திரை விமர்சனம்

வில் – திரை விமர்சனம்

தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை தனது வாரிசு களான இரண்டு மகன்களுக்கு சரிசமமாக  பிரித்து உயில் எழுதி வைக்கிறார். அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை மட்டும் ஒரு பெண்ணின் பெயருக்கு உயில் எழுதியிருக்கிறார். அவரது இறப்புக்கு பின் வழக்கறிஞர் மூலம் இந்த தகவல் குடும்பத்துக்கு தெரிய வர… யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மொத்த குடும்பமும் வேலை செய்கிறது. வேறு ஒரு பெண்ணை பேசி வைத்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். அந்தப் பெண் போலி என கண்டுபிடிக்கும் நீதிபதி, பெரியவர் யாருக்கு தன் வீட்டை எழுதி வைத்தாரோ அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கோர்ட் டில் நிறுத்த போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடுகிறார்.

போலீஸ் அதிகாரி அந்த பெண்ணை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்தினாரா? எழுதி வைக்கும் அளவுக்கு அந்த பெண்ணுக்கும் பெரியவருக்குமான உறவு எத்தகையது என்பதை திருப்பங்களுடன்  தந்திருக்கிறார்கள். நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்திற்கு நடிப்பால் கம்பீரம் சேர்த்து இருக்கிறார் நீதிமன்ற காட்சிகள், அதில் நடக்கும் விசாரணைகள் எல்லாமே நிஜத்தில் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. நீதிபதியாக சோனியா அகர்வால் மாஸ் காட்டி இருக்கிறார்.அவரது ஒவ்வொரு அசைவும் அந்த நீதிபதி கேரக்டரை நமக்குள் நிலை நிறுத்தி விடுகிறது.
கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அலக்கியா, சிரிக்கும் கண்களை அழவும் வைத்து நடிப்பில் சபாஷ் பெறுகிறார் தந்தை இழந்த மரியாதையை மீண்டும் பெற போராடும் மகளாக நடிப்பில் கவனம் பெறுகிறார். சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விக்ராந்த், விசாரணை நடத்தும் இடங்கள் சிறப்பு.

தொழிலதிபர், அவரது மகன்கள் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் புதியவர்களாக இருந்தாலும் நடிப்பில் புதுசாக தெரிகிறார்கள். கதாபாத்திரங்களுக்குரிய தேர்வாக இருக்கிறார்கள்.

செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் கேமரா, நீதிமன்ற காட்சிகளை  யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன், தொழிலதிபரின் அன்பை சம்பாதித்த அந்தப் பெண் யார் என்ற கேள்வியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை உணர்வும் உணர்ச்சியுமாய் கொடுத்திருக்கிறார்.
உயில் பின்னணியில் உள்ள அந்த சஸ்பென்ஸ் இயக்குனரை கரை சேர்த்து விடுகிறது. அதே நேரம்
உயிலோடு இணைந்து வரும் அந்த உயிர் சமாச்சாரம் நீதிமன்றத்தை மட்டுமல்ல, நம்மையும் ஒரு கணம் உலுக்கி விடவே செய்கிறது.