காட்டேரி பட விமர்சனம்
வைபவ், அவரது மனைவி சோனம் பாஜ்வா, நண்பர்கள் கருணாகரன், ரவிமரியா, குட்டி கோபி ஆகியோர் சேர்ந்து பணத்துக்காக, உளவியல் ஆலோசகரான ஆத்மிகாவை கடத்துகின்றனர். ஆத்மிகா மூலம் தங்கள் நண்பன் மாங்கா மணி தங்கப் புதையல் தேடி ஒரு கிராமத்துக்கு சென்றிருப்பது தெரியவர, அந்த புதையலை அடைய இவர்களும் விரைய…
போகிற வழியில் எதிர்ப்படும் கிராமத்தில் நுழைகிறார்கள். அங்கு நடக்கும் அமானுஷ்ய அனுபவங்கள் திகில் தர, அது பேய்கள் வசிக்கும் கிராமம் என்று அப்புறம் தெரிகிறது. தப்பிக்க நினைத்தால் முடியவில்லை. பேய்கள் எற்படுத்தும் தடைகளைத் தாண்டி அவர்கள் தப்பினரா? பேய்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? திகிலும் திரில்லுமாய் விடை தருகிறது, இந்த காட்டேரி.
முதல் பாதி சாதாரணமாக கடந்து செல்ல, இரண்டாம் பாதி ஜிவ்வென வேகம் பிடிக்கிறது.
கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் வைபவ். அவரது நண்பர் கஜாவாக வரும் கருணாகரனின் நாகரிக நையாண்டி ரசிக்கவைக்கிறது. பேயை அடக்கும் சாமியாராக பொன்னம்பலம் அசத்தல் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்..
சோனம் பாஜ்வா,ஆத்மிகாவின் கதாபாத்திரங்களில் இருக்கும் சஸ்பென்ஸ் ,கதைக்குள் நம்மை ஈர்த்து விடுகிறது.. ஃபிளாஷ்பேக்கில் மாதம்மா கேரக்டரில் வரலட்சுமி அட்டகாசம்.
பிளாஷ்பேக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு பளிச். திகில் படங்களுக்கு இனி இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்தை பரிந்துரைக்கலாம்.
பிளாஷ்பேக்கை வலுவாக அமைத்த இயக்குநர் டீகே, வித்தியாசமாக காட்டேரிகளை காட்டியுள்ளது சிறப்பு. புதையலை கொடுக்கும் காட்டேரியின் கோரிக்கையை அணுகியிருக்கும் விதத்துக்காகவே இம்முறையும் ஆவிக்கதைக்கு டீகே. ஓ.கே.