தேஜாவு பட விமர்சனம்
காவல்துறை உயர் அதிகாரி ஆஷாவின் மகளை மர்மக் கும்பல் ஒன்று கடத்தி விடுகிறது. அவரை மீட்க, அன் அபிஷியல் போலீஸ் அதிகாரி என்ற பெயரில் களத்தில் இறங்குகிறார் விக்ரம்குமார். இந்த கடத்தல் பின்னணியில் எழுத்தாளராக வரும் அச்யுத் குமார் மீது போலீசுக்கு சந்தேகம் வர, அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் நடக்கும் சம்பவங்களையும், அடுத்து விசாரணையில் தொடரும் சம்பவங்களையும், அவர் முன்னமே கதையாக எழுதி வருவது தெரிய வர…
அவர் எழுதி வரும் கதைக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் உள்ள தொடர்பு, படத்தின் அதிர்ச்சி திருப்புமுனை. முடிவில் விக்ரம்குமார் ஆஷாவின் மகளை கண்டு பிடித்தாரா..? கடத்தலுக்கான பின்னணி என்ன? கேள்விகளுக்கான பதில் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ்.
விக்ரம்குமார் கேரக்டரில் இன்னொருவரை யோசிக்க முடியாத அளவுக்கு நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார், அருள்நிதி. துப்பு துலக்குவதில் சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட, அதிர்ச்சியை உள்வாங்கும் நடிப்பில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடுகிறார்.
போலீஸ் உயர்அதிகாரி ஆஷாவாக மதுபாலா கச்சிதம். எழுத்தாளரை கண்காணிக்கும் கான்ஸ்டபிள் கேரக்டரில் காளி வெங்கட் அடடகாசம். வில்லங்க எழுத்தாளராக அச்யுத் கமார் அந்த போதை நடிப்பிலும் ‘தெளிவு’ காட்டுகிறார்..
திரில்லர் ஜானரின் பெரும் பலமே அதன் சஸ்பென்சை முன்னமே ஊகித்து விட முடியாதபடி நகர்த்துவது தான். அந்த வகையில் திரைப்படுத்தலில் இறுதி வரை சஸ்பென்சை ஊகிக்க முடியாத திரைக்கதை அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசனின் பலம். (இவர் பத்திரிகையாளரும் கூட.)
ஜிப்ரானின் பின்னணி இசையும் முத்தையாவின் கேமராவும் இயக்குனரின் கற்பனைக்கு உயிர் கொடுத்்த அதிசயமும் இந்த படத்தில் நிகழ்ந்திருக்கிறது.