தீபாவளிக்கு வரும் சூர்யா படம் ‘ஜெய் பீம்’
சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படம் தீபாவளியையொட்டி நவம்பர் மாதம் 2-ந் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் வெளியாகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இதே தேதியில் வெளியாகிறது.
இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தை தங்கள் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா-ஜோதிகா தம்பதிகள் தயாரிக்கிறார்கள்.
படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான முரண்பாடுகளை எதிர்த்துப் போராடும் வழக்கறிஞராக சூர்யா நடிக்க, அவருடன் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், நடிகைகள் ரஜிஷா விஜயன், லிஜோமோள், ஜோஸ் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.
மிஸ்டரி டிராமா ஜானரில் தயாராகியிருக்கும் இந்த படம் பழங்குடி இனத்தை சேர்ந்த தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜ்கண்ணுவின் வாழ்வியலை நுட்பமாகவும், ஆழமாகவும் பேசுகிறது. ராஜ்கண்ணு கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து அவர் காணாமல் போகிறார். விசாரணைக்காக சென்ற தன்னுடைய கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜ்கண்ணுவின் மனைவி செங்கேணி, வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாடுகிறார். வழக்கறிஞர் சந்துரு உண்மையை வெளிக் கொணரவும், மாநிலத்தில் ஆதரவற்ற பழங்குடி இன பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பொறுப்பேற்கிறார்.
அதில் அவர் வெற்றி பெற்றாரா? நீதி கிடைத்ததா? என்பதை அறிய நவம்பர் இரண்டாம் தேதி வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.
Leave a Reply