சினி நிகழ்வுகள்

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்

இயக்குனர் பார்த்திபன் தனது முதல் படமான ‘புதியபாதை’ முதல் கடைசியாக வெளியான ‘ஒத்த செருப்பு’ வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி, அதில் வெற்றிகரமாக பயணிப்பவர். இதில் ‘ஒத்த செருப்பு’ படம் 2019-க்கான தேசிய விருது உட்பட பல உலக விருதுகளை பெற்றது.

தனது முந்தைய படங்களில் உலக சினிமாவை நோக்கி சென்ற பார்த்திபன், தற்போது உலக சினிமாவை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை வெற்றிகரமாக எடுத்து முடித்து உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார்.
அதில் மூன்று சர்வதேச விழாக்களில் இரவின் நிழல் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும், இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வதேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது. இதுவரை இரவின் நிழல் திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் கண்ட திரைப் பிரபலங்கள் இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை வாழ்நாளில் கண்டதில்லை என பாராட்டுகின்றனர்.
சர்வதேச விருதுகள் கிடைத்ததில் பார்த்திபனுக்கு மகிழ்ச்சி என்றாலும், ஜூலை 15 வெளிவர இருக்கும்
“இரவின் நிழலுக்கு திரையரங்கிற்கு ரசிகர்கள் வந்து கைதட்டல் + விசிலுடன் தரப் போகும் பெரு வெற்றியே தனக்கான பெரிய விருது என காத்திருக்கிறார், உலக சினிமாவை தமிழ் சினிமா நோக்கி திருப்பிய இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.