கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்படத் தொடங்கின.
சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோரப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடி வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது அனைத்துவித வியாபாரத் தலங்களும் திறக்கப்பட்ட சூழலில் கோயம்பேட்டில் இருக்கும் உணவு தானிய அங்காடியை திறக்க வேண்டி அங்கே கடை வைத்திருக்கும் வியாபாரிகள் அனைவரும் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
அது பலனளிக்காமல் போக.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு இன்றைக்கு அந்த அங்காடி பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் பேசுகையில், “பல சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து, இன்று செப்டம்பர் 18ம் தேதி முதல் கடந்த 135 நாட்களாக துயரத்தில் இருந்த கோயம்பேடு வணிகர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. 135 நாட்களுக்குப் பிறகு, கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகம் இன்று திறக்கப்படுகிறது. ஒவ்வொரு வளாகமாக அடுத்தடுத்து திறக்கப்படவிருக்கின்றன.
இந்த நிலையை அடைய கடுமையான சட்டப் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். எங்களது தமிழ்நாடு உணவு தானிய வணிக சங்கத்தின் தலைவரான சா.சந்திரேசன், கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்தை முன்னறிவிப்பின்றி மூடியதைச் சுட்டிக் காட்டி, வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உடனடியாக உணவு தானிய வணிக வளாகத்தைத் திறக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்தார். வழக்கு எண் – WP7619/2020,
கடந்த 13.5.2020 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் கேட்டு அரசு அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் 29.5.2020 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பூட்டப்பட்டிருக்கும் கடைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் உணவு தானியப் பொருட்கள் பாழாவது குறித்து சங்கத்தின் சார்பில் எடுத்துக் கூறி வழக்காடப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு ஒன்றினை வழங்கியது. அது, வழக்கிற்கு கிடைத்த முதல் வெற்றி. “கடைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை முன் அனுமதி பெற்று வெளியே எடுத்துச் செல்லலாம்…” என நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.
அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு வந்தபோதெல்லாம், “உணவு தானிய வளாகம் உட்பட கோயம்பேடு மார்க்கெட்டுகள் அனைத்தையும் திறக்க வாய்ப்பில்லை” என்றே அரசு தரப்பில் வலியுறுத்திக் கூறப்பட்டது.
உணவு தானிய வளாகத்தைத் திறக்கக் கோருவதுதான் வழக்கின் முக்கியமான நோக்கம் என்றாலும், உணவு தானிய வணிகர் சங்கத்தின் தரப்பில் வாதங்களை எடுத்துவைத்த போதெல்லாம் காய், கனி மற்றும் மலர் வணிகர்கள் உட்பட அனைத்து வணிகர்கள் படும் துயரங்களையும் எடுத்துக் கூறியே வந்தோம்.
மீண்டும் கடந்த 20.7.2020 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. உணவு தானிய வணிக வளாகத்தை மறுபடியும் திறக்க வாய்ப்பில்லை என ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை அரசு மறுபரிசீலணை செய்ய ஒப்புக் கொண்டதாகவும், அது குறித்து விவாதிப்பதற்காக அதிகாரிகள் தரப்பில் பல கூட்டங்கள் நடத்த வேண்டியிருப்பதால் காலம் அவகாசம் தேவை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆக.. ஜூலை மாதமே தமிழக அரசு அரசு உணவு தானிய மார்க்கெட்டைத் திறக்க ஒப்புக் கொண்டது. அதற்கு காரணம் எங்களது சங்கம் தொடுத்த அந்த வழக்குதான். ஒரு மார்க்கெட் திறக்கப்பட்டால் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த மார்க்கெட்டுகளும் திறக்க வழி பிறக்கும் என்பதும் அப்போதே உறுதியானது.
24.8.2020 அன்று மீண்டும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. அதனால் வழக்கு விசாரணையை 28.8.2020 வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம். வெள்ளிக்கிழமையன்று வழக்கை ‘ஸ்பெஷல் கேஸ்’ என பட்டியலிடும்படி உத்தரவு பிறப்பித்தது. ‘மிக அவசரம்’ எனக் கருதும் பெரிய வழக்குகளை மட்டுமே இப்படி ஸ்பெஷல் கேஸ் ஆகப் பட்டியலிடுமாறு உத்தரவிடுவார்கள்.
அதன் பிறகு, இவ்வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசரமும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக.. 25.8.2020 செவ்வாய்க்கிழமை முதல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் செயலில் இறங்கினார்கள்.
கோயம்பேடு அங்காடிகளைப் பார்வையிட்டு, அவற்றைத் திறப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். உணவு தானிய வணிக வளாகத்தை வரும் 18.9.2020 அன்றும், காய்கறி வணிக வளாகத்தை வரும் 28.9.2020 அன்றும் திறக்கவிருப்பதாக அரசு தரப்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
மறுநாள் 28.8.2020 வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் வழக்காக நம் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதியின் மீது நம்பிக்கை வைத்து, நமது சங்கம் முன்னெடுத்த சட்ட முயற்சியினால் நாங்கள் எதிர்பார்த்ததே தீர்ப்பாகக் கிடைத்தது.
“உணவு தானிய வணிக வளாகம் உட்பட கோயம்பேடு மார்க்கெட்டுகள் அனைத்தையும் மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை என்ற தன் முந்தைய முடிவினை எங்களது வழக்கின் அடிப்படையில்தான் அரசு மறுபரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டது…” என்பதை தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது உயர் நீதிமன்றம்.
அதன் அடிப்படையிலேயே அரசு அதிகாரிகள் அடுத்தடுத்து பல கூட்டங்கள் நடத்தினார்கள் என்பதும், அதன் பிறகே ‘உணவு தானிய வணிக வளாகத்தை வரும் 18.9.2020 அன்று திறப்பதாக அறிவிக்கப்பட்டது’ என்பதும் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
‘நல்லோர் ஒருவர் இருக்கும் பொருட்டு, எல்லோருக்கும் பெய்யும் மழை’ என்கிறது திருக்குறள். அதன்படி, உணவு தானிய வணிகர் சங்கம் முன்னெடுத்த வழக்கினால்தான், உணவு தானிய மார்க்கெட்டையும், அதைத் தொடர்ந்து மற்ற மார்க்கெட்டுகளையும் திறக்க அரசு முடிவெடுக்க நேர்ந்திருக்கிறது.
அது மட்டுமின்றி, தீர்ப்பில் நம் வணிகர்களுக்குச் சாதகமான இன்னொரு முக்கிய அம்சமும் இடம் பெற்றிருக்கிறது. அரசு தரப்பில் நடைமுறைப்படுத்த இருக்கும் சில விதிமுறைகள் சிரமம் கொடுப்பதாக இருப்பதாக உணவு தானிய வணிகர்கள் சங்கத்தின் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.
இதற்காகவும் தனது தீர்ப்பில் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது நீதிமன்றம். விதிமுறைகளில் என்னென்ன திருத்தங்கள் செய்ய வேண்டுமோ, அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து, தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இடைப்பட்ட காலத்தில் சில விஷமிகளால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அவதூறுகள் பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. உணவு தானிய வணிகர் சங்கம் வழக்கு தொடுத்த காரணத்தால் ‘உணவு தானிய வணிக வளாகம் உட்பட மற்ற வளாகங்களையும் திறக்க மாட்டார்கள்’ என அவதூறு பரப்பினார்கள்.
மறுநாள் உணவு தானிய வணிக வளாகத்தை திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானதும் அதே விஷமிகள், அவர்கள் எடுத்த முயற்சியால்தான் மார்க்கெட்டுகள் திறக்கப்படுகின்றன என்றும் வாய் கூசாமல் கூறத் தொடங்கினார்கள்.போலிகளையும் பொய்ச் செய்திகளையும் நமது வணிகர்கள் நம்பவில்லை. இனியும் நம்ப மாட்டார்கள்.
இன்று செப்டம்பர் 18-ம் தேதி உணவு தானிய மார்க்கெட் திறக்கப்படுகிறது. வரும் 28-ம் தேதி காய் மற்றும் மலர் மார்க்கெட்டுகள் திறக்கப்படுகின்றன. பழ வணிகர்கள் துணை முதல்வரை நேரில் சந்தித்தபோது, ‘அடுத்த இரு வாரத்துக்குள் பழ மார்க்கெட்டும் திறக்கப்படும்’ என்ற உத்தரவாதம் கிடைத்திருக்கிறது.
அடுத்து நம் கோரிக்கை.. ‘செமி ஹோல்சேல் அங்காடிகளையும் திறக்கச் செய்வது’ குறித்துதான். அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்.
அங்காடியை திறக்கலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி, நம் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு இந்த நேரத்தில் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரம் ‘உணவு தானிய வணிகர் சங்கம்’ தொடுத்த அந்த வழக்கிற்கு கிடைத்திருக்கும் தீர்ப்புதான் ‘உணவு தானிய வணிக வளாகம்’ உட்பட அத்தனை மார்க்கெட்டுகளையும் திறக்க வழி வகை செய்திருக்கிறது என்ற தகவலையும் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்.
சற்று தாமதமென்றாலும், கோயம்பேடு வணிகர்களின் கஷ்டத்தைப் புரிந்து, நம் துயர் துடைக்க முடிவெடுத்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மதிப்புக்குரிய உறுப்பினர் செயலர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும்.. நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்தை மறுபடியும் திறப்பதற்கு முன்னதாக அனைத்துவிதமான சீரமைப்புப் பணிகளையும், கழிவு நீர் வடிகால் வசதி சீரமைப்பு பணிகளையும் செய்து, வளாகத்துக்குள் தட்டுப்பாடின்றி தண்ணீர் வசதி செய்து கொடுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுக்கும் மற்றும் கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழுவின் முதன்மை நிர்வாக அலுவலர் திரு.எஸ்.கோவிந்தராஜன் அவர்களுக்கும் பெரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்…” என்றனர்.
இன்று அங்காடி திறப்பினையொட்டி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், சில விதிமுறைகளை தவறாமல் பின்பற்றும்படியும் வணிகர் சங்கத்தினரை அறிவுறுத்தியுள்ளது.
அங்காடிக்கு வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் ‘A’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு சமயத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அங்காடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு சரக்குகளை இறக்கி, அந்த வாகனம் வெளியில் சென்ற பிறகு அந்தக் கடைக்கு அடுத்த வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.
கடைகளுக்கு வெளிப் பகுதிகளில் மற்றும் அங்காடியின் வேறு எந்தப் பகுதிகளிலும் சரக்குகளை இறக்கி வைப்பது மற்றும் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படாது.
கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும்.
அவ்வாகனங்கள் சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினமே இரவு 12 மணிக்குள் அங்காடியை விட்டு வெளியில் சென்றுவிட வேண்டும்.
சில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்ய வரும் இலகு ரக வாகனங்கள் அதிகாலையிலிருந்து நண்பகல் 12 மணிவரை மட்டுமே அங்காடிக்குள் அனுமதிக்கப்படும்.
அங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கரப் பயணிகள் ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி இல்லை.
தனி நபர் கொள்முதல் முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. அங்காடிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.
தினமும் அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவ துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
அங்காடிக்குள் உள்ள அனைத்துக் கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும்.
அங்காடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் மற்றும் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும்.
அங்காடிக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து நபர்களும், முகக் கவசம் அணிந்து இருப்பது கட்டாயமாகும்.
முகக்கவசம் இல்லையேல், உள்ளே கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் கட்டாயமாக்கப்படும்.
கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் மற்றும் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும், காவல் துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேற்கண்ட விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது உரிம விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பன போன்ற ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்.
தமிழக அரசு விதித்துள்ள மேற்கண்ட நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றப் போவதாக கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இத்தகைய கடும் போராட்டத்திற்குப் பின்பு சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி இன்று காலை திறக்கப்பட்டது.
திரண்டு வந்திருந்த வணிகர்கள் மூடப்பட்டிருந்த கடைகளை திறந்து கடைகளில் இருந்த கெட்டுப் போன பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர்.
தமிழகம் மற்றும் மற்றைய மாநிலங்களில் இருந்து உணவு, தானியப் பொருட்களை கொண்டு வந்த லாரிகளில் அங்காடிக்குள் அனுமதிக்கப்பட்டன. அப்போது வண்டியில் இருந்து டிரைவர், கிளீனர் இருவருக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கிருமி நாசினி மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. வண்டிகள் அனைத்தும் தண்ணீராலும், கிருமி நாசினியாலும் சுத்தம் செய்யப்பட்ட பின்பு அங்காடிக்குள் அனுமதிக்கப்பட்டன.
திரளாக வந்திருந்த வியாபாரிகள் மற்றும் கடைகளில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதித்தல், கிருமி நாசினி மூலமாக கை கழுவுதல், முகக் கவசம் வழங்குதல் போன்றவையும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கோயம்பேடு உணவு, தானிய வணிகர் சங்கத்தின் தலைவரான த.மணிவண்ணன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். கோயம்பேடு பகுதி காவல்துறையினரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். வந்திருந்த அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
அங்காடியில் பல கடைகள் திறக்கப்பட்டு இன்றைக்கே வியாபாரமும் துவங்கிவிட்டது. “இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அங்காடி முழு வீச்சாக இயங்கத் துவங்கும்…” என்று வணிகர் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/13-1024x576.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/09/13-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்தமிழக செய்திகள்கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்தும்விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்குத் தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி...