செய்திகள்

சரத்குமார், சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைகிறார்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்திற்காக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளார்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்திற்காக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.

கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இப்படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார்.

புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார், தினேஷ் பொன்னுராஜ் படதொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்திற்கு சரவண அபிராமன் பொறுப்பேற்க, மீனாக்ஷி நாராயணசாமி ஆடைகளை வடிவமைக்கிறார். கவிஞர்கள் சினேகனும், யுகபாரதியும் பாடல்களை எழுதுகின்றனர். சண்டை பயிற்சி – ஃபீனிக்ஸ் பிரபு, நடன இயக்கம் – அசார்.

தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும்.

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *