தெரிந்து கொண்டேன். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். நடிகர்கள் முழு அர்ப்பணிப்பை கொடுத்துள்ளனர்.

இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது..,

ஸ்ரீகாந்த் தேவா எப்பொழுதும் குத்துப் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார், இந்த படத்தில் அவர் போட்டிருக்கும் மெலடி பாட்டு எனக்கு ரொம்பவே பிடித்தது. அவர் இதை தொடர வேண்டும். விருது வென்ற நிறைய தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் இருக்கின்றனர், அது எனக்கும் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இயக்குநர் யாரிடமும் வேலை பார்க்காமல், இயக்குனராக மாறியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது, அவரது பாடல் வரிகளும் சிறப்பாக இருக்கிறது. இந்த கதை உண்மை சம்பவம் என்று கூறினார்கள், அதற்கும் வாழ்த்துகள்.

முழுமையான பொழுதுபோக்கு, ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் புதுமுகம் சாரத் நாயகனாக நடிக்க, அனகா அவரது ஜோடியாக நடிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களான சூப்பர் சுப்புராயன் மற்றும் கனல் கண்ணன் ஆகியோரால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளில் அசத்தலான திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார் புதுமுக நாயகன் சாரத்.

படத்தில் முருகா புகழ் அசோக் குமார், கபீர் துஹான் சிங், மதுசூதனன், பவன், வேலா ராமமூர்த்தி, நமோ நாராயணா, நாடோடிகள் புகழ் பரணி, மாரி புகழ் வினோத், ரேணுகா, உமா பத்மநாபன், ராஜ சிம்மன், ஆர்யன், ஆர்.என்.ஆர் மனோகர், ரித்திகா மற்றும் KPY புகழ் முல்லை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் நாயகனாக நடிப்பதுடன் சாரத் திரைப்படத்திற்கான, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதி படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் N.சண்முக சுந்தரம் (ஒளிப்பதிவு), VJ சாபு ஜோசப் (எடிட்டர்), குரு ராஜ் (கலை இயக்கம்) , பாரதி & சாண்டி( நடன அமைப்பு)ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.