மீண்டும் திகில் படத்தில் நடிப்பது ஏன்? -ஜி.வி.பிரகாஷ் கூறும் காரணம்

சினி நிகழ்வுகள்

ஜி.வி.பிரகாஷ்-கெளதம்மேனன் இணைந்து நடித்த ‘செல்ஃபி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

‘13’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தபடத்தை அறிமுக இயக்குநர் கே.விவேக் இயக்குகிறார். மெட்ராஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
சித்து குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்ய, காஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்கிறார். பி.எஸ்.ராபர்ட் கலையை நிர்மாணிக்க, ரக்கர் ராம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். சந்தோஷ் நடனக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி.பிரகாஷ், “எனது அறிமுக படமான ‘டார்லிங்’ ஒரு ஹாரர் படம் தான். அந்த படம் பெரிய வெற்றி பெற்றதால் எனக்கு தொடர்ந்து அதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், தொடர்ந்து ஒரே மாதிரியான படங்கள் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அதனால், நான் ஹாரர் படங்களை தொடர்ந்து நிராகரித்து வந்தேன். ஆனால், இந்த படத்தின் கதையை என்னிடம் விவேக் சொன்ன போது, எனக்கு பிடித்திருந்தது. ஹாரர் படமாக இருந்தாலும் அதில் வித்தியாசமான ஒரு கதையை விவேக் வைத்திருக்கிறார். அதனால், தான் இந்த படத்தில் நான் நடிக்க சம்மதித்தேன்.
இந்த படத்தில் கெளதம்மேனன் சார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம் பேசப்படும் விதத்தில் இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு புதுவிதமான உணர்வு கொடுக்கும் ஒரு ஹாரார் படமாக இந்த 13 இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *