சினி நிகழ்வுகள்

மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள ‘போலாமா ஊர் கோலம்.

மூத்த கால்பந்து வீரர்கள் நடித்த முதல் தமிழ் சினிமா
ஓய்வுபெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள யதார்த்த படமாக உருவாகியுள்ளது ‘போலாமா ஊர் கோலம்.’ நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்க, கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார், பிரபுஜித்
படத்தை இயக்கியிருக்கும் நாகராஜ் பாய் துரைலிங்கம் கலாபிரபு தொடங்கி விக்னேஷ் சிவன், ஹெச். வினோத் வரை பல இயக்குநர்களிடம் பல்வேறுபட்ட படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.
கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு, ஜகமே தந்திரம், பேட்ட போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இன்னொரு முக்கிய பாத்திரமேற்றுள்ள மதுசூதன் ‘பெரிசு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.
நாயகியாக அறிமுகமாகும் சக்தி மகேந்திரா, பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர்.

இவர்கள் தவிர ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக், ஆதீ இராசன் முக்கிய கேரக்டர்களில் வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, 1980களில் மாநில, தேசிய அளவில் பங்கெடுத்துப் புகழ்பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் இன்றும் விளையாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களைச் சுற்றி இந்தக் கதை சுழல்கிறது. ஓய்வுபெற்ற கால்பந்தாட்ட வீரர்கள் இப்படத்தில் நடித்து இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணி உள்ளது.
இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர் தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார். அவர் தனது பயணத்தில் சந்திக்கும் அழகிய காதல் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான, சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தப் படம். படமாகப் பார்க்கும் போது பார்வையாளர்களைக் கட்டிப் போடும்படி விறுவிறுப்பாக இருக்கும். கால் பந்தாட்டத்தை அதன் அசல் தன்மையோடு கதைக்குள் ஊடுருவச் செய்து கலகலப்பான சுவாரசியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது என்றார், இயக்குநர்.

இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி அதாவது, 80%ஆந்திராவிலும், 20% தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது. ஒளிப்பதிவு வைஷாலி சுப்பிரமணியம். இவர் 70 சதவிகித காட்சிகளைப் படம் பிடித்துள்ளார். எஞ்சிய 30 சதவிகித பகுதிகளை டேவிட்பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.எடிட்டிங் தீபக்.
படத்தில் ஒரு சண்டைக் காட்சியும் ஒரு பாடல் காட்சியும் உண்டு.

சண்டைக்காட்சிகளை குன்றத்தூர் பாபு அமைத்துள்ளார். இசை சமந்த் நாக். பாடலை அனுராதா எழுதியுள்ளார். பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மானின் கேஎம் இசைப்பள்ளியில் கற்பிக்கும் கே.எம்.ரயான். இவர் ஏ. ஆர். ரகுமானின் மாணவர்.
படத்தில் வரும் சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான காட்சிகள் ரசிகர்களைக் கவரும். அதை கொஞ்சமும் சமரசம் இல்லாமல் உருவாக்கி இருப்பதாக கூறுகிறார், இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம்.