தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் ‘ஆர்ஆர்ஆர்’ ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண்-ஜூனியர் என்.டி.ஆர்.நடிப்பில் நாளை மிரட்ட வருகிறது

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண்-ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாளை வெளியாகிறது. டிவிவி தானய்யா தயாரித்த இந்த படத்தை தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது
தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணியில் மிகப்பெரிய முறையில் வெளியிடுகிறது.
ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது ராஜமவுலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.
படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்.
ஜூனியர் என்.டி.ஆர். கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே ‘ஆர்ஆர்ஆர் ‘ படத்தின் மையக்கரு என்று இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.
ராம் சரணின் காதலி சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் ஒளிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி இருக்கிறார்கள்.
படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
