டப்பிங் கலைஞர்கள் கலந்து கொண்ட இறகுப்பந்து போட்டி ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கி ஆர்.கே.செல்வமணி வாழ்த்து
டப்பிங் யூனியன் உறுப்பினர்களுக்கான அதன் தலைவர் டத்தோ ராதாரவி தலைமையில் DBL – DUBBING BADMINTON LEAGUE என்ற இறகுப்பந்து போட்டி நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த இந்த போட்டியில் சம்மேளனம் மற்றும் திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி இசையமைப்பாளர் மற்றும் சம்மேளனத்தின் உப தலைவர் தீனா இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
விழாவில் ஆர்.கே.செல்வமணி பேசும்போது இந்த போட்டியை பார்த்து தன்னையும் மறந்து ஆட்டத்தில் லயித்துப் போனதாக கூறினார். வெற்றி தோல்வியைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை ஊக்குவித்ததை பார்ப்பதற்கு கண் கொள்ளாகாட்சியாக இருந்தது. இதுதான் யூனியன் என்பது. ஒரு குடும்பமாக இருப்பது. இன்று நடந்த ஆட்டங்களையும்,உறுப்பினர்களின் உற்சாகத்தையும் ,மகிழ்ச்சியையும் பார்த்தபின் தங்கள் யூனியன்களிலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் சமீபத்தில் டப்பிங் யூனியனின் அலுவலகக் கட்டிடம் மீது மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு காரணம் வெளியாள் அல்ல….யூனியனுக்குள்ளேயே உள்ளவர்களின் துரோகம் தான் காரணம் என்றும் அதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், தன்னுடைய மாறாத ஆதரவு என்றுமே யூனியனுக்குத்தான் என்றும் ராதாரவி மீது விரோதம் இருந்தால் அவருடன் மோத வேண்டும். எத்தனையோ உறுப்பினர்களின் பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட அலுவலகத்தை பாதிப்பதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத துரோகச் செயல் என்றும் கூறியவர், இடித்துக் கட்டவிருக்கும் யூனியன் அலுவலகக்கட்டிடத்தின் செலவிற்கு தன் பங்காக ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிப்பதாக கூறியதும் கூடியிருந்த அனைவரும் பலத்த கரகோஷத்தோடு வரவேற்று கைதட்டினர்.
இசையமைப்பாளர் மற்றும் சம்மேளனத்தின் உபதலைவர் தீனா பேசுகையில், ‘‘இப்படி ஒரு அற்புதமான தலைவர் தான் ஒவ்வொரு யூனியனுக்கும் தேவை. வழக்கமாக ஒரு வீட்டில் துக்க காரியம் நடந்தால் உடனே ஒரு சுபகாரியம் நடத்த வேண்டும் என்று கூறுவார்கள். அதுபோல நம் சம்மேளனத்தில் இணைச்செயலாளராகவும் டப்பிங் யூனியனில் பொருளாளராகவும் இருந்த ஸ்ரீநிவாசமூர்த்தியின் அகால மரணம் நடந்த மூன்றே மாதத்தில் அவரது பெயரிலேயே கோப்பை வைத்து இந்த போட்டியை நீங்கள் நடத்தியது மிகச்சிறப்பானது என்றும் அவர் மேல் நீங்கள் அனைவரும் வைத்துள்ள பாசத்திற்கும் அன்பிற்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு’’ என்றும் நெகிழ்ந்து பேசினார்.
