கல்லூரி மாணவர்கள் பார்த்து நெகிழ்ந்த ‘காலேஜ் ரோடு’

சினிமா செய்திகள்

ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ், ஆனந்த் நாக், மோனிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலேஜ் ரோடு. கல்லூரி வாழ்க்கையில் நாம் எல்லோரும் கடந்து வந்த நட்பு, காதல் போன்றவற்றை பிரதிபலிக்கும் படமாக காலேஜ் ரோடு உருவாகியுள்ளது. ஆனால் இதையும் தாண்டி இப்படம் தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு விஷயத்தை பேசுகிறது.
பள்ளிப் படிப்பை முடித்த ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் கல்லூரிப் படிப்புக்காக முதலில் நாடுவது கல்விக் கடன் தான். ஆனால் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் கல்விக் கடன் கிடைத்து விடுவது இல்லை. ஏழை மாணவர்களுக்கு கிடைக்காத கல்விக் கடன் பற்றியும் கல்விக் கடன் கொடுக்க வேண்டிய வங்கிகள் கடன் வாங்கிய மாணவர்களை எப்படி நடத்துகிறது என்பதை பற்றியும் காலேஜ் ரோடு திரைப்படம் பேசுகிறது.

இந்த நிலையில் இப்படம் சென்னையில் உள்ள 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கண்கலங்கிய படி இந்த படம் பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

‘‘நாங்கள் சாதாரண கல்லூரி காதல் கதையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தோம். ஆனால் படத்தை பார்த்த பின்பு எங்களால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை. அரசு ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினாலும், ஒருசில மோசமான வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் அதன் பலன் நன்றாக படிக்கும் ஏழை மாணவனுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது’’ என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர்களின் குரலாக ஒலிக்கும் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *