‘ஜோதி’ பட இசை விழாவில் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘ஜோதி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் RK செல்வமணி, செயலாளர் R.V. உதயகுமார், நடிகர் ரவிமரியா, இயக்குனர் நந்தா பெரியசாமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பத்மபூஷன் KJ ஜேசுதாஸ் இந்த படத்துக்காக பாடிய ‘அன்பின் வழி, பல்ராம், பாடிய ஆரிராரோ, கார்த்திக் பாடிய ‘போவதெங்கே’ மற்றும் ருத்ரம் பாடல்களை வெளியிட்டனர்.
விழாவில் நடிகரும் திரைக்கதை ஆசிரியருமானஇளங்கோ குமரவேல் பேசுகையில், “ஜோதி எனக்கு ரொம்ப பிடித்தமான படங்களில் ஒன்று. அதற்கு காரணம் இந்த படத்தோட கதை அந்த மாதிரி. திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த படத்தை இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக எடுத்திருக்காங்க. தயாரிப்பாளர் S.P. ராஜாசேதுபதி மட்டுமில்லாமல் அவர் குடும்பமே இந்த படத்திற்காக வேலை செய்ததை மறக்க முடியாது. AV கிருஷ்ண பரமாத்மா சிறப்பாக இயக்கியிருக்கிறார். வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க.ஜோதி நிச்சயம் வெற்றியடையும்” என்றார்.
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசியதாவது.
“ஜோதி படத்திற்கு சில மேஜிக் நடந்திருக்குனுதான் சொல்லணும். ஆசியாவிலே பெரியது வாகினி ஸ்டூடியோ,அந்த ஸ்டூடியோ உள்ளே நாகிரெட்டி அவர்கள் வீடு இருந்த இடத்தில் ஜோதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது ஜோதி படத்தோட வெற்றியை அடையாளப்படுத்துது. இதுவரை இந்த மாதிரி விழா வேறு எங்கும் நடந்திருக்க முடியாது. அதுபோல கலந் துகொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் பல நடிகர்களை உருவாகிய ஜாம்பவான்கள் அவர்கள் ஆசீர்வாதமும் கிடைத்திருக்கு, அடுத்து ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், வழக்கமாக ஜேசுதாஸ் அவர்கள் பைட்ஸ் வீடியோ கொடுக்க மாட்டார். ஆனால் இந்த படத்திற்கு அவர் கொடுத்திருப்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கு, இதற்காகவே இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்.”
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது.
“நான் அடிப்படையில் ஜோதியை இறைவனாகவும், இறைவனை ஜோதியாகவும் வணங்க கூடியவன். இயக்குனர் AV கிருஷ்ண பரமாத்மா என்னிடம் எனது இறைவனையே தலைப்பாக சொல்லி கதையை சொல்லும்போது நான் மிகவும் நெருக்கமாகி விட்டேன். ஜோதி எனக்கு ரொம்ப பிடித்த தலைப்பாகி விட்டது. கதையில் சொல்லியிருக்கக் கூடிய விஷயத்தின் சாரமாகத்தான் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும். ஆணவம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை இந்த ‘அன்பின் வழி’ பாடலில் “சுயநலம் ஏதும் இல்லா உயரத்தில் சேர்ப்பாயப்பா” என்று எழுதியிருக்கிறேன். சுடர் என்றும் கீழ்நோக்கி போவது கிடையாது. மேல்நோக்கியே செல்லும். அதுபோல இந்த ஜோதி படமும் மேலேமேலே போய்க்கிட்டே இருக்கும்.”
நடிகர் ரவிமரியாபேசியதாவது.
“நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன் என்பதுபோல நான் இந்த படத்துல கலந்துக்கிட்டேன். இயக்குனரை தாண்டி எந்த காட்சி வேண்டும், எந்த காட்சி வேண்டாம் என்று சொல்லும் உரிமை படத்தொகுப்பாளருக்குத்தான் உண்டு, அப்படிப்பட்ட படத்தொகுப்பாளரே படத்தை எடுத்திருக்கும்போது படம் எப்படி வந்திருக்கும் என்று இதில் தெரிகிறது. இந்த படத்திலிருக்கும் பாடல்கள் மயிலிறகு போன்று மெலடியாக ஆரம்பித்து ருத்ர தாண்டவம் ஆடுவதுபோன்று வந்து முடிகிறது. பாடல்களையும் மெலடியாக கொண்டுபோயிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள். ‘தண்ணித்தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’ என்ற பாடலில் இருந்த அதே கம்பீரம் ஜோதி படத்தின் அன்பின் வழி பாடலில் இருக்கிறது. ஒவ்வொரு நடிகரையும் இந்த படம் அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோகும்.”
இயக்குனர் நந்தா பெரியசாமி பேசியதாவது.
“நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். இந்த படத்தில் மிகப்பெரிய சஸ்பென்ஸ் அமைக்கப்பட்டிருக்கு, அதை சிறப்பாக நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.அவர்கள் சிறு அசைவு போயிருந்தாலும் அந்த சஸ்பென்ஸ் உடைந்திருக்கும், அதை இயக்குனர் சிறப்பாக அவர்களிடம் வாங்கியிருக்காரு. அதிர்ஷ்டம் ஆண்டவன் கையில் இருக்கும், ஆசிர்வாதம் நம்ம கையில் இருக்கும் என வசனத்துக்கு ஏற்றவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். அனைவரையும் மனப்பூர்வமாக வாழ்த்தக்கூடிய அவர் இந்த விழாவிற்கு வந்ததுக்கு மிகவும் சந்தோசமான விஷயம்.”
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் R.V.உதயகுமார் கூறியதாவது.
“திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஜோதியை ஏற்றியிருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஒரு படம் உருவாவது எவ்வளவு கஷ்டம் என்பது ஊமைவிழிகள் படம் முதற்கொண்டு பல படங்களில் பார்த்துள்ளேன். ஊமைவிழி படத்தை ஏழுநாளில் படமாக்க திட்டமிட்டு நான்கு இயக்குனர்களை கொண்டு உருவாக்கினோம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஆஸ்தான நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். ஒரு நண்பரை நம்பி ஒரு படத்தை எடுக்கும் பொறுப்பை கொடுத்து, அந்த நம்பிக்கை மாறாமல் ஒரு படத்தை எடுத்து அது மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாக்குவது திரைப்படக்கல்லூரி மாணவர்களால்தான் முடியும் அப்படி இந்த டீம் அமைந்திருக்கிறது. இந்த டீமை பார்க்கும்போது மீண்டும் நாங்கள் படங்களை தயாரித்து, இயக்கப்போகிறோம் என்பதை உறுதியுடன் சொல்கிறேன்”.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் R.K.செல்வமணி பேசியதாவது.
“என்னை முதலில் அழைத்தபோது சுமாரான படமாகத்தான் இருக்கும்னு நெனைச்சேன். இங்க வந்து பார்த்தபிறகே இது பெரிய படம் என தெரிந்தது. மாஸ் ஹீரோ படங்களை ஆதரிப்பது போன்று இதுபோன்ற சிறந்த கதை அம்சங்களை கொண்ட படங்களையும் ஆதரிக்க வேண்டும். எப்போதும் ஒரு இயக்குனருக்கும் நடிகருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நேரடித் தொடர்பு வேண்டும். அப்படி வைத்துக் கொண்டால் சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்.”
தயாரிப்பாளர் S.P.ராஜா சேதுபதி பேசியதாவது.
“இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கு, மொத்தத்துல இந்த படத்தை பற்றி சொல்லணும்னா வருஷத்துக்கு 11,000 குழந்தைகளை தொலைத்த இந்திய தாய்மார்களின் கண்ணீர்.”
இயக்குனர் A.V.கிருஷ்ண பரமாத்மா, இசை வெளியீட்டுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றியுரை கூறினார்.