பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அவர்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் உருவாகியுள்ளது ‘நெடுமி’ என்ற திரைப்படம். அறிமுக இயக்குநர் நந்தா லட்சுமணன் இயக்கியுள்ள இப்படத்தை ஹரிஸ்வர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார்.
படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர் முக்தார் அஹமத், இயக்குநர் கேபிள் சங்கர், நடிகர் ராஜசிம்மன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
விழாவில தயாரிப்பாளர் வேல்முருகன் பேசுகையில், ”இதில் ஏதோ நான் ரிஸ்க் எடுத்துப் படம் எடுத்து இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இயக்குநர் தான் பெரியதாக ரிஸ்க் எடுத்துள்ளார். இது ஒரு சவாலான படம்.இந்தப் படத்தை அவர் தனது முதல் படமாக எடுத்திருக்கிறார் என்றால் அது தான் பெரிய ரிஸ்க். இந்தப் படம் நாம் மறந்து விட்ட பல விஷயங்களைப் பேசுகிறது” என்றார்.
படத்தின் இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசுகையில், “இங்கே இருப்பவர்கள் தனித்தனி பெயர்களைக் கொண்டு தனித்தனி ஆட்களாகத் தெரிந்தாலும் நாங்கள் படத்தில் பணியாற்றும் போது ஒன்றாகத் தான் இருந்தோம். அவரவருக்கு என்று வேலைகள் இல்லாமல் அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்தோம். ஒருவரிடம் திறமை இருக்கலாம் அந்த திறமையை அறிமுகப்படுத்தி மேலே உயர்த்துவதற்கு நல்ல நட்பு தேவை. அப்படி எனக்கு அமைந்த நண்பன் தான் டி.வி.வசந்தன். அந்த நண்பன் இல்லாவிட்டால் நான் இங்கு வந்து இருக்க முடியாது. அவன்தான் இந்தப் படத்தின் கலை இயக்குநராகவும் மற்றும் பல வேலைகளையும் பார்த்துக் கொண்டான். அதேபோல எனக்கு என் குடும்பமும் உறவினர்களும் மிகவும் ஆதரவாக இருந்தனர்.

கல்லூரி முடித்து 2017 முதல் என்னால் குடும்பத்திற்கு எந்த வருமானமும் இல்லாத போதும் என்னை நம்பி அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத எங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த எனது மாமா தயாரிப்பாளர் வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் அவர் சொல்வார். அந்த ஊக்கம் அனைவருக்கும் கிடைக்காது. அதேபோல் பனைமரம் சார்ந்த தகவல்களை அளித்த கவிதா காந்தி அவர்களுக்கும் நன்றி” என்றார்.
பத்திரிகையாளர் முக்தார் அகமது பேசுகையில், “விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்தப் படவிழாவில் ஒரு அரசியல்வாதி கூட இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்களும் விவசாயிகள் தான், நாங்களும் தமிழர்கள் தான், நாங்களும் தமிழ்க் கலாச்சாரம் கடைப்பிடிப்பவர்கள் தான் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் சொல்வது ஒன்று, செயலில் ஒன்று என்றுதான் இருப்பார்கள். திருக்குறளைப் போலவே விவசாயிகளையும் செல்வாதிகள் வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நான் என்றும் சொல்வேன் அரசியல்வாதிகளை நம்பாதீர்கள், ஆண்ட கட்சியையும் ஆளுகிற கட்சியையும் கூட நம்பலாம். ஆனால் தனியே நிற்கிறோம் என்று சொல்கிறார்களேஅவர்களை நம்பவே நம்பாதீர்கள். ஏனென்றால் தனியாக இருப்பவர்கள் ரகசிய உடன்பாடு செய்து கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்..தனித்து என்று எவரும் இல்லை அவர்கள் ரகசிய கூட்டணியில் உள்ளார்கள்.அவர்களை நம்பாதீர்கள்.பொங்கல் சமயத்தில் இரண்டு படங்கள் வந்தன, இவ்வளவு வசூல் இவ்வளவு வெற்றி என்று பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படங்களால் தமிழ் மக்களுக்கு என்ன லாபம்? என்ன நல்ல கருத்து பேசி இருக்கிறது? அந்தப் படங்கள் யார் கண்ணீரை துடைத்து இருக்கிறது? பத்திரிகையாளர்கள் என்றும் மக்கள் பிரதிநிதியாக நின்று கேள்வி கேட்க வேண்டும். தொலைக்காட்சி பேட்டிகளை ஒரு காலத்தில் மக்கள் இது நமக்கு சம்பந்தம் இல்லாதது என்று மக்கள் கடந்து போனார்கள். நான் மக்கள் பிரதிநிதியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்த பிறகு தான் மக்கள் அதைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். இவன் நம் சார்பில் நின்று கேள்வி கேட்கிறான் என்று நினைத்தார்கள். பத்திரிகையாளர்கள் ராணுவத்தினர்,காவல்துறையினரைப் போலவே பத்திரிகையாளர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பவர்கள், தங்கள் வீட்டு இன்ப துன்பங்களை மறந்து களத்தில் நிற்பவர்கள். எந்த விழாக் கொண்டாட்டமும் அவர்களுக்குக் கிடையாது. மழையா? வெள்ளமா ?புயலா ? சுனாமியா? எங்கும் களத்தில் நிற்பவர்கள். அந்தப் பத்திரிகையாளர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் படம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிச் சொல்வதால் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “பனை மரத்திற்குத் தமிழ்நாட்டில் பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனை மரத்திற்குண்டு. பனை மரத்தில் தான் ஆண், பெண் என்று இரு வகைகள் உள்ளன. மற்றதெல்லாம் நீரை உறிஞ்சி தான் வாழும். ஆனால் நீரே இல்லாத இடத்தில் கூட பனைமரம் தானாக வளர்ந்து பலன் தரும். பனை மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படும். பனை ஓலை, மரம், பழம், கருப்பட்டி, நுங்கு, கள், பதநீர் என்று எத்தனை பயன்கள்! இப்படிப்பட்ட பனை மரத்தின் சிறப்புகளைப் பேசும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பது மகிழ்ச்சி.

கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும் அவ்வளவு தான். உடலைக் கெடுக்காது. கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால் இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்து விட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம் .அதற்கு ஒரு விலை வைத்துக் கொள்ளுங்கள். உடலை கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

இங்கே முக்தார் பேசும்போது பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் பேசினார். நான் மதிக்கும் பத்திரிகையாளர்கள் பலர் உண்டு. என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள் அவர்கள் தான். ஆனால் அவர்கள் கேள்வி கேட்கும் போது எல்லா கட்சிகளிடமும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருவரிடம் பணிந்து கேட்கிறார்கள், ஒருவரிடம் துணிந்து கேட்கிறார்கள். இந்தப் பேதங்கள் இருக்கக் கூடாது. இதுவா மக்கள் பிரதிநிதிகள் செய்யும் வேலை? மக்கள் பிரதிநிதிகள் என்றால் ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் அனைத்துக் கட்சிகளையும் பார்க்க வேண்டும். ஒரு கட்சியை மட்டும் கட்டம் கட்டி விமர்சிக்கக் கூடாது.
அதே சமயம் இது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட மேடை. இங்கே வந்து அரசியல் பேசக்கூடாது. படத்தைப் பற்றிப் பேசி அதைப் பெருமைப்படுத்தி வாழ்த்த வேண்டும் .அதை விட்டுவிட்டு திசை மாற்றி ,படத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மாற்றி விடக்கூடாது. நாம் அனைவரும் வாழ்த்தவே இங்கு வந்திருக்கிறோம்” என்றார்.

படத்தின் நாயகன் பிரதீப் செல்வராஜ் பேசுகையில், ‘‘முதலில் கதை சொல்லும் போது நான் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. நீதான் நடிக்க வேண்டும் என்றார்கள். ஏனென்றால் இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் பனைமரம் ஏற வேண்டும். என்னால் முடியாது என்று தோன்றியது. ஆனால் 10 நாட்கள் எனக்கு அதற்காகப் பயிற்சி கொடுத்தார்கள்.
இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது தான் சிரமம். இந்ச் சினிமா ஒரு கடல் போன்றது. இங்கே சினிமாவில் பல திமிங்கிலங்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. நாங்கள் இப்போதுதான் மீன் தொட்டியில் இருந்து சினிமாவில் குதித்துள்ளோம்.நாங்களும் திமிங்கிலமாக வளர்வோம்.” என்றார்.
படத்தின் கதாநாயகி அபிநயா பேசும்போது, ‘‘வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அழகாகப் படமாக எடுத்திருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் தான். என்னை முதலில் ஆறோ ஏரியோ தெரியவில்லை.ஒரு நீர் நிலையில் இறக்கி விட்டதும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நான் இரண்டு மாத கைக் குழந்தையுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன். ஒரு கதாநாயகியாக இதைச் சொல்ல எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனென்றால் குடும்ப ஆதரவு எனக்கு அந்தளவுக்கு இருக்கிறது’’ என்றார்.
பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, ‘‘டைரக்டர் பேரரசு ஒரு மேடையில் பேசும்போது பெரிய படங்கள் வெளிவருவதால் சிறிய படங்கள் பாதிக்கப்படுகின்றன என்று கூறினார். அவர் விஜய்யை வைத்துப் பெரிய படங்களை இயக்கியவர். அவரது பேச்சை நாளைக்கு விஜய் கேட்டால் அதுவே அவருக்கு இடையூறாக அமையும் என்பதால், அவர் அப்படி பேசக்கூடாது என்று சொல்கிறேன். இதை அவர் மீது உள்ள அக்கறையால் சொல்கிறேன்.
நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான். அதேபோல் மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர். தான். காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். காதல் இளவரசன் என்றால் அது கமல்ஹாசன் தான். அதேபோல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி ஒருவர் தான். அவருக்கு மட்டுமே அந்த பட்டம் சேரும்.
இப்போது யார் யாரையோ சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள். ஒரு பட்டம் ஒருவருக்குத் தான். அதை எடுத்து ஏன் இன்னொருவருக்குக் கொடுக்க வேண்டும்? இதுவரை கதையைத் திருடினீர்கள். இப்பொழுது பட்டத்தையும் திருடுவீர்களா?’’ என்றார்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/01/044d156f-c3ce-4600-a186-dba09c45205f-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2023/01/044d156f-c3ce-4600-a186-dba09c45205f-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்பல்வேறு பயன்களை தரக்கூடிய பனை மரத்தை நம்பி வாழ்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அவர்களின் அவல நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் உருவாகியுள்ளது ‘நெடுமி’ என்ற திரைப்படம். அறிமுக இயக்குநர் நந்தா லட்சுமணன் இயக்கியுள்ள இப்படத்தை ஹரிஸ்வர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்...