அம்..ஆ..! – திரை விமர்சனம்
கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். அதில் ஒரு குடிசையில் வசிக்கும் தேவதர்ஷினி, பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். குழந்தை மீது உயிரையே வைத்திருக்கிறார். பேச்சுத் திறனற்ற அந்த குழந்தையை யாரிடமும் நெருங்க விடாமல் மிக மிக கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
இதற்கிடையே, அந்த மலைக் கிராமத்திற்கு சாலை பணிக்கு வந்ததாக கூறும் திலீஷ் போத்தன், வந்த வேலையை விட்டுவிட்டு தேவதர்ஷினி, அவரிடம் இருக்கும் பெண் குழந்தை பற்றி விசாரிக்க தொடங்குகிறார்.
திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீது அந்த ஏரியா மக்களால் ஆசான் என்று அழைக்கப்படும் முதியவருக்கு சந்தேகம். ஊருக்குள் வந்திருக்கும் புதிய நபர் பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அப்போது தங்கள் மலை கிராமத்துக்கு வந்திருக்கும் அந்த புதியவர் சாலையை செப்பனிட வரவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார்.
இதற்கிடையே அந்த புதிய மனிதனின் பார்வையில் பட்ட தேவதர்ஷினி மலை கிராமத்தில் இருந்து வெளியேறி நகருக்கு வந்து தனக்கு ஏற்கனவே அறிமுகமான நர்ஸ் ஒருவரை தேடுகிறார்.
தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து விசாரிக்கும் திலீஷ் போத்தன் யார்?, அவர் தேவதர்ஷினி மற்றும் அவரிடம் இருக்கும் குழந்தை குறித்து விசாரித்ததன் பின்னணி என்ன என்பதை ஊகிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.
எப்போதும் காமெடி எப்பவாவது குணச்சித்திரம் என்று
நடித்து வந்த தேவதர்ஷினி, இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் தன் இருப்பை நிரூபிக்கிறார். குழந்தையை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று தெரிய வந்த நேரத்தில் தொடங்கி அவர் நடிப்பு வேறு லெவல்.
யதார்த்தமான நடிப்பு மூலம் முதல் பாதி படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார் திலீஷ் போத்தன். சாலைப் பணி மேற்பார்வையாளராக அந்த மலை கிராமத்தில் அடி எடுத்து வைக்கும் திலீஷ் போத்தன், எந்த ஒரு காட்சியிலும் நடிக்காமல் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் மௌனம் தான் முதல் பாதி படத்தின் ஜீவனாகவும் மாறி இருக்கிறது.
ஊர்த் தலைவராக நடித்திருக்கும் ஜாபர் இடுக்கி, ஆசானாக வரும் பெரியவர், மீரா வாசுதேவன், ஸ்ருதி ஜெயன் தங்கள் கேரக்டர்கள் மூலம் நம்மோடு ஒன்றி விடுகிறார்கள்.
மலை கிராமத்தின் அழகையும் ஆபத்தையும் ஒரு சேர காட்டி இருக்கிறது அனீஷ் லாலின் கேமரா.
கோபி சுந்தரின் இசையில், மலை கிராம மக்களின் வாழ்வியலை சொல்லும் பாடல் மனதை பிழிந்து எடுக்கிறது.ஒரு மலை கிராமம், அங்கிருக்கும் மாறுபட்ட மனிதர்கள், அங்கு புதிதாக வரும் ஒரு நபர் என்ற பின்னணியில் தொடங்கும் இந்த கதை, தேவதர்ஷினியின் வருகைக்கு பிறகு எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது. வாடகை தாயின் சோகம் வரை மனதை பிழிந்து எடுத்து விடுகிறது
தாமஸ் செபஸ்டியன் இயக்கி இருக்கிறார். ஒரு குழந்தை, மூன்று பெண்களின் பின்னணியில் கதை சொன்ன விதத்தில் படம் சுலபத்தில் வெற்றிக்கோட்டை தொட்டு விடுகிறது. அம்மா என்றால் சும்மா இல்ல!