டிடி ரிட்டர்ன்ஸ் பட விமர்சனம்

கொஞ்சம் முன்னோக்கிப் போவோம்.
1965 காலக்கட்டத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பங்களாவில் ஒரு குடும்பம் மனிதர்களை வைத்து ஒரு விபரீத விளையாட்டை நடத்தி வருகிறது. விளையாட்டில் வென்றால் கட்டிய பணத்திற்கு இணையாக பல மடங்கு பரிசு. தோற்றால் மரணம். இப்படி ஒரு பயங்கரமான விளையாட்டை நடத்தும் அந்த குடும்பத்தை ஒருகட்டத்தில் ஆவேசமான ஊர் மக்கள் அடித்துக் கொன்று விடுகிறார்கள்.
இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம்.
இதே பாண்டிச்சேரியில் பெரும் புள்ளியாக இருக்கும் பெப்சி விஜயனிடம் இருக்கும் பணத்தை பிபின் மற்றும் முனீஷ்காந்த் டீம் கொள்ளையடிக்க, பிபின் டீமிடம் இருந்து மொட்டை ராஜேந்திரன் தலைமையிலான டீம் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறது.
ஆனால் இந்த பணம் தற்செயலாக சந்தானத்தின் கையில் கிடைக்க, பணத்தோடு பயணிக்கும் சந்தானத்தின் நண்பர்கள் விபரீதமான விளையாட்டால் கொலை செய்யப்பட்ட குடும்பம் வசித்த அந்த பங்களாவில் பணத்தை மறைத்து வைக்கிறார்கள்.
இதற்கிடையே, தனது பணம் யாரிடம் இருக்கிறது, என்பதை தெரிந்து கொள்ளும் பெப்ஸி விஜயன், சந்தானத்தின் காதலி சுரபியை கடத்தி வந்து சந்தானத்தை மிரட்டுகிறார். இதனால் அந்த பங்களாவில் இருக்கும் பணத்தை எடுக்க செல்லும் சந்தானம், அங்கிருக்கும் பேய்களிடம் அந்த மரண விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். இதற்கிடையே பணத்தை தேடி அந்த பங்களா வரும் பெப்ஸி விஜயன், பிபின், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட அனைவரும் அந்த பேய் வீட்டில் சிக்கிக் கொண்டு விளையாட்டில் பங்கேற்க வேண்டியதாக…
இறுதியில் அவர்கள் அந்த உயிர்ப் பயண விளையாட்டில் வெற்றி பெற்று உயிருடன் வந்தார்களா? அல்லது தோற்று உயிரை விட்டார்களா? என்பதை கலகல பின்னணியில் சொல்வது தான் இந்த ‘டிடி ரிட்டன்ஸ்’.
ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட கதைப்பின்னணி என்பதால் சந்தானம் அண்ட் கோ கிடைத்த கேப்பில் கூட காமெடியில் தூள் பரத்தி இருக்கிறார்கள். கதாநாயகன் என்றாலும், காதல் காட்சிகள், ஆக்ஷன், பாடல்கள் என அனைத்திலும் நடிப்பில் ரசவாதம் செய்திருக்கிறார், சந்தானம். குறிப்பாக வரும் நேரமெல்லாம் அவர் அடிக்கிற டைமிங் ஜோக்கில் தியேட்டர் தெறிக்கிறது. நாயகியாக சுரபி அளவாக வந்துபோகிறார்.
மாறன், சேது, முனீஷ்காந்த்,மொட்ட ராஜேந்திரன், பிபின், தீனா, கிங்ஸ்லி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கூட சிரிப்பு சிக்சர்களாக விளாசித் தள்ளுகிறார்கள். குறிப்பாக ‘மொட்ட’ ராஜேந்திரன் அணியில் இருக்கும் ‘பழைய ஜோக்’ தங்கதுரை டைமிங்கில் தனி ஆவர்த்தனமே செய்திருக்கிறார்.
சிரிக்க வைக்கும் பேயாக பிரதீப் ராவத், பெரும்புள்ளி பெப்ஸி விஜயன் உள்ளிட்டவர்களும் நடிப்பில் பளிச்.
தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவும், ரோஹித் ஆப்ரஹாமின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் பிரேம் ஆனந்த், அதில் நூறு சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறார். அரசியல்வாதிகளையும், திரை பிரபலங்களையும் நடுநடுவே அவர் செய்திருக்கும் காமெடிக் கலாய் அக் மார்க் ரகம்.
டிடி ரிட்டர்ன்ஸ் மூலமா எங்க சிரிப்பு சந்தானம் முழுசா திரும்பக் கிடைச்சிட்டாருங்கோ.
