உலகம் முழுவதும் ‘கொரோனா’ நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இதற்கு தீர்வு காண எண்ணினார். அதன் காரணமாக தனது இலாப நோக்கமில்லாத அமைப்பான தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் ஒரு தனித்துவ முயற்சியை மேற்கொண்டார்.

விஜய் தேவர்கொண்டாவின் இந்த அறக்கட்டளை இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது. மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண நிலையை எதிர்கொள்ள மட்டுமே முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது. எனவே அறக்கட்டளை எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில் நடுத்தர குடும்பதை சேர்ந்த விஜய் தேவர்கொண்டாவுக்கும், அப்படிப்பட்ட குடும்பங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், போராட்டங்களையும் நன்கறிந்தவர் என்பதால், இந்த நெருக்கடி காலகட்டத்தில் அவர்களுக்கு தோள்கொடுக்க மற்றொரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் அதை விட அவர் இந்த திட்டத்தை அறிவித்தவுடன் நன்கொடையை வாரி வழங்கி அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொதுமக்கள் காண்பித்தது அவரது உத்வேகத்தை மேலும் அதிகரித்தது என கூறலாம்.

அந்த நம்பிக்கையே அவர்கள் அளித்த பணத்தில் இம்மியளவு கூட வீணாகிவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியை இந்த அறக்கட்டளைக்கு அதிகரிக்க செய்தது. அதன் காரணமாக நன்கொடைகளை கையாளும் விதத்தை மிக கவனத்துடன் வடிவமைத்தது இந்த அறக்கட்டளை. அறக்கட்டளையிடம் உதவி கோரிய ஒவ்வொரு குடும்பத்தினரின் பின்னணி மற்றும் விவரங்களை சரி பார்த்து உறுதி செய்த பின்னரே உதவி செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளையானது தாங்கள் உதவுவதோடு நிறுத்தி கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களையும் உதவ வலியுறுத்தியதுடன் சுமார் 535 தன்னார்வலர்கள் அவர்களுடன் இணைத்து பெரும் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெற்றிகரமாக உதவ துணை புரிந்துள்ளது.

அறக்கட்டளையின் இந்த தீவிர செயல்பாடும், அதில் விஜய் தேவர்கொண்டா காண்பித்த ஈடுபாடும் பல குடும்பங்களை நெருக்கடியிலிருந்து மீட்க உதவியுள்ளது. எந்தவித எதிர்பார்ப்பையோ, புகழ் வெளிச்சத்தையோ எதிர்பாராமல் நடுத்தர வர்க்கத்திற்குப் பக்கபலமாக நின்ற அவரது இந்த பண்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

பெரும்பாலும் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்து வந்த தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு உதவியதன் மூலம் அளப்பறிய பணியை இந்த அறக்கட்டளை ஆற்றியுள்ளது,ம். நிதிகளை கையாண்டதில் வெளிப்படை தன்மை மற்றும் திட்டமிட்டு செயல்பட்டதன் மூலம் இந்த அறக்கட்டளையும், விஜய் தேவர்கொண்டாவும் அனைவரின் பாராட்டுதல்களை மட்டுமல்லாமல் இதயங்களையும் வென்றுள்ளனர்.

இது இத்துடன் முடிந்து விடவில்லை, இந்த நற்பணியைத் தொடர விரும்பும் விஜய் தேவர்கொண்டா மேலும் பல நலத்திட்டங்களை வரும் நாட்களில் அறிவிப்பார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/06/IMG-20200605-WA0023-682x1024.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2020/06/IMG-20200605-WA0023-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்சினிமா செய்திகள்தமிழக செய்திகள்தெரிந்து கொள்ளுங்கள்நடிகர்கள்உலகம் முழுவதும் 'கொரோனா' நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இதற்கு தீர்வு காண எண்ணினார். அதன் காரணமாக தனது இலாப நோக்கமில்லாத அமைப்பான தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம்...