ஆர்.கண்ணன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘காசே தான் கடவுளடா’. இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில், எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம், 1972 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக் என்பது குறிப்படத்தக்கது.
பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ராஜ் பிரதீப் இசையமைத்துள்ளார்.
மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகி.. இவர்களுடன் யோகிபாபு, கருணாகரன், ஊர்வசி, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குகர் ஆர்.கண்ணன் பேசுகையில், “நான் இயக்கிய ‘தி கிரேட் இந்திய கிச்சன்’ படம் கடந்த மாதம் வெளியான நிலையில், இந்த மாதம் காசேதான் கடவுளடா படம் வெளியாகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு படம் வெளியாவது என்பது சரியான திட்டமிடலால் சாத்தியமாகியிருக்கிறது.
சிவாவால் தான் இந்த படம் உருவானது. அவர் நடிகராவதற்கு முன்பாகவே எனக்கு பழக்கமானவர். அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் திட்டம். அது தள்ளிக்கொண்டே போன நிலையில், கொரோனா காலகட்டத்தில் தான் இந்த படத்தில் நாங்கள் சேர்வது என முடிவானது. அவர் இல்லை என்றால் இந்த படம் இல்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டாளர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அப்போதே படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
இந்த படத்தை நான் தயாரித்த போது எதிர்கொண்ட பிரச்சினைகளை பார்த்த எனது நண்பர்கள், ‘இனி படம் தயாரிக்க வேண்டாம், நாங்கள் தயாரிக்கும் படத்தை இயக்க மட்டும் செய்யுங்கள்’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி. இனி நானும் அவர்கள் சொன்னது போல் தான் செய்யப் போகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “இயக்குநர் கண்ணன் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார். அந்த காலத்தில் ராம.நாராயணன் தொடர்ந்து படங்கள் இயக்கி வெற்றி கண்டார். ஒரே சமயத்தில் மூன்று படங்களின் வேலைகளை அவர் செய்வார், அதற்கு காரணம் சரியான திட்டமிடல். அவரை போலவே கண்ணனும் சரியான திட்டமிடலில் நல்ல படங்களை கொடுத்து வருகிறார். அதே சமயம், தயாரிப்பு என்ற கடுமையான பணியையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார். இந்த உலகத்தில் படம் தயாரிப்பது போல் பெரிய தண்டனை எதுவும் இல்லை. தயாரிப்பாளர் தனது பணத்தை முதலீடு செய்து அனைவருக்கும் வேலை கொடுப்பார், ஆனால் இறுதியில் அவர் ஒன்றுமில்லாமல் தலையில் துண்டை போட்டுக்கொண்டு வீட்டுக்கு போவார். அப்படிப்பட்ட ஒரு பணியை கண்ணன் இனி செய்யக் கூடாது, அவர் படங்களை இயக்க மட்டுமே செய்ய வேண்டும்.
பல வெற்றிப் படங்களை வெளியிட்ட வெளியீட்டாளர் மீனாட்சி சுந்தரம் இந்த படத்திற்கு திரையரங்கங்கள் போட்டுக் கொடுக்கிறார். ‘எல்.கே.ஜி’, ‘கோமாளி’ போன்ற வெற்றிப் படங்களுக்கு அவர் தான் திரையரங்கங்கள் போட்டுக் கொடுத்தார். அந்த படங்களை பார்த்தவுடனேயே மிகப்பெரிய வெற்றி பெறும், என்று கணித்தவர் அவர். அவர் இந்த படத்தையும் பார்த்து இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று முடிவு செய்து தான், படத்தின் வெளியிட்டு பணியை செய்து வருகிறார். அதனால், ‘காசேதான் கடவுளடா’ படம் தலைப்பை போலவே மிகப்பெரிய வெற்றி பெற்று பெரிய வசூலை பெறும்” என்றார்.

படத்தின் நாயகன் மிர்ச்சி சிவா பேசுகையில், ‘‘இந்த படத்தில் நடித்தது அல்ல அனுபவம். நானும் கண்ணனும் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம் அது தற்போது நிறைவேறியுள்ளது. எல்லாப் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள். 1972-ல் வந்த ‘காசேதான் கடவுளடா’ மிகப்பெரிய வெற்றிப் படம். அதை விட மேலாக எங்களால் செய்ய முடியாது, எனவே அந்த படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் உங்களை படம் மகிழ்விக்கும். இந்த சமயத்தில் காசேதான் கடவுளடா படத்தில் நடித்த மூத்த கலைஞர்களிடன் ஆசியை பெற்றுக்கொள்கிறேன்.
ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை இயக்குநர் கண்ணன் மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். அந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகளை தற்போதுள்ள செல்போன் யுகத்தில் எடுப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும், தொழில்நுட்ப வளர்ச்சியில் அதை எப்படி செய்வார்? என்று யோசித்தேன். ஆனால், இயக்குநர் கண்ணன் மிக சிறப்பான திட்டத்தோடு காட்சிகளை படமாக்கினார். நிச்சயம் படம் உங்களை சிரிக்க வைக்கும்.” என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/220297-c3-tile-1649500223.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/03/220297-c3-tile-1649500223-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்ஆர்.கண்ணன் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘காசே தான் கடவுளடா’. இயக்குநர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில், எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம், 1972 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக் என்பது குறிப்படத்தக்கது. பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ராஜ் பிரதீப் இசையமைத்துள்ளார். மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பிரியா ஆனந்த்...