சினிமா செய்திகள்

இரண்டாம் இன்னிங்ஸ் ஆடத் தயாராகி விட்ட நடிகை பபிதா

நடிகை பபிதா முன்னாள் வில்லன் நடிகர் ஜஸ்டினின் மகள். எம்.ஜி.ஆர். படங்களின் வில்லன் பட்டியலில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு. தந்தை வழியில் சினிமாவுக்குள் நடிகையாக வந்த பபிதா சில படங்களில் நடித்தபிறகு படஉலகை விட்டு சற்று ஒதுங்கியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் இன்னிங்ஸ் ஆடத் தயாராக வந்து விட்டார்.
மறுபடியும் நடிக்க வந்தது குறித்து அவர் கூறுகையில், ‘‘என்னுடைய தந்தை ஜஸ்டின், எம்.ஜி.ஆர். படங்களில் நடித்து பின்னாளில் எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகும் அவரிடம் எந்தப் பிரதிபலனும் பாராமல் அவரது விசுவாசியாக கடைசி வரை அவருக்காக உழைத்தவர் என்பது பலருக்கும் தெரியும். அவரது மகளான எனக்கும் அவரது குணமே இருக்கிறது.
உலக நாயகன் படத்தில் நான் நடனமாடியதையெல்லாம் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இப்போதும் அவர் நடிக்க அழைத்தால் தயாராக இருக்கிறேன். ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை இன்றைக்கும் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். இன்றைக்கும் நான் அதாவது ”பபிதா சிரித்தால் தீபாவளிதான்” என்னும் ரசிகர்கள் நிறைய.
இன்றைய சினிமா நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்யணும் என்ற நிலைமையெல்லாம் மாறி விட்டது. என் ரத்தத்தில் நடனம் ஊறியுள்ளது. அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச் சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன். ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ நடிப்பு தான் முக்கியமே தவிர, கேரக்டர் முக்கியமில்லை. அதனால் அக்கா, அண்ணி, அம்மா என எந்த வேடம் கொடுத்தாலும் அதில் வெளுத்து வாங்க தயாராக இருக்கிறேன்.
நடிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்த பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஒரு காட்சியில் வந்தாலும் எனது கேரக்டர் பேசும்படியாக இருந்தால் நான் நடிக்க தயார்” என்கிறார், பபிதா. .
ஆக, நடிப்புக் களத்தில் இரண்டாம் இன்னிங்ஸ் ஆடத் தயாராகி விட்டார், பபிதா.