சினிமா செய்திகள்

தமிழக முதலமைச்சருக்கு நடிகர் விஜயகுமாரின் கோரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டுமென மூத்த நடிகர் விஜயகுமார் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது…

”சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பொழுது எங்களது பகுதியில் இருந்து அடையாறு வரைக்கும் பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது.
இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால் 2015ஆம் ஆண்டை போல் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
ஆகவே தாங்கள் கவனத்தில் இதைக் கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்தால் கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும். எனவே தயைகூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்களால் இதை செய்ய இயலும் என ஒரு மனதாக நம்புகிறேன். கொரோனா என்னும் கொடும் நோயிலிருந்து நம் தமிழக மக்களை எவ்வண்ணம் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறீர்களோ… அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். ” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து திரையுலகத்தை சேர்ந்த விஜயகுமார் கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.